சட்டமன்றத்தில் நாகரிகமாக நடக்காமல் அமளி செய்தால் கடுமையான நடவடிக்கை – பேரவைத் தலைவர் மு.அப்பாவு எச்சரிக்கை

Viduthalai
1 Min Read

சென்னை, ஜூன் 23 கேள்வி நேரம் முடிந்த பிறகு, எந்த பிரச்சினையை எழுப்பினாலும் அனுமதி தருகிறோம்” என பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

பேரவைத் தலைவர் வேண்டுகோளை ஏற்காமல் அதிமுகவினர் தொடர்ந்து குரல் எழுப்புவதால் பேரவையில் அமளி ஏற்பட்டுள்ளது. கேள்வி நேரத்தை ஒத்திவைக்க முடியாது என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு திட்டவட்டமாக தெரிவித்தார். அதிமுக உறுப்பினர்களின் பேச்சுகள் எதுவும் அவைக் குறிப்பில் இடம்பெறாது என்றும் தெரிவித்தார்.

அமைதியாக இருக்கையில் அமருமாறு பேரவைத் தலைவர் மு.அப்பாவு மீண்டும் வேண்டுகோள் விடுத்தார். அதிமுக உறுப்பினர்கள் தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியை சட்டமன்றத்தில் வெளிப்படுத்தக் கூடாது. சட்டமன்ற அவை விதிகளுக்கு உட்பட்டே அவையை வழிநடத்த முடியும். அதிமுகவினர் அவையை புறக்கணிப்பதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

விஷச் சாராயம் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 21.6.2024 அன்று பேரவை கூட்டத்தை புறக்கணித்த அதிமுகவினர் நேற்றும் (22.6.2024) அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென அதிமுகவினர் கோரிக்கை வைத்தனர். கேள்வி நேரம் முடிந்த பிறகு எந்த பிரச்சனையை எழுப்பினாலும் அனுமதி தருவதாக பேரவைத் தலைவர் மு. அப்பாவு உறுதியளித்தும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

பேரவைத் தலைவர் அனுமதி அளிக்காத நிலையில் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவைத் தலைவர் எச்சரிக்கை விடுத்தார். சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பு செய்த நிலையில் கேள்வி நேரம் நடைபெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *