‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ – தாவரங்களுக்குக்கூட உள்ள தனித்துவ அறிவு!

viduthalai
1 Min Read

தாவரங்களின் வளர்ச்சிக்கு ஒளி மிகவும் முக்கியம். சூரிய ஒளியிலிருந்து தான் அவை உணவைத் தயாரிக்கின்றன. ஒரு சிறிய செடியின் அருகில் பெரிய மரமோ பிற தாவரமோ இருந்தால், செடிக்குப் போதுமான ஒளி கிடைக்காது. அப்போது அது ஒளியை நோக்கி நகரும்.
சமீபத்தில் இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக் கழகம் மேற் கொண்ட ஆய்வில் இது தொடர்பான சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளன. விஞ்ஞானிகள் குழு, சூரியகாந்திப் பூக்கள் வளர்கின்ற முறையை ஆய்வு செய்தனர். நெருக்கமாக வளரும்போது ஒரு செடியின் நிழல் மற்றொன்றின் மீது விழும். இதைச் சூரியகாந்திச் செடிகள் புரிந்து கொள் கின்றன. தங்கள் மீது விழுவது தாவரத்தின் நிழலா, கட்டடங்களின் நிழலா என்பதைக் கூட அவற்றால் வேறுபடுத்திக் காண முடியும்.

கட்டட நிழல் தங்களைப் பெரியளவில் பாதிக்காது என்பதும் அவற்றுக்குத் தெரிந் துள்ளது. அதே நேரத்தில் தாவரத்தின் நிழல்பட்டால் வேறு திசைகளில் வளர்கிறது. ஒரு மேடையில் கூட்டமாக ஆடுபவர்கள் எப்படி ஒருவரை ஒருவர் மறைக்காதபடி வரிசைப்படுத்திக் கொள்கிறார்களோ அதுபோல் சூரியகாந்திப் பூக்கள் கூட்டமாக வளரும்போது ஒன்றை ஒன்று மறைத்துக் கொள்ளாமல் சூரிய ஒளி அனைத்துச் செடிகளுக்கும் கிடைக்கும்படி வளர்கின்றன.

இதனால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வளரும் அனைத்துச் செடிகளும் பயன்பெறுகின்றன. ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்றொரு பழமொழி உண்டு. அதற்குத் தாவரங்களும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *