இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் : ராமேசுவரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு

Viduthalai
1 Min Read

ராமேசுவரம், ஆக.21 ராமேசு வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் (19.8.2024) 220 விசைப்படகுகளில் மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்றனர். மாலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 10க்கும் மேற்பட்ட சிறிய ரக ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகளை நோக்கி சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் படகின் கண்ணாடி உடைந்து சிதறியதால் மீனவர்கள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து, கடற்படை ரோந்து கப்பலை கொண்டு மீனவர்களின் படகுகள் மீது முட்டி மோதும் வகையில் வந்து வலைகளை வெட்டி கடலில் வீசி விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் மீன் பிடிப்பதை விட்டு விட்டு, மீனவர்கள் படகுகளை வேறு பக்கம் கொண்டு சென்றனர்.

தொடர்ந்து இரவில் ரோந்து மேற்கொண்ட இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இலங்கை கடற்படையின் அத்துமீறலால், கடற்பகுதியில் மீனவர்களிடையே பெரும் அச்சமும், பதற்றமும் ஏற்பட்டது. இதனால் நேற்று (20.8.2024) காலை ராமேசுவரம் கரை திரும்பிய ஏராளமான படகுகளில் மீன்வரத்து திருப்தியாக இல்லை. படகுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நட்டம் ஏற்பட்டது‌.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *