தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கருநாடகா மறுப்பு காவிரி மேலாண்மை ஆணையம் தடுமாறுவது ஏன்?

Viduthalai
2 Min Read

பெங்களூரு, ஜூன் 26 ஜூன், ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை திறந்தவிட கருநாடக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் காவிரி மேலாண்மை ஆணையத்தால் முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 31-ஆவது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டில்லியில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு அரசின் சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருநாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

அப்போது தமிழ்நாடு அரசின் தரப்பில், “தற்போது மேட்டூர் அணையில் 12.490 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளது. குடிநீர் தேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தினமும் 1,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள 4 அணைகளிலும் 27.490 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளது. அங்கு தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் ஜூன் 24-ஆம் தேதிவரை 4 அணைகளுக்கும் 7.236 டிஎம்சி நீர் வந்துள்ளது.
இந்நிலையில், காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி, கருநாடக அரசு ஜூன் 24-ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு 7.352 டிஎம்சி நீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் 24––-ஆம் தேதி வரை 1.985 டிஎம்சி நீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது. இன்னும் 5.367 டிஎம்சி நீர் நிலுவையில் உள்ளது. இதேபோல ஜூலை மாதத்தில் கருநாடகா 31.24 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும்.

கருநாடக அரசு முறையாக காவிரி நீரை திறந்துவிடாததால் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப் பட்டுள்ளது. எனவே ஜூன், ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.
இதற்கு கர்நாடக அரசின் தரப்பில், “கருநாடகாவில் கடந்த ஒருமாதமாக பரவலாக‌ மழை பெய்துவருகிறது. கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளிலும் போதிய அளவுக்கு நீர் நிரம்பவில்லை. தற்போது இருப்பில் உள்ள நீரைக் கொண்டே பெங்களூருவின் குடிநீர்தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. தமிழ்நாட்டிற்கு நீரை திறந்துவிட்டால் கருநாட காவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். தற்போதைய சூழலில் தமிழ்நாட்டிற்கு நீரை திறந்துவிட இயலாது” என தெரிவிக்கப்பட்டது

இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், “உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி ஜூன் மாதத்தில் நிலுவையில் உள்ள 5.367 டிஎம்சி நீரையும், ஜூலைமாதத்தின் 31.24 டிஎம்சி நீரையும் தமிழ்நாட்டிற்கு வழங்குவதை கருநாடக அரசு உறுதி செய்ய வேண்டும். இரு மாநிலங்களின் நீர் இருப்பு மற்றும் தேவை குறித்து இரு மாநில அதிகாரிகளையும் கலந்து ஆலோசித்துவிட்டு முடிவை அறிவிக்கிறேன்” எனக்கூறி, கூட்டத்தை ஒத்திவைத்தார்.
இதனிடையே தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்க கருநா டகா மறுப்பதால், காவிரி மேலாண்மை ஆணையத்தால் முடிவை எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எஸ்.கே.ஹல்தர்நேற்று (25.6.2024) இரவு 8 மணி வரை, இந்த கூட்டத்தின் முடிவை அறிவிக்கவில்லை. இதனால் தமிழ்நாடு அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *