கோவை, ஆக. 11- கோவை, ஆத்துப் பாலம் முதல் உக்கடம் சந்திப்பு மற்றும் ஒப்பணக்கார வீதி வரை ரூ.481 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.41.57 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் ஆகிய வற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 9.8.2024 அன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற விழாவில், ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு மற்றும் ஒப்பணக் கார வீதி வரை ரூ.481 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.41.57 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உயிரி அறிவியல் மற்றும் சமூக அறிவியல் துறைக் கட்டடங்களை திறந்து வைத்தார்.
கோவையில் உக்கடம் பகுதியானது உட்கட்டமைப்பு மேம்பாட்டுடன் கூடிய வேகமாக வளர்ந்து வரும் பகுதியாகும். சிறுவாணி, பேரூர், பாலக் காடு மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனப் போக்குவரத்துகள் கோவை நகருக்குள் உள்ள ஒப்பணக்காரவீதி செல்வதற்கு உக்கடம் பகுதியை கடந்து செல்ல வேண்டும்.
இதனால் உக்கடம் சந்திப்பில் திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் பல மணிநேரம் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, உரிய இடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறது. இதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரை மேம்பாலம் கட்டப்படும் என்று அறிவித்தது.
அதன்படி, கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்காரவீதி வரை உயர் மேம்பாலம் கட்ட 481 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு தற்போது முடிவுற்றுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 9.8.2024 அன்று ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு மற்றும் ஒப்பணக்கார வீதி வரை கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார்.
இந்த மேம்பாலமானது, 125 தூண்கள் மற்றும் 107 கண்கள் (Spans) கொண்ட நான்கு வழிப் போக்குவரத்து செல்லக்கூடிய 3.80 கி.மீ நீளமுள்ள மேம்பாலமாகும். உக்கடம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஏறுதளம் வழியாக பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி பகுதிகளுக்குச் செல்லக்கூடிய வாக னங்கள் எவ்விதப் போக்குவரத்து தடை யுமின்றி செல்லவும், பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு பகுதிகளில் இருந்து வரக் கூடிய வாகனங்கள் அப்பகுதிகளின் அமைக்கப்பட்டுள்ள ஏறுதளம் வழி யாக உக்கடம், செல்வபுரம் மற்றும் ஒப்பணக் கார வீதிகளுக்குச் செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பாரதியார் பல்கலைக்கழகத் தில் உயிரி அறிவியல் (Life Sciences) துறை மற்றும் சமூக அறிவியல் (Social Sciences) துறைகளுக்காக தலா 90,210 சதுரடி பரப்பளவில் மொத்தம் 41 கோடியே 57 இலட்சத்து 81 ஆயிரம் ரூபாய் செல வில் கட்டப்பட்டுள்ள தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட ஆறு கட்டடங் களை முதலமைச்சர் அவர்கள் 9.8.2024 அன்று திறந்து வைத்தார்.
அக்கட்டடங்களில் தாவரவியல், ஆடை வடிவமைப்பு துறை, இளநிலை அறிவியல் கலப்புப் பாடத்திட்டத் துறை, வணிகவியல் துறை, சமூகவியல் துறை, உளவியல் துறை, தொழில்நுட்பக் கல்வியியல் துறை, சமூகவியல் மற்றும் மக்கள் தொகை ஆய்வுகள் துறை ஆகிய துறைகளுக்கான வகுப்பறைகள், ஆய் வகங்கள், கூட்டத் அரங்குகள், நூலகங்கள், அலுவலக அறைகள், துறை தலைவர் அறைகள் போன்றவை அமைக்கப்பட் டுள்ளன.
இவ்விழாவில், உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சு.முத்துசாமி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பி.கீதா ஜீவன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் ஆர்.ரங்கநாயகி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணபதி ராஜ்குமார், கே.ஈஸ்வரசாமி, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் ஜெயசிறீ முரளீதரன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைச் செயலாளர் டாக்டர் ஆர்.செல்வராஜ், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.