இந்நாள்- வைக்கம் போராட்டம் – 2ஆம் முறையாக தந்தை பெரியார் சிறை

Viduthalai
3 Min Read

தந்தை பெரியார் இரண்டாம் முறையாக மாவட்ட மாஜிஸ்டிரேட்டின் உத்தரவை மீறி நடந்ததற்காக விசாரிக்கப்பட்டு 18 ஜூலை 1924 அன்று, நான்கு மாதக் கடுங்காவல் விதிக்கப்பட்டார். பெரியார் வேண்டுமென்றே பிடிவாதமாகச் சட்டத்தையும் உத்தரவையும் மீறி நடந்துள்ளார் என்று மாஜிஸ்டிரேட் தெரிவித்தார். அதுபோல நடப்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் தடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. முன்பு உபாயமான தண்டனை விதித்து நடத்தையைத் திருத்தப் பார்த்தும் பயன் கிடைக்காததால் இப்போது கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பில் குறிப்பிட்டார். சிறையிலிருந்து ஜூன் 21இல் விடுதலையான பெரியார் ஒரு மாதம்கூட வெளியில் இல்லை. அடுத்த 27ஆவது நாளில் (ஜூலை 19ஆம் தேதி) மீண்டும் சிறைப்படுத்தப்பட்டார்.

19 ஜூலை 1924 அன்று கோட்டயம் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவார்; அங்கு ஒரு மாதம் இருந்த பின்பு திருவனந்தபுரம் மத்திய சிறைக்கு அனுப்பப் படுவார் என்று பத்திரிகைகள் எழுதின (‘தி இந்து’, 21 ஜூலை 1924; சுதேசமித்திரன், 22 ஜூலை 1924).
பெரியார் சிறை சென்றபிறகு இராஜாஜி வெளியிட்ட இரண்டாவது அறிக்கையில் சிறையில் பெரியார் நடத்தப்படும் முறை குறித்து தன் கண்டனத்தை வெளியிட்டார். அதனால் பயன் ஒன்றுமில்லை எனினும், பெரியாரின் சமூக மதிப்பை உலகமும் அரசாங்கமும் அறிந்துகொண்டன. அந்த அறிக்கையிலிருந்து சில வரிகள்:
“தற்போது திருவனந்தபுரம் மத்திய சிறையில் சத்தியாகிரக கைதியாய் இருக்கும் இ.வி. ராமசாமி நாயக்கர் உணவு, தங்குமிடம் போன்ற விஷயங்களில் சாதாரண தண்டனைக் கைதியாக நடத்தப்படுவதாக நம்பகமான தகவல்கள் எனக்கு வருகின்றன. சிறை உடையை அவர் அணிகிறார்; இரும்பு விலங்குகள் போடப்பட்டிருக்கிறார்; தனிமைச் சிறையில் மற்ற சத்தியாகிரகச் சிறைவாசிகளிலிருந்து ரொம்ப தூரத்தில் வைக்கப்பட்டிருக்கிறார் என்றும் தெரிகிறது. இவ்வளவுக்குப் பிறகும் நாயக்கர் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அவருடன் நன்றாகப் பழகியிருக்கிறேன். அவருடன் பல காலம் சேர்ந்து வாழ்ந்திருக்கிறேன்; எனக்கு அவரைத் தெரியும். அவர் ஒரு தளர்வுறாத ஆன்மா. செல்வ வளத்தின் மகிழ்ச்சிகளையும் பதவிகளையும் வெறுத்து ஒதுக்கித் தள்ளிவிட்டு கடினமான இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்து வந்துள்ளார். பெரும்பாலான நம்மைப்போல அல்ல உண்மையிலேயே. தம்மைத் தூய்மைப்படுத்தும் இந்தச் செயல்களை அவர் வரவேற்கிறவர். எனவே பெரிதும் நாம் வருந்த வேண்டியதில்லை’’ என்கிறார் ராஜாஜி.

சிறையில் தந்தை பெரியாருக்கு
விதிக்கப்பட்ட தண்டனை எத்தகையது?
“கால்களில் விலங்குச் சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் ஒரு குல்லாய், முழங்காலுக்குக் கீழே தொங்குகின்ற ஒரு வேட்டி, கழுத்தில் கைதி எண் குறிக்கப்பட்ட ஒரு மரப்பட்டை. இவற்றோடு ஈ.வெ. ராமசாமி கொலைக்காரர்களோடும். கொள்ளைக்காரர் களோடும் வேலை செய்து கொண்டிருக்கின்றார். தண்டனை அடைந்த ஒரு சாதாரணக் கைதி எவ்வளவு ஒரு நாளைக்கு வேலை செய்வானோ, அது போல் இருமடங்கு வேலை செய்கிறார்.
ஒரு “சாதி இந்து” என்று சொல்லக்கூடிய நிலையிலே உள்ள ஒருவர் கேரளத்திலுள்ள தீண்டத்தகாத மக்களுக்கு உரிமை வாங்கிக் கொடுப்பதற்காக செய்த தியாகம் நமக்குப் புதுவாழ்வு தந்திருக்கிறது. இந்தப் பெரிய உன்னத இலட்சியத்திற்காக அவர் அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறார்.

ஈ.வெ.ரா அவர்களுக்கு இருக்கக்கூடிய நாட்டுப்பற்று, உற்சாகம். அனுபவம், பெருந்தன்மை. பெரும் பக்குவம் இவைகளெல்லாம் உடைய இன்னொருவரை இந்த நாட்டிலே அந்த அளவுக்குக் காணமுடியுமா?இந்த மாநிலத்து மக்கள் அனுபவிக்கிற கொடுமையை நீக்க வேண்டும் என்பதற்காகத்தான் எவ்வளவு கஷ்ட நஷ்டங்களை வேண்டுமானாலும் ஏற்கலாம் என்று சொல்லி ஒரு தலைவர் வந்தாரே – அதைப் பார்த்து இந்த மாநில மக்களாக இருக்கிற யாருக்குமே வெட்கமேற்படவில்லையா? கேரளத்தின் முதிர்ந்த அனுபவமிக்க தலைவர்கள் தங்கள் சாய்வு நாற்காலியைத் தூக்கியெறிந்து விட்டு தங்கள் பங்கைச் செலுத்த இப்போதாவது வர வேண்டாமா?

– கே.பி. கேசவமேனன்
மலையாளத்தில் தன் வரலாறு, பக்கம் 108

இந்நாள்
சென்னை மாநிலம் ‘தமிழ்நாடு’ என்று முதலமைச்சர் அண்ணாவால் பெயர் மாற்றம் பெற்ற நாள் (1967).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *