மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாவது மாநிலமாக வளர்ச்சி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

Viduthalai
3 Min Read

காஞ்சிபுரம், ஆக.18 இந்திய அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே உள்ள வல்லம் வடகால் பகுதியில் கட்டப்பட்டுள்ள மகளிர் தங்கும் விடுதிக்கான கட்டடத்தை அவர் நேற்று (17.8.2024) திறந்து வைத்துப் பேசியதாவது:

ஃபாக்ஸ்கான் நிறுவனம் சிப்காட் ஆகியவை இணைந்து காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகால் பகுதியில் மகளிர் தங்கும் விடுதிகளை உருவாக்கியுள்ளனர். இந்த நிறுவனத்தில் 41 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் 35 ஆயிரம் பேர் பெண்கள். ஆண்களுக்குப் பெண்கள் சரிநிகர் சமானம் என்று நிலையை தாண்டி, பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை இந்த நிறுவனம் கொடுத்துள்ளது. தற்போது பணி செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிப்காட் நிறுவனத்துடன் இணைந்து ரூ.706.5 கோடி மதிப்பில் மகளிர் தங்கும் விடுதிகளை உருவாக்கியுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவு பெண்கள் பணிக்குச் செல்கின்றனர்.

தொழில் வளர்ச்சிக்கான…
கடந்த 2021 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தோம். தொழிற்சாலைகள் மற்றும் சிப்காட் அமைப்பதற்கான நிலங்கள் கண்டறியும் பணி நடைபெற்றது. பல்வேறு தொழில் பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. 40 ஆயிரம் ஏக்கர் நிலம் கண்டறிய இலக்கு வைக்கப்பட்டு 41,000 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டது. இதில் 12,500 ஏக்கர் நிலம் சிப்காட் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிப்காட் நிறுவனம் மூலம் இருங்காட்டுகோட்டை, திருப்பெரும்புதூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் ஆகிய இடங்களில் 3 தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது. இந்த வசதிகளை நன்றாக பயன்படுத்திக் கொள்வதோடு, மகளிர் தங்கள் சொந்த குடியிருப்புகளைப்போல் கவனமாக பராமரிக்க வேண்டும்.

ஒரு டிரில்லியன்
வரும் 2030 ஆம் ஆண்டுக்குள், ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்று லட்சிய இலக்கை நிர்ணயித்திருக்கிறேன். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சிறப்பான செயல்பாடுகள், அந்த இலக்கை நாம் விரைவாக எட்டுவோம் என்று நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. இந்திய அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா, ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யாங் லீயு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஜி.செல்வம், கூடுதல் தலைமைச் செயலாளர்கள் முருகானந்தம், அருண்ராய், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

18,720 பேர் தங்கலாம்
இந்த மகளிர் தங்கும் விடுதிகள் ரூ.706.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன. இந்த விடுதியில் 18,720 பேர் தங்க முடியும். இந்தவளாகமானது, சுமார் 22.48 லட்சம் சதுர அடி பரப்பிலான இடத்தில் தரைத்தளம் மற்றும் 10 அடுக்குமாடி கட்டடமாக 20 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 13 பிரிவுகளைக் கொண்டது. ஒவ்வொரு பிரிவிலும் 1,440 பேர் தங்கும் வகையில் 240 அறைகள் அமைந்துள்ளன. குடிநீர், தடையற்ற மின்சாரம், நவீன தீய ணைப்பு வசதிகள், உட்புறச் சாலைகள், தெரு விளக்குகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் 39 மின்தூக்கிகள் மற்றும் ஒவ்வொரு பிரிவிலும் தலா ஒரு ஜெனரேட்டர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர சமையலறை, உணவுக்கூடம், திறந்தவெளி பொழுதுபோக்கு மய்யத்துடன் கூடிய வண்ண மலர்செடிகள், மரங்கள், செயற்கை நீரூற்று அமைப்புகள் அமைக்கப்பட உள்ளன.

இந்தத் திட்டத்துக்கு இந்தியன் ஸ்டேட் வங்கியின் சார்பில் ரூ.498 கோடி நிதியுதவியும், ஒன்றிய அரசின் சார்பில் ரூ.37.44 கோடி நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தங்கும் விடுதிக் கட்டடமானது, ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் உள்ள பெண் பணியாளர்கள் தங்குவதற்காக அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளியூரில் இருந்து வந்து இங்கு தங்கி பணியாற்றும் பெண்களுக்கு இந்த விடுதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *