அரசு அலுவலகங்க ளிலோ, அலுவலக வளா கத்தின் உள்ளாகவோ, எந்த ஒரு மதம் சார்ந்த கோயில்களோ, கடவுள் படங்களும், பூஜை புனஸ்காரங்களும் பக்தி பஜனைகளோ இருக்கக் கூடாது என அரசு ஆணை 7553/66-2 இருக்கிறது.
சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை 17.3.2010 தீர்ப்புகளை பிறப்பித்தும், இது போன்ற அதிகாரிகளுக்கு குட்டும் வைத்துள்ளது. ஏன் பல வழிபாட்டு தலங்கள் அகற்றப்பட்டுள்ளன.
இருந்தும் கூட அரசு துறையைச் சேர்ந்த அலு வலர்களோ, அதில் பணியாற்றும் பணியாளர்களோ அதை நடைமுறைப்படுத்துவதில்லை. மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்யவேண்டிய அலுவலகத்தில், அனைத்து தரப்பு மக்களாலும் வரி செலுத்தப்பட்டு அனைத்து தரப்பு மக்களுக்காகவும் செயல்படும் இடமாக இருக்க வேண்டிய தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பேரூராட்சி அலுவலகம் இன்று ஒரு மத தொடர்புடைய பக்தி பஜனை மடமாக மாறி உள்ளது. இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கம்பைநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் அரசு விதிகளை குப்பைத் தொட்டியில் வீசி எறிந்து விட்டு அரசு ஆணைகளையும், நீதிமன்ற ஆணைகளையும் அவமதித்துவிட்டு வேப்பமரம் பெண் என்றும், அரசமரம் ஆண் என்றும் கருதி மஞ்சள் நிறத்தில் வேட்டியும், சிவப்பு நிறத்தில் புடவையும் கட்டி பூஜை செய்கிறார்கள். அலுவலகத்தில் உள்ளவர்கள் செய்யும் வேலையாக மட்டுமில்லாமல், இது பொதுமக்களும் வந்து வழிபடக்கூடிய இடமாக இந்த அலுவலகம் மாறி உள்ளது.
காலப்போக்கில் கம்பைநல்லூர் பேரூராட்சி அலுவல கமாக இல்லாமல் பக்தி வளர்க்கும் பஜனை மடமாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. மக்களுக்காகப் பணியாற்றும் அரசு துறை அலுவலர்கள், பேரூராட்சி தலைவர்கள் இதை கண்டும் காணாமல் இருப்பது வருத்தத்துக்குரியது, வேதனைக்குரியது.
அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்வதை நிறுத்திவிட்டு அரசு கொண்டுவரும் பல அரிய நல்ல திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று மக்களுக்கு பணியாற்றினால் அதுவே வளர்ச்சிக்கு வழிகாட்டும்!
எனவே, தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் இதன்மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அரசு அலுவலகத்தில் பக்தி, பஜனைக்கு காரணமாக இருக்கும் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.