சென்னை, ஆக.15- மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்துக்கு மாற்றுத் திறனாளிகள், வரும் 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம், என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே 13.8.2024 அன்று வெளியிட்ட அறி விப்பு:
தென் சென்னை எல்லையில், 18 வயதிலிருந்து 60 வயதிற்கு உட்பட்ட செவித்திறன் பாதிக்கப்பட்ட, கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் 75% மேல் பாதிக்கப்பட்ட மன வளர்ச்சி குன்றிய தாய்மார்கள் மற்றும் மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத் தின் கீழ், தையல் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நேர் காணல் தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யும் பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது.
இதற்கு, மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் யுடிஅய்டி அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். இரு கைகளும் நல்ல நிலையில் உள்ள கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள், மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள், 75% மேல் உள்ள மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளின் தாயாக இருத்தல் வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பு 18 முதல் 60 வரை ஆகும். தையல் பயிற்சி பயின்றதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும். தென் சென்னையை சார்ந்த தகுதி உடைய மாற்றுத் திறனாளிகள் வருகிற 19ஆம் தேதிக்குள் இ-சேவை மய்யம் வாயிலாக https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணைப்பில் மாற்றுத்திறனாளிகள் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.
-இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.