கல்வித்துறையை சேர்ந்தவர்களை தவிர கல்விக்கூடங்களில் வெளி நபர்களை அனுமதிக்கக்கூடாது வருகிறது வழிகாட்டும் நெறிமுறைகள்

viduthalai
2 Min Read

சென்னை, செப்.12- தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் கல்வித்துறையைச் சேர்ந்தவர்களை தவிர பள்ளி வளாகத்துக்குள் வெளிநபர்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத் தில் தனியார் பள்ளி ஒன்றில் போலி என்.சி.சி. முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு தற்போது நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் (ஆகஸ்டு) இறுதியில் சென்னையில் அரசுப் பள்ளிகளில் ஆன்மிகம் என்று கூறிக் கொண்டு அடாவடியான மூட நம்பிக்கை சொற்பொழிவாளரின் பேச்சு விவகாரமானது. தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்வுகளை தொடர்ந்து பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கவும் சமீபத்தில் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
அதன்படி, பள்ளிக்கல்வித் துறை சார்பில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் இந்த நெறிமுறைகள் அமல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. அதிலும் குறிப்பாக பள்ளி வளாகத்துக்குள் கல்வித்துறை சாராத வெளி நபர்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது என்பது உள்பட பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் இடம்பெறும் வகையில் நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வருவதற்கு முன்னதாகவே, பள்ளி வளாகத்துக்குள் வெளிநபரை அனுமதிக் கக்கூடாது என்ற உத்தரவை பின்பற்ற அனைத்து பள்ளிகளுக்கும், கல்வித் துறை வாய்மொழி உத்தரவாக பிறப்பித்து இருக்கிறது.

இந்த உத்தரவின் தொடர்ச்சியாக பள்ளிகளில் கல்வித்துறை மற்றும் பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்களை தவிர வேறு யாரும் இருந்தால் அவர்களை வெளியேறச் சொல்லி பள்ளி நிர்வா கங்கள் அறிவுறுத்தி வருகின்றன. இந்த உத்தரவின் நடவடிக்கையாக, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஒரு சுற்றறிக்கையை பள்ளிகளுக்கு அனுப்பி யுள்ளார். அதில், ‘அங்காடிகள், சிற்றுண்டி கடைகள், எழுது பொருள் அங்காடிகள் போன்ற எந்த அங்காடிகளும் பள்ளி வளாகத்துக்குள் செயல்படக்கூடாது, அப்படி இருந்தால் அதனை உடனே அகற்றிடவேண்டும், இல்லையென்றால் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

அங்காடிகள், சிற்றுண்டி கடைகளை கல்வித்துறையோ, பள்ளி நிர்வாகங்களோ நடத்துவது இல்லை. வெளிநபர்களுக்கு அனுமதி வழங்கி அங்காடிகள் அமைக்கப்படுகிறது. அந்தவகையில் வெளிநபர்களை பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்கக்கூடாது என்ற வழிகாட்டு நெறிமுறைகளை இப்போதே பள்ளிகள் செயல்படுத்த தொடங்கிவிட்டன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *