மதமாற்றம் குறித்து பரவும் வதந்தி தமிழ்நாடு அரசு விளக்கம்

Viduthalai
1 Min Read

சென்னை, செப்.5– நீலகிரியில் மதம் மாற மறுத்ததால் பெண் கொலை என பரவும் தகவல் வதந்தி என தமிழ்நாடு அரசின் தகவல் சரி பார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

கைப்பேசி மற்றும் இணையதள பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கமாக சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் உறுதிப் படுத்தப்படாத, அதிகாரப் பூர்வமற்ற தகவல்களையும் சிலர் தெரிந்தோ, தெரியாமலோ பகிர்ந்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் சமூக ஊடகங்களில் பரவி மக்களின் நிம்மதியை சீர்குலைக்கும் போலியான தகவல்களை கண்டறிந்து அதற்கு கடிவா ளம் போடவும், மக்களுக்கு அது பற்றிய உண்மை நிலையை தெரிவிக்கவும் எக்ஸ். இன்ஸ்டாகிராம் மற்றும்பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் என்ற கணக்கை அதிகாரப் பூர்வமாக தொடங்கி நடத்தி வருகிறது. அதில், அந்த செய்திபற்றி அலசி, ஆராய்ந்து தமிழ்நாடு அரசு விளக்கத்தை தெரிவித்து வருகிறது.

மத மாற்றம் இல்லை

இந்த நிலையில், நீலகிரியில் மதம் மாற மறுத்த இந்து பெண் யாஷிகாவை சோற்றில் சயனைட் வைத்து மாமியார் படுகொலை செய்ததாக தொலைக்காட்சி செய்தியின் காணொலியுடன் ஒருதகவல் வாட்ஸ்-அப் உள்பட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது முற்றிலும் பொய்யான தகவல் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் யாஷிகா அல்ல. ஆஷிகா பர்வீன். இவர் ஊட்டியை சேர்ந்த அப்துல் சமது-நிலோபர் நிசா தம்பதியின் மகள். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இரு மதங்கள் சம்பந்தப்படவில்லை. மத மாற்றம் இல்லை. மத வெறுப்பை தூண்டாதீர்கள். வதந்தியை பரப்பாதீர்கள் என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *