குன்னத்தூர், ஜூன் 18- ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் பெரியார் மருத்துவக் குழுமம் இணைந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் 16.06.2024 அன்று காலை 9.30 மணியளவில் குன்னத்தூர் கலிமங்களம் கிராமத்தில் நடைபெற்றது.
இம்மருத்துவ முகாமிற்கு குன்னத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மா. செந்தில் குமார் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ். மருதையா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்கள் பயன் பெறும் வகையில் இம்மருத்துவ முகாமினை சிறப்பாக ஏற்பாடு செய்த ஹர்ஷமித்ரா மருத்துவமனைக்கும். பெரியார் மருத்துவக் குழுமத்திற்கும் ஊர்ப் பொதுமக்களின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர். .
ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்று நோய் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும். புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவருமான மருத்துவர் க. கோவிந்தராஜ், புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மருத்துவர் சசிபிரியா கோவிந்தராஜ் மற்றும் மருத்துவர் சுகிர்தா ஆகியோர் தலைமையில் ரூபாய் 5000/- மதிப்புள்ள புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.
மேலும் தொடர்ந்து நடைபெற்ற பொதுமருத்துவ முகாமில் பொது மக்களுக்கு பெரியார் மருத்துவக் குழுமத்தின் மூலம் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கினர்.
இம்மருத்துவ முகாமில் 110 பேர் பொது மருத்துவ முகாமிலும். மார்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையில் 45 பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனையின் ரேடியோ கதிரியக்க தொழில்நுட்பநர் எஸ். ஸ்டீபன் ராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் சிவ அருணாச்சலம், பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் க.அ.ச. முகமது ஷபீஃக் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் அ. ஜெசிமா பேகம் ஆகியோர் இம்மருத்துவ முகாமினை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.