இயக்க மகளிர் சந்திப்பு (25) 38 வயதில் இராமர் படத்தை எரித்த கமலம்மாள்!-வி.சி.வில்வம்

viduthalai
7 Min Read

உலகில் நாத்திக இயக்கத்திற்கு, ஒரு பெண் தலைவராக இருந்தார் என்றால், அது திராவிடர் கழகத்தில் தான்! பிறந்த பெண் குழந்தைகள் முதல் பெரும் வயது மகளிர் வரை நாத்திகராக இருப்பதும் இதே இயக்கத்தில் தான்! நாத்திகம் என்பது அறிவு, நாத்திகம் என்பது அறிவியல், நாத்திகம் என்பது போராட்டம், புரட்சி, அது ஓர் வாழ்வியல் முறை!
அப்படியான ஒரு நாத்திக இயக்கத்தின் தலைவராக இருந்தவர் தான் அன்னை மணியம்மையார்! இறந்து 46 ஆண்டுகள் ஆன நிலையிலும், இன்றைக்கும் சமூகத்தின் பேசு பொருளாக இருக்கிறார்! அப்படியெனில் எப்பேற்பட்ட சரித்திர வாழ்வை அவர் வாழ்ந்திருக்க வேண்டும்! முத்தாய்ப்பாக 1974 ஆம் ஆண்டு இறுதியில், இராமன் படத்தை எரித்து, இந்தியாவையே கலங்கடித்தவர்! அப்படியான அந்தப் புரட்சி அன்னையின் அருகில் இருந்து, இன்றைக்கு நமக்குப் பெருமை சேர்ப்பவர் தான் திருப்பத்தூரில் வசிக்கும் கமலம்மாள் அவர்கள்! இயக்க மகளிரின் 25ஆவது சந்திப்பு இது!

அம்மா வணக்கம்! இராமர் படத்தை எரித்த போது நீங்களும் அருகில் இருந்தீர்களா?

ஆமாம்! சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற, இராவண லீலா நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றேன். அன்னை மணியம்மையார் அவர்களின் பின்னால் நானும் நின்றிருந்தேன். திடல் முழுக்கக் கூட்டம். இப்போது நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது. அவ்வளவு உணர்ச்சி கரமான போராட்டம். இறுதியாக அன்னை மணியம்மையார் அவர்கள் இராமன் படத்திற்கு நெருப்பு வைத்தார்கள். அதுசமயம் பின்னால் நின்ற என்னையும் அழைத்து தீ வைக்கச் சொன்னார்கள். என் வாழ்வில் மறக்கவே முடியாத நிகழ்ச்சி அது! மணியம்மையார் அவர்களுடன் நின்றிருந்த ஒளிப்படத்தை வெளியிட்டு, ‘உண்மை’ இதழில் அப்போது கட்டுரையும் வெளிவந்தது.
அதேபோன்று பெரியார் அவர்கள் மறைந்த அன்று, மணியம்மையார் அவர்களுடன் கூடவே இருந்து, இறுதி நிகழ்வுகள் முடிந்த பிறகே இல்லம் திரும்பினேன். ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டம்‌ என மணியம்மையார் அவர்களுடன் 25 க்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் பங்கெடுத்திருப்பேன்.
தற்போது உங்களுக்கு

என்ன வயது இருக்கும் அம்மா?

1936 ஆம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம், மங்களபள்ளி கிராமத்தில் பிறந்தேன். இப்போது 88 வயது ஆகிறது.‌ 5ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். அப்பா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தவர்கள்.‌ திருமணத்திற்குப் பிறகே பெரியார் கொள்கையை முழுவதுமாக அறிந்தேன். எனது இணையர் பெயர் கே.கே.சின்னராசு. முரட்டுச் சுயமரியாதைக்காரர் எனப் பெயரெடுத்தவர். சோலையார்பேட்டை நகரத் தி.க தலைவராக இருந்தவர். திருப்பத்தூர் மாவட்டத் தலைவராக இருக்கும் கே.சி.எழிலரசன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் விஜயா ஆகியோர் எங்கள் பிள்ளைகள் ஆவர். மாநில மகளிரணி பொருளாளராக மருமகள் அகிலா, மாநில இளைஞரணி துணைச் செயலாளராக பேரன் சி.ஏ.சிற்றரசன், மாவட்ட மகளிர் பாசறை செயலாளராக பேத்தி சபரிதா ஆகியோர் இப்போது செயல்பட்டு வருகின்றனர். மூன்று தலைமுறையாகக் கொள்கையில் இருந்து வருகிறோம்.

தந்தை பெரியார் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்?

தந்தை பெரியாரைப் பலமுறை சந்தித்துள்ளேன். அவர் தலைமையில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்கள், பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளேன். பெரியார் திடலில் பெண்ணுரிமைக் கருத்துகளைப் பேசியது இப்போதும் நினைவில் இருக்கிறது. ஏராளமான மகளிர் அங்கு இருந்தோம். எங்களைப் பார்த்து, “நீங்கள் எல்லாம் நகை மாட்டும் ஸ்டாண்டா? மூக்கில், கழுத்தில், காதில் மாட்டிக் கொள்கிறீர்களே? அவற்றையெல்லாம் விட்டுவிடுங்கள். ஆண்களைப் போல பேண்ட், சட்டை அணிந்து கொள்ளுங்கள், முடியை கிராப் வெட்டிக் கொள்ளுங்கள்”, என்று பேசினார். அந்தப் பேச்சு எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. எனினும் பின்னாளில் நகை அணிவதைக் குறைத்துக் கொண்டேன். தொடர்ந்து பெரியாரின் பேச்சுகள், என் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தின.‌ அதன் பயன்களை என்றென்றும் மறக்கமாட்டேன்.

தந்தை பெரியாரின் தனித்தன்மையாக, நீங்கள் கண்ட காட்சிகள் ஏதும் இருக்கிறதா?

தந்தை பெரியார் எவ்வளவு உயர்ந்த மனிதர், பிறரை எவ்வளவு மதிப்பார் என்பதெல்லாம் அனைவரும் அறிந்ததே. என் வாழ்நாளில் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவமும் இருக்கிறது. அப்போது சோலையார் பேட்டையின் பொறுப்பாளராக இருந்தவர் அய்யா பார்த்தசாரதி அவர்கள். தந்தை பெரியார் திருப்பத்தூர் பகுதிக்கு வந்தால், அவர் வீட்டில்தான் தங்குவார். அப்படி ஒருமுறை அவர் இல்லத்திற்குத் திடீரென பெரியார் செல்கிறார். ஆனால் வீடு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. தோழர்கள் என்ன செய்வதென்று தெரியாது திகைத்த போது, பெரியார் திண்ணையில் அமைதியாக அமர்ந்துவிட்டார்.

சிறிது நேரத்தில் பார்த்தசாரதி யதார்த்தமாய் வெளியே வந்தார். வாயிலில் பெரியார் அமர்ந்திருந்ததைப் பார்த்து பதறிப் போனார். “அய்யா இங்கே ஏன் இருக்கிறீர்கள், என்னை அழைத்திருக்கலாமே எனப் படபடத்துப் போனார். “பரவாயில்லை, நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கலாம், எதற்குச் சிரமப்படுத்த வேண்டும்?”, எனப் பெரியார் பதிலளித்தார். பிறரின் தூக்கத்தைக் கூட தம் சிந்தையில் கொண்ட மாமனிதர் பெரியார். ஆனால் அதே மனிதர் தான் மூடநம்பிக்கையால் தூங்கிக் கொண்டிருந்தவர்களை, தம் கைத்தடியால் தட்டி எழுப்பினார். இந்த நிகழ்வில் வரும் இதே பார்த்தசாரதி அவர்கள் சொன்னதின் பேரில்தான், ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த வரதராஜன் அவர்களை, பெரியார் உச்சநீதிமன்ற நீதிபதியாக அமர ஏற்பாடு செய்தார்.

தங்கள் இணையர் குறித்துக் கொஞ்சம் சொல்லுங்கள்?

முன்பே சொன்னதைப் போல அவரை “முரட்டுச் சுயமரியாதைக்காரர்” என்றே அழைப்பார்கள். ஒரு நிகழ்ச்சியையும் விடமாட்டார். நானும் அவர் கூடவே செல்வேன். கொள்கையை அறிமுகம் செய்து வைத்து, இன்று வரை இயக்கக் குடும்பமாய் தொடர்வதற்கு அவர் தந்த அடித்தளமே காரணம். 1994 ஆம் ஆண்டு என் இணையர் மறைந்துவிட்டார். அதன் பிறகு சோலையார்பேட்டையில் கே.கே.சி. நினைவு மாளிகை நிறுவி, ஆசிரியரிடம் இயக்கத்திற்காகத் தங்கம் வழங்கினோம்.

இணையருக்குப் பிறகு மகன் எழிலரசன் மாவட்டத் தலைவராக இருந்து, மிகச் சிறப்பாக செய்து வருகிறார். ஆசிரியர் அவர்கள் ஒரு நிகழ்ச்சியை அறிவித்து விட்டால், அதைப் பிரமாண்டமாக செய்து காட்டுவார். சில மாதங்களுக்கு முன்பு கூட, ஆசிரியர் அவர்களுக்கு எடைக்கு எடைப் பணம் கொடுத்து, அதை விடுதலை சந்தாவாக வழங்கினார். ஆசிரியருடன் சிறையிலும் இருந்திருக்கிறார். திருப்பத்தூர் மாவட்டத்தை அவர் உயிரோட்டமாக வைத்திருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

பிள்ளைகளின் திருமணம் குறித்துக் கூறுங்கள்?

எங்கள் மகள் விஜயா திருமணத்தை ஆசிரியரை வைத்துதான் நடத்த வேண்டும் என இருந்தோம். அதுசமயம் மிசாவில் கைதாகி, ஆசிரியர் சிறையில் இருந்தார்கள். இந்நிலையில் திருமணத் தேதியும் முடிவானது. மிக நல்வாய்ப்பாகச் சில தினங்களுக்கு முன்பே ஆசிரியர் விடுதலையாகி, எங்கள் மகள் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.‌ அதேபோன்று எனது மகன் கே.சி.எழிலரசன் திருமணமும் ஆசிரியர் தலைமையில் தான் நடைபெற்றது. 1991 ஆம் ஆண்டு இருதய அறுவைச் சிகிச்சை முடிந்த நிலையில் நடைபெற்ற முதல் திருமணம் ஆகும்.

தாங்கள் வகித்த பொறுப்புகள், சிறை மற்றும் இயக்க அனுபவங்கள் குறித்துக் கூறுங்கள்?

1995ஆம் ஆண்டு மாவட்ட மகளிரணி தலைவர் பொறுப்பில் இருந்தேன். சிறையைப் பொறுத்தவரை காலையில் கைதாகி, மாலையில் விடுதலை செய்யும் போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளேன். தவிர பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம், அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் போராட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளேன். மாநாட்டுப் பந்தல் எரிக்கப்பட்ட ஆற்காடு மாநாடு, 1995இல் லக்னோவில் நடந்த பெரியார் மேளா உள்ளிட்ட பெரிய நிகழ்வுகளில் பெரும்பாலும் பங்கேற்றுள்ளேன்.

குறிப்பாகத் தர்மபுரியில் நடந்த ஒரு மாநாட்டிற்கு 30 தோழர்கள் இணைந்து, 3 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டோம். மாநாட்டை விளம்பரம் செய்யும் பொருட்டு, வழிநெடுக பிரச்சாரம் செய்து கொண்டே போனோம். மாநாட்டுத் திடலில் மேள, தாளத்துடன் எங்களை வரவேற்றனர். பெரியார் அய்யாவும் எங்களைப் பாராட்டிச் சிறப்பு செய்தார். பெரியார் மறைந்த போது இராஜாஜி மண்டபத்தில் இருந்து நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் எங்கள் குடும்பம், ஏடிஜி குடும்பம், ஜோலார்பேட்டை பெருமாள் குடும்பம், நரசிம்மன் குடும்பம், குயில்தாசன் குடும்பம் என அனைவரும் பெரியார் திடல் வரை ஊர்வலமாகச் சென்றது மனதைவிட்டு அகலாத நினைவு!

ஆசிரியர் அவர்கள் குறித்த, தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்?

தந்தை பெரியார், அன்னை மணியம்மையாருக்குப் பிறகு ஆசிரியர் அவர்களின் கொள்கை உறவு மேலும் வலுப்பெற்றது. மோகனா அம்மா அவர்கள் ஒரு சகோதரியைப் போல பழகுவார்கள். எங்கள் நட்பு ஆழமானது, உரிமையோடு பேசுவார்கள். ஆசிரியர் அய்யா வீட்டிற்கு வந்தால் ஆட்டுக்கால் பாயா, இட்லி, சேமியா, புதினா சட்னி, நுங்கு போன்ற உணவுகளை விரும்பிச் சாப்பிடுவார்கள். இப்போதும் நான் ஆட்டுக்கால் பாயா சாப்பிட்டால் ஆசிரியர் நினைவுதான் வரும்.

தந்தை பெரியார் காலத்தில் இருந்து இருக்கிறீர்கள், தற்போது இயக்கம்
எப்படி செயல்படுகிறது?

தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு இயக்கத்தையும், தோழர்களையும் தாயுள்ளத்தோடு அரவணைத்து, சமூக முன்னேற்றத்திற்காகக் கடுமையாக உழைக்கிறார். எனக்கு 88 வயது ஆகிறது. நடப்பதற்குச் சிரமப்படுகிறேன். ஆனால் முன்பு எப்படி பார்த்தேனோ அதே வேகம், அதே சுறுசுறுப்பில் ஆசிரியரைப் பார்க்கிறேன், வியப்புதான் மேலிடுகிறது!

நம்மால் முன்பு போல பணி செய்ய முடியவில்லையே என்கிற ஏக்கம் இருக்கிறது. அதேநேரம் வீட்டில் ஏதாவது கலந்துரையாடல் கூட்டம் என்றால், கருப்புச் சேலை கட்டி அமர்ந்துவிடுவேன். விடுதலை 90 ஆம் ஆண்டு விழாவையொட்டி, எனக்குத் தெரிந்தவர்களிடம் தொலைப்பேசி செய்து, சந்தா பிடித்துக் கொடுத்தேன்.

உடல் உறுப்புகள் பழுதாகி வருவதாக நினைக்கிறேன். அதேநேரம் இந்தச் சமூகத்தை ஊனமாக்காமல் காத்த பெருமை தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், ஆசிரியர் போன்றோர்களுக்கு உண்டு. மேலும் கவிஞர் கலி.பூங்குன்றன், என் இணையர் கே.கே.சின்னராசு, என் பிள்ளைகளோடு போராட்ட களத்தில் நின்று போராடிய நினைவுகள் தொடர்கிறது!

நான் மறைந்தாலும் இந்த இயக்கத்தில் என் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் ஆசிரியருக்குத் துணையாக இருந்து சிறப்பாகச் செயல்படுவார்கள்,” எனக் கமலாம்மாள் தம் உள்ளக்கிடக்கை வெளிப்படுத்தினார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *