அதிர்ச்சியில் பாஜக!
ராஞ்சி, ஜூலை 29 ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் 11 இடங்களில் போட்டியிட இருப்பதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் அய்க்கிய ஜனதா தளம் (ஜேடியூ) அறிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ்- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு மாற்றுக் கட்சியாக பாஜக இருக்கும் நிலையில், அய்க்கிய ஜனதா தளமும் அம்மாநிலத்தில் கால் பதிக்க முயற்சிப்பதை பாஜக தலைவர்களால் ஏற்க முடியவில்லையாம். ஆனாலும், ஒன்றியத்தில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு அய்க்கிய ஜனதா தளத்தின் ஆதரவு தேவை என்பதால், அக்கட்சித் தலைவர்கள் நிதிஷ்குமாரை விமர்சிக்க முடியாமல் தத்தளிப்பதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது. மொத்தம் 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும்பான்மைக்குத் தேவை 41 இடங்கள்.
2019 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 இடங்களிலும் பாஜக 26 , காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் வென்றன. இதனையடுத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. தற்போது முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார்.
ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெறும் நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ், லாலுவின் ஆர்ஜேடி மற்றும் இடதுசாரிகள் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளன. பாஜக தவிர தேசியவாத காங்கிரஸ், ஜார்க்கண்ட் மாணவர் யூனியன், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா, மஜ்லிஸ் கட்சி உள்ளிட்டவையும் களத்தில் உள்ளன.
இந்நிலையில் ஜார்க்கண்ட் அரசியலில் நிதிஷ்குமாரின் அய்க்கிய ஜனதா தளம் (ஜேடியூ) வலுவாக கால் பதிக்க முடிவு செய்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 11 இடங்களில் போட்டியிடுவது என ஜேடியூ முடிவு செய்துள்ளது.
ஜேடியூவின் தன்னிச்சையான இந்த முடிவை வெளிப்படையாக பாஜக வரவேற்பதாக தெரிவித்திருக்கிறது. ஆனால், ஜேடியூவால் 11 தொகுதிகளில் வெல்ல முடியாது என்பது கள நிலவரம் என்கிற போது எஞ்சிய தொகுதிகளில் போட்டியிட்டு ஆட்சியை எப்படி கைப்பற்ற முடியும்? என்கிற கோபத்தில் இருக்கிறதாம் பாஜக.
அதேநேரத்தில் ஒன்றியத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஜேடியூ ஆதரவு தேவை என்பதால், அக்கட்சியின் இந்த முடிவை வெளிப்படையாக விமர்சிக்கவும் முடியவில்லையாம்.
உள்ளே அழுது கொண்டே வெளியே சிரிக்கத்தான் முடிகிறது என்கிற விரக்தியைத்தான் ஜார்க்கண்ட் பாஜக தலைவர்கள் வெளிப்படுத்துகின்றனர் என்கின்றன ஊடக செய்திகள்.