தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் வந்தவன் நான் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் உறுதி!

viduthalai
3 Min Read

நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள்: மன்னிப்பு கேட்க மாட்டேன்

திண்டுக்கல், அக்.22- “நான் சொல்லாததை, சொன்னதாக திரித்து இந்தியாவில் பல நீதிமன்றங்களில் வழக்குப் போட் டுள்ளனர்.
நான் கலைஞரின் பேரன் – எதற்கும் மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்று திண்டுக் கல்லில் நடந்த திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதியின் மேனாள் உறுப்பினர் ஆண்டி அம்பலம் இல்ல திருமண விழா நேற்று (21.10.2024) நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.
விழாவில் அவர் பேசிய தாவது:-

ஒருகாலத்தில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வர உரிமை கிடையாது பள்ளிக்கூடம் சென்று படிப்பதற்கு உரிமை கிடையாது. கணவர் இறந்தால் மனைவியும் இறந்து விட வேண்டும் என்றார்கள்.

இதை எல்லாம் எதிர்த்து தான் தந்தை பெரியார் குரல் கொடுத்தார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் கொடுத்த குரலைதான் நானும் சொன் னேன். ஆனால் நான் சொல் லாததை சொன்னதாக பொய் யாக திரித்து தமிழ்நாடு மட்டு மின்றி இந்தியாவில் பல நீதி மன்றங்களில் என்மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது.

நீதிமன்றத்தில் என்னை மன்னிப்பு கேட்கும்படி கூறினார்கள். நான் சொன்னால் சொன்னதுதான், நான் கலைஞரின் பேரன். எதற்கும் மன்னிப்பு கேட்கமாட்டேன்.

நீதிமன்றங்களில் வழக்குகளை சந்தித்து வருகிறேன். தந்தை பெரியாரின் லட்சியங்களுக்கு அண்ணாவும், கலைஞரும் செயல்வடிவம் கொடுத்தார்கள். பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை என்று இந்தியா விலேயே முதல் முறை யாக தமிழ்நாட்டில் சட்டம் கொண்டு வந்தவர் கலைஞர்.

பெண்களுக்கான திட்டங்கள்

பெரியார். அண்ணா, கலைஞர் ஆகியோரின் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்துக்கு பல்வேறு திட்டங்களை செயல் படுத்துகிறார்.

நமது முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றதும் பெண்கள் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணம் செய்வதற்கு, விடியல் பயணம் திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார். அதன்மூலம் 530 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர். இந்த திட் டத்தை பல மாநிலங்களில் செயல்படுத்த முனைப்பு காட்டுகின்றனர்.

ஹிந்தி திணிப்பு

தமிழ்நாட்டில் எப்படியாவது ஹிந்தியை திணித்து விட வேண்டும் என்று இன்று பலர் பல்வேறு வழிகளில் முயற்சி செய்கின்றனர். அவர்களால் நேரடியாக ஹிந்தியை திணிக்க முடியவில்லை. அதனால் தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் இருந்து சில வார்த்தைகளை நீக்குகின்றனர்.
புதிய கல்வி கொள்கை என்று கூறி ஹிந்தியை திணிக்க முயற்சி செய்கிறார்கள். அதற்கு பலர் துணை போக முயன்றனர். ஆனால் முதலமைச்சரின் செயலால் அனைவரும் மண்ணைக் கவ்வி கொண்டி ருக்கிறார்கள்.

அண்ணா சூட்டிய தமிழ்நாடு எனும் பெயரை மாற்ற ஒருவர் முயற்சி செய்தார். தமிழ்நாடு முழுவதும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மன்னிப்பு கேட்டார். தற்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் திராவிடத்தை நீக்குவதற்கு சிலர் கிளம்பி இருக்கிறார்கள்.
தி.மு.க.வின் கடைசி தொண்டன் இருக்கும் வரை, கடைசி தமிழன் இருக்கும் வரை இங்கு தமிழையும், தமிழ்நாட்டையும், திராவிடத் தையும் யாராலும் எதுவும் செய்ய முடியாது. தொட்டுக்கூட பார்க்க முடியாது. ஹிந்தி திணிப்பை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது. நமது முதலமைச்சரும் அனுமதிக்க மாட்டார்.

சட்டமன்ற தேர்தல்

வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்று தலைவர் கூறியிருக்கிறார். நாம் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க. தலைமையிலான கூட் டணி வெற்றிபெறுவதற்கு பணிகளில் ஈடுபடுவோம்.

– இவ்வாறு அவர் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *