சென்னை, செப். 25– ரயில்வேயில் ‘அப்ரன்டீஸ்’ பயிற்சி முடித்தவர்கள், தங்களுக்கு வேலை கேட்டு, சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று (24.9.2024) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தெற்கு ரயில்வே மற்றும் பெரம்பூர் அய்.சி.எப்., ஆலையில், 2008 முதல் 2023 வரை தொழில் பழகுநர் என கூறப்படும் ‘அப்ரன்டிஷிப்’ பயிற்சி முடித்து, 17,000 பேர் இருக்கின்றனர். இவர்கள் தங்களுக்கு ரயில்வேயில் வேலை வழங்கக் கோரி, தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், 4, 5, 6 நடைமேடைகளில், மக்கள் கூடும் இடங்களில், நேற்று காலையில் 300 பேர் திரண்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, பயிற்சி முடித்தவர்கள் கூறுகையில், ‘இந்திய ரயில்வேயில் 17 மண்டலங்களில் 16இல், பயிற்சி முடித்தவர்களை 2016ஆம் ஆண்டு வரை பணியில் அமர்த்தினர். தெற்கு ரயில்வே மற்றும் அய்.சி.எப்., ஆலையில், வேலை கொடுக்காமல் புறக்கணித்து வருகின்றனர். இதனால், ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு இன்றி உள்ளோம்’ என்றனர்.