சென்னை, செப்.30- எனது பணியின் மூலம் விமர்சனங்களுக்கு பதில் அளிப்பேன் என்று துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
கலைஞர் நினைவிடத்தில் மரியாதை
தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் – விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக 28.9.2024 அன்று நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதற்கிடையே அவர், சென்னை மெரினாவில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது நினைவிடங்களுக்கு நேற்று (29.9.2024) சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அங்கு அவருக்கு அமைச்சர்கள் பி.கே. சேகர் பாபு, சி.வி.கணேசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகராட்சி மண்டல குழு தலைவர் சேப்பாக்கம் எஸ்.மதன் மோகன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் உதயநிதிஸ்டாலின், கலைஞர் வாழ்ந்த கோபாலபுரம் இல்லம், சி.அய்.டி.நகர் இல்லத்துக்கும் சென்று கலைஞர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவருக்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி கை கொடுத்து வாழ்த்து கூறினார்.
பெரியார் திடலில் அமைந் துள்ள பெரியார் நினைவிடத் துக்கு சென்று உதயநிதி ஸ்டா லின் மரியாதை செலுத்தினார். கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரியன் கார் டன் தெருவில் அமைந்துள்ள மறைந்த தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் இல்லத்துக்கு சென்று அவருடைய உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
வாழ்த்துக்கும், விமர்சனத்துக்கும் நன்றி
முன்னதாக கலைஞர் நினைவிடத்தில், உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் எனக்கு துணை முதலமைச்சர் என்கிற புதிய பொறுப்பை கொடுத்து இருக்கிறார். இது பதவியல்ல – பொறுப்பு என்பதை உணர்ந்து இன்னும் அதிகமாக மக்களுக்கு உழைக்கக்கூடிய வாய்ப்பை எனக்கு வழங்கி இருக்கிறார்.முதலமைச்சர், பொதுச்செயலாளர், மூத்த அமைச்சர்கள், அனைத்து அமைச்சர்கள் வழிகாட்டுத லின் பேரில் எனது பணிகள் அமையும்.
எனக்கு நிறைய பேர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வாழ்த்துகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நிறைய பேர் விமர்சனங்களை வைத்து உள்ளனர். அந்த விமர்சனங்களுக்கும் சேர்த்து நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
ஒவ்வொரு வாழ்த்துகளையும் எப்படி உள்வாங்கி கொள்கிறேனோ, அதேபோன்று விமர்சனங்களையும் உள் வாங்கி கொள்கிறேன். தவறுகள் இருந்தால் திருத்திக்கொள்வேன். தலைவரின் வழிகாட்டுதலின்படி என்னுடைய பணிகள் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.
பணிகள் சிறப்பாக இருக்கும்
நான் தி.மு.க. இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற போதும் விமர்சனங்கள் வந்தது. அதேபோன்று சட்டமன்ற உறுப்பினர் பதவி, அமைச்சர் பொறுப்பு கொடுத்தபோதும் விமர்சனங்கள் வந்தது. எல்லா விமர்சனங்களையும் நான் வரவேற்று உள் வாங்கிக் கொள்கிறேன். அந்த விமர்சனங்களுக்கு பதிலாக என்னுடைய பணிகளை சிறப்பாக அமைத்து கொள்வேன்.
-இவ்வாறு அவர் கூறினார்.