செந்தில் பாலாஜிமீதான வழக்கை இழுத்தடிப்பது ஏன்? மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

viduthalai
1 Min Read

சென்னை, ஜூன்.27– மேனாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை 4 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஆண்டுஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட் டார். அவருக்கு எதிராக சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பிணை கோரி செந்தில் பாலாஜி “தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பிணை வழங்க மறுத்ததுடன், வழக்கை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கவேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. ஆனால், இந்த வழக்கு விசாரணை இன்னும் தொடங்கவில்லை.

இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்து முடிக்க மேலும் 4 மாதம் அவகாசம் வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி மனு தாக்கல் செய்தார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், “செந்தில்பாலாஜிமீதான வழக்கை 3மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று இந்த உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த மறுநாள், வேறு ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம், இதுபோல விசாரணை நீதிமன்றத்துக்கு கால வரம்பு நிர்ணயிக்க கூடாது என்று தீர்ப்பு அளித்துள்ளது” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நீதிபதி, ‘உச்ச நீதிமன்ற உத்தரவை நானும் மதிக்கிறேன். அதேநேரம், விசாரணையை இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொருமுறையும் புதிது புதிதாக செந்தில்பாலாஜி தரப்பில் மனுக்களை தாக்கல் செய்யாமல், விரைவாக விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவை தனக்கு சாதகமானதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. வழக்கை இழுத்து அடிக்கக்கூடாது’ என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *