பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் தொழில் தொடங்க திராவிட அரசு உதவி

viduthalai
3 Min Read

சேலம், ஆக.29- பிற்படுத் தப்பட்ட வகுப்பினர், மிக வும் பிற்படுத்தப்பட்ட வகுப் பினர், சிறுபான்மையினர், சீர் மரபினர் இனத்தை சேர்ந்த வகுப்பினர்களுக்கு நவீன சலவையகம் அமைப்பதற்கு மானியம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்:

தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத் தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் இனத்தை சார்ந்த வகுப்பினர்களின் பொருளாதாரத்தை முன்னேற் றும் விதமாக நவீன சலவையகம் அமைக்க தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

நவீன சலவையகம் அமைப்ப தற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையன நிதியில் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கு விண்ணப் பிக்க 10 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும். இக்குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் மிகாமல் இருத்தல் வேண்டும்.

மேற்படி திட்டம் மூலம் பயன்பெற விரும்புபவர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விவசாயிகள், ஆடு வளர்ப்போர், உள்ளிட்டோருக் கும் தமிழ்நாடு அரசு பல்வேறு மானியங்களை கொடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழ் நாடு அரசின் தோட்டக் கலைத் துறை சார்பில் பீர்க்கங்காய், புடலங்காய், பாகற்காய், சுரைக்காய், அவரைக்காய் போன்ற கொடி காய்கறிகளை பந்தல் போட்டு சாகுபடி செய்யலாம். இதற்கான நிதி யுதவி வழங்கப்படுகிறது. தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இந்த பந்தல் அமைக்க மானியம் வழங்கி வருகிறது.

இந்த மானியத்தை பெற விரும்பும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் பயனடைய வேண்டும் என்றால் விவசாயிகள் சிட்டா, அடங்கல், வரைப்படம், விஏஓ சான்று, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வங்கிப் புத்தகம் ஆகிய சான்றுகளின் அசல், நகல்களுடன் தோட்டக் கலைத் துறை அலுவலகத்திற்கு சென்று மானியம் பெற்றுக் கொள்ளலாம்.

அது போல் ஆடு வாங்கவும் மானியம் கொடுக்கப்படுகிறது. 2022 – 2023ஆம் நிதியாண்டு இரண்டாவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் நீடித்த நிலையான வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் எனும் தலைப்பில் பயிர் சாகுபடியுடன், கறவை மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, நாட்டுக் கோழிகள், தீவன பயிர்கள், மரப் பயிர்கள், தேனீ வளர்ப்பு, மண் புழு உரத் தயாரிப்பு, ஊட்டச்சத்து காய்கறித் தோட் டம் போன்ற வேளாண் தொடர்பான பணிகளையும் சேர்த்து மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் ஒரு தொகுப்பிற்கு 50 ஆயிரம் ரூபாய் மானியம் வீதம் 13 ஆயிரம் ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் பயிர் சாகுபடியுடன் வேளாண் சார்ந்த அனைத்து வகையான பணிகளையும் 1 லட்சம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பண்ணைய செயல்விளக்கம் அமைப்பதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
அதாவது ஊடு பயிர் அல்லது வரப்பு பயிர் சாகுபடிக்கு ரூ.5 ஆயிரம், கறவை மாடு அல்லது எருமை மாடு ஒன்று வாங்குவதற்கு ரூ.15 ஆயிரம், 10 ஆடுகள் வாங்குவதற்கு ரூ 15 ஆயிரம் வழங்கப்படுகிறது.

மேலும் 10 கோழிகள் வாங்க ரூ 3000, இரு தேனீ பெட்டிகள் வாங்க ரூ 3,200, கால் நடைகளுக்குத் தேவையான பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதற்காக 10 சென்ட் பரப்பில் தீவன பயிர்கள் சாகுபடி செய்வதற்கு ரூ 800 என 50 சதவீத மானியமாக ரூ 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், வேளாண் துறையினர் பெற்று பயனடையலாம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *