தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் போராட்டம் வெற்றி!

Viduthalai
1 Min Read

வளசரவாக்கத்தில் இயங்கிவரும் கோலிக்கிரஸ் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்குக் கைப்பேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அந்தப் பள்ளியில் நமது கழகத் தோழரின் குழந்தையும் படிக்கிறார். அக்குறுஞ்செய்தியில், ‘‘குழந்தைகளின் தாத்தா, பாட்டி இருவரும் இன்று (11.9.2024) பள்ளிக்கு வரவேண்டும்; அவர்களுக்கு அவர்களின் பேரக் குழந்தைகள் ‘பாத பூஜை’ செய்வார்கள்’’ என்ற செய்தி வந்தவுடன், நமது கழகத் தோழரும், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, விருகை செல்வம், சுப்பிரமணி ஆகியோர் கலந்து பேசி, உடனடியாக காவல்துறைக்கும் புகார் ஒன்றை இணைய வழியில் கொடுத்தனர்.

புகார் கொடுத்த ஒரு மணி நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியவுடன், அந்தப் பள்ளி ஆசிரியர், தொலைப்பேசியில் நமது கழகத் தோழரைத் தொடர்பு கொண்டு, ‘‘நீங்கள் தயவுசெய்து போராட்டம் செய்ய வேண்டாம்; நாங்கள் குழந்தைகள் நடத்தும் ‘பாத பூஜை’யை நிறுத்தி விடுகிறோம்’’ என்று சொன்னார்.

ஒரு மணி நேரத்தில் அந்தப் பள்ளியில் படிக்கும் அனைத்துக் குழந்தைகளின் பெற்றோரின் கைப்பேசிக்கு, ‘‘நாளை பாதபூஜையை நிறுத்தி விட்டோம்’’ என்ற குறுஞ்செய்தியை ஆசிரியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். எல்லா குழந்தைகளின் வீட்டுக்கு மட்டும் அல்ல, நமது கழகத் தோழருக்கும் அந்தக் குறுஞ்செய்தி வந்தது.
தோழர்களே, நாம் எப்போதும் விழிப்புடன் இருந்து பள்ளியில் மூட நம்பிக்கையை பரப்பும் நிகழ்வுகளை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த மூட நம்பிக்கை நிகழ்வு நமது தோழர்களின் முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டது!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *