மாணவர்கள் பற்றிய விவரங்களைப் பெற்றோர் அறிய நவீன அம்சங்களுடன் செயலி தமிழ்நாட்டில் அறிமுகமாகிறது

viduthalai
3 Min Read

சென்னை, ஆக. 25- பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் மாணவர்களின் வருகைப் பதிவு, தேர்வு முடிவுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெற்றோர் அறிந்துகொள்ள உதவும் செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அலைபேசி செயலி

பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் அலைபேசி செயலி ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 22.8.2024 அன்று தெரிவித்து இருந்தார்.

இந்த அலைபேசி செயலியில் பெற்றோர், ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழகம் என 3 விதமான “லாக்-இன்” கொடுக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சுமார் 60 ஆயிரம் அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் ஒரு கோடியே 30 லட்சம் மாணவ -மாணவிகளின் விவரங்கள் இந்த செயலியில் இடம்பெற செய்யப்பட்டு இருக்கிறது.
பெற்றோர் லாக்-இன்னில் மாணவர்களின் வருகைப் பதிவு, வகுப்பு தேர்வு, காலாண்டு, அரையாண்டு, ஆண்டு இறுதித் தேர்வு முடிவுகளை நேரடியாக சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம். இனிமேல் மாணவர்கள் பெற்றோரிடம் பொய் சொல்ல முடியாது.

மேலும் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியை தேர்வு செய்து அதன் விவரங்களையும், சமீபத்தில் அந்த பள்ளியில் நடந்த நிகழ்வுகள், பள்ளி சாதித்த நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும்.
அதுமட்டுமல்லாமல், பெற்றோர் ஏதேனும் புகார் தெரிவிக்க விரும்பி னாலும் அதில் தெரிவிக்கலாம். அதன் உண்மைத் தன்மை அறிந்து விரைந்து தீர்வு காணப்பட்டு, அந்த தகவல்களும் பெற்றோருக்கு தெரிவிக்கப்படும்.

மேலும் பெற்றோர் தங்களுடைய அறிவுப் படைப்புகள், கைவினை படைப்புகளையும் காட்சிப் பதிவுகளாக இந்த செயலியில் பதிவேற்றம் செய்யலாம்.

அதேபோல், ஆசிரியர்களுக்கான லாக்கினில், ஆசிரியர்கள் தங்களுடைய படைப்புகள், திறன்களை வெளிக் கொணர முடியும். பாடத் திட்டங்களை எளிதாக மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் நடத்துவது எப்படி? என்பது தொடர்பாக காட்சிப் பதிவுகளை பதிவிட் டால். அது சரியான முறையாக இருந்தால், அனைவரும் பார்க்கும் வகையில் பகிரப் பட்டு, அதனை பயன்படுத்தவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையிலும் ஆசிரியர்கள் பேசி காட்சிப் பதிவுகளை பகிரலாம். தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் இந்த வசதி செய்யப்பட்டிருக்கிறது.

விரைவில் அறிமுகம்

அடுத்தபடியாக பெற்றோர் – ஆசிரியர் கழகம் லாக்கினில், அனைத்து பள்ளி களிலும் உள்ள பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் விவரங்கள், செயல்பாடுகளை தெரிந்து கொள்ளமுடியும்.

பள்ளிகளுக்கு நன்கொடை வழங் கியவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுடைய விவரங்களும், இதுவரை பள்ளிகளுக்கு அவர்கள் செய்த உதவிகள் குறித்தும் இந்த செயலியில் இடம்பெற செய்யப்பட இருக்கிறது. மேலும் நன் கொடையாளர்கள் பள்ளிக்கு நிதியுதவி அளிக்க விரும்பினால், அந்த பள்ளியை தொடர்பு கொள்ளும் வகையில் தலைமை ஆசிரியரின் அலைபேசி எண், பள்ளி இருக்கும் பகுதிகளை காட்டும் ‘மேப்’ ஆகியவையும் உட்புகுத்தப்பட்டு உள்ளன.

இதுதவிர மேனாள் மாணவர்கள் தங்களை பதிவு செய்து கொண்டு, தாங்கள் படித்த பள்ளியின் விவரங் களையும் தெரிந்துகொள்ளலாம்.மொத்தத்தில் நவீன அம்சங்களுடன், அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், மாணவர்களின் கற்றலை மேம்படுத்தவும், மாணவர்களின் நலனை பெற்றோர் அறிந்து கொள்ளவும், ஆசிரியர்களின் வேலைகளை எளிதாக்கவும் இந்த செயலி மேம்படுத்தப்பட்டு வருகிறது.

விரைவில் முதலமைச்சர் ஒப்புதல் பெறப்பட்டு, அறிமுகம் செய்யப்பட உள்ளது என்றும், இந்த செயலி கல்வியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *