சென்னை, ஆக.26 மக்களவைத் தேர்தலுக்காக மாவட்டந்தோறும் தெருமுனைக்கூட்டங்களை நடத்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுக்குழுக் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று (25.8.2023) நடைபெற்றது. இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் லெனின் பிரசாத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லுவரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தார்.
தொடர்ந்து, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: வரும் 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் அனைத்துத் தொகுதி களிலும் வெற்றி பெற இளைஞர் காங்கிரஸ் சார்பில் வழிகாட்டுதல் மற்றும் ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்படும். அடுத்த பிரதமர் ராகுல் காந்தி என்பதை இந்தக் குழு முழுமனதாக ஆதரிக்கிறது. அதற்காக முழு ஒத்துழைப்பை இந்தக் குழு வழங்கும்.
சிறப்புப் பயிற்சி: மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள மாவட்டந்தோறும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்த சிறப்புத் திட்டம் உருவாக்கப்படும். சட்டப்பேரவை வாரியாக சிறந்த பேச்சாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் சமூக வலைதளத்தை முறையாக பயன்படுத்த சிறப்புப் பயிற்சி வழங்கப்படும். `சூப்பர் சக்திஷீ’ திட்டத்தின்கீழ் சட்டப்பேரவை வாரியாக அதிக பெண்கள் கட்சியில் சேர்க்கப்படுவர் என்பன உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.