“தகைசால் தமிழர்” ஆசிரியருக்கு விருது!

Viduthalai
2 Min Read

அரசியல்

போர்க்கருவி மொழியைப்
பொலிவோடு காக்கும் தமிழர்க்கு 

திராவிட மக்களைத் தீண்டிடும்
தீங்கினை நீக்கும் காவலர்க்கு 

சமூக நீதியை நாட்டிட
சட்டம் யாத்திடும் அறிஞர்க்கு 

நச்சினைக் கக்கும் ஆரிய
மூச்சினை அடக்கும் வீரர்க்கு 

விடுதலை பிறக்கத் தடை நிற்கும்
வேர்ப்பகை வீழ்த்தும் நாயகர்க்கு 

தமிழ்நாடு அரசு வழங்கும்
“தகைசால் தமிழர்” விருது
தமிழர் தலைவர் வீரமணியார்க்கு!

– முனைவர் அதிரடி அன்பழகன்

கிராமப் பிரச்சாரக்குழு அமைப்பாளர்

திராவிடர் கழகம்

———————————–

வசதிகள்
வாய்ப்புகள்
கிட்டத் தினம்
உழைக்கும்
மனிதருண்டு

கிடைத்த
வாய்ப்பைத்
தொண்டிற்காய்
ஒத்தி வைத்தோர்
யாருண்டு? 

மலைக்கும்
கல்வியறிவை
தன் பெண்டு
தன் பிள்ளையெனக்
குறுகிய வட்டத்திற்குப்
பயன்படுத்தும்
மனிதருண்டு

இனத்தின் மீட்சிக்கெனப்
பயன்படுத்துவோர்
யாருண்டு? 

அமைதி சூழல்
இனிய குடும்பமென
வாழும் மனிதருண்டு

கொள்கைக் குடும்பமே
தன் குடும்பமென
ஏற்று வாழ்வோர்
எவருண்டு?

ஒவ்வொரு நொடியும்
தந்தை பெரியார்
காட்டிய வழியில்
பயணிக்கும்
ஆசிரியருண்டு

ஒழிந்தார் பெரியார்
நிலமும் ஆட்சியும் இனி
நமதே என எண்ணிய
நூல்களின்
மனவோட்டத்தை
அறுத்தெறிந்த
ஆசிரியருண்டு

அவாள்களின் ஆதிக்கத்தைப்
பாடையேற்றியதால்
உயிருடனிருக்கும் போதே
பாடைக் கட்டித் தூக்கியதே
காகப்பட்டர் துடுப்புகள்
எத்தனை வன்மம்
இருந்திருக்க வேண்டும்

வன்மங்கள் வாலாட்ட
முடியாது கடமை
வீரனிடம் என
உணர்த்திய தலைவருக்கு
தகைசால் தமிழர் விருது

தலைமையேற்கச்
சூத்திரனுக்கு
உரிமை உண்டென
சமூக நீதி கண்டு
இன்றும்
போராடும் ஆசிரியருக்கு
தகைசால் தமிழர் விருது

தமிழர்க்குத் தரணிதோறும்
வெல்ல துறைகளுண்டு
அந்தப் பாதையைச்
செப்பனிடும் ஆசிரியருக்கு
தகைசால் தமிழர் விருது

விருது வெற்றி
முழக்கமிடுகின்றது
தன்னைத் தீண்டும்
கரங்களின்
உன்னத
தொண்டைப் போற்றி! 

 – ம.வீ. கனிமொழி

————————————–

“தகைசால் தமிழர்” இவர்தாம்

தொண்டு செய்து பழுத்த பழத்தின்

தொடர்ச்சியாய் தமிழர் இழி பிணிகளைத்

துடைக்கும் நற் பெருந் தொண்டராய்

தன்மானப் பெரும் படையின் தளபதியாய்

பகை மடியும் சொல் அம்புகளால்

நகை மலரும் தம் எழுத்துகளால்

புகை ஒழித்து ஒளி விளக்கும்

வகை யறிந்த வல்ல தூயராய்

இந்நாடு என்றும் பெரியார் மண்

பன்னாட்டு பெரியார் மயம் என

அன்றாடம் உலகெல்லாம் பகுத்தறிவுப்

பொன் னொளி பாய்ச்சிடும் உடுக்காய்

தம் வாழ்வு என்றேதும் இல்லாது

தொய் வற்ற தொண்டறமாக வாழும்

தமிழர் தலைவரின் தோள் துண்டும்

தந்தையின் தொண்டின் உயர் காட்டாய்

தகை சால் தமிழர் இவர்தாம்

மிகையல்ல தக்கார் தரும் தக்கதே

விடுதலை நாளில் விருதுபெறும் மெய்

‘விடுதலை’ ஆசிரியர் நலமுடன் வாழ்கவே.

– நன்னன் குடியிலிருந்து அவ்வை 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *