வெற்றியை பெற்று செல்வத்தை அடைவோரின் மதிப்பீடு எதில்? (2)

Viduthalai
3 Min Read

நிறைந்த தூக்கம் என்ற செல்வத்தை எப்படிப் பெறுவது என்பதற்கு ஏழு உபாயங்களைக் கூறுகிறார் அந்நூலாசிரியர். அந்த நூலின் வாசிப்பு பேரின்பத்திற்கு இது சிறு ‘சாம்பிள்’ என்பதால் அந்த ஏழு வழிமுறைகளையும் வாசகப் பெரு மக்களுக்கு வைப்பதோடு, இதுபோல் பல செய்திகளை அறிந்து கொள்ள இந்த நூலை வாங்கிப் படிக்கத் தூண்டவே அதனை தருகிறோம்.
(1) 15 மணித்துளிகளை ‘கவலையுறும் நேரம்’ என்று ஒதுக்குங்கள் – தூங்குமுன் உங்களது கவலைகளை ஒரு தாளில் வரிசைப்படுத்தி எழுதுங்கள். அதனை எப்படி எதிர் கொண்டு மீளுவது என்பதையும் எழுதுங்கள். எழுதி முடிந்தவுடன், நீண்ட பெருமூச்சை இேலசாக இழுத்து விட்டு விட்டு உறங்கச் செல்லுங்கள்.
உங்கள் வணிகம் மற்றும் கவலைகளை மறந்து பணிகளை செம்மையாகச் செய்யும் நெஞ்சுரமும், துணிவும் தானே வந்து விடும். நன்றாகத் தூங்கலாம்!
(2) மூன்று முக்கிய நிகழ்வுகளுக்கு நீங்கள் நன்றி செலுத்த வேண்டும் என்று நினைக்கும் அவற்றை உங்களது சிந்தனையிலும், அன்புள்ள இதயத்திலும் உணர்ந்தால் பிறகு படுக்கச் செல்லுங்கள்; தானே உறக்கம் வந்து உங்களை நிம்மதியாக உறங்கச் செய்யும்.
(3) ஒரு நல்ல புத்தகத்தைப் படியுங்கள்! அல்லது நல்ல அமைதியுறும் இதமான இசையைக் கேளுங்கள். இசையைக் கேட்கையில் ஒளி குறைந்த அல்லது மெல்லிருட்டு சூழ (புத்தகத்திற்கு மட்டும் வெளிச்சம் படிக்க) படித்தால், கேட்டால், தூக்கத்தைத் தூண்டி நமக்கு நலத்தை நல்கும் – மெலட்டோனின் (Melatonin) என்ற தூக்கத்திற்கான ஹார்மோன் சுரக்கும் – நிம்மதியான உறக்கம் வரவாகும்!
(4) நீங்கள் உறங்கப் போகும் படுக்கை அறையை இரண்டு மணி நேரம் இருட்டாக்கி வைத்து, பிறகு விளக்கை குறைவாக ஒளிர விட்டால் அந்த இருட்டு உங்கள் உடலையே தூக்கத்திற்கு முன்னுரையாக நிச்சயம் ஆக்கி, உங்களை உறங்க வைப்பது நிச்சயம்.
(5) படுக்கைக்கு போகுமுன் மது அருந்தாதீர்கள். உறங்கும் முன் குடித்தால் சில மணித்துளிக்கு நீங்கள் படுக்கையில் போதையில் விழுந்து தூங்குவீர்கள்; ஆனால், இடையில் எழுந்து மீண்டும் தூக்கம் வராமல் அவதியுறுவீர்கள்.
(6) தூங்கப் போகுமுன் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன் நல்ல வெது வெதுப்பான நீரில் (Warm Water) குளித்து விட்டு படுக்கைக்குச் சென்றால் அது உங்கள் உடலுக்கு தூக்கத்திற்குரிய அழைப்பிதழைத் தானே தந்து விடுவது உறுதி!
(7) ஏ.சி. அறையாக உங்களது படுக்கை அறை இருப்பின் அதன் தட்ப வெப்ப நிலைைய ஏற்கும் வரை அது வெதுவெதுப்பாக மாற்றி விடும் – தூக்கத்தைத் தருவதற்கு இது தேவை! 6 மணி நேரமோ 7 மணி நேரமோ அதற்கு மேலே நீங்கள் தூங்க அது உங்கள் உடலில் பெருத்த மாறுதலை உருவாக்கும்.
குறைந்த உறக்கம் என்றால் மன அழுத்தம் அல்லது அதிகம் உண்ணும் நிலையை அது ஏற்படுத்தக் கூடும்!
அது மட்டுமா? உங்களால் வணிகம் – வேலைகளில் போதிய கூர்மையான கவனத்தையும் செலுத்தி பணியாற்றிட முடியாத நிலை தூக்கக் குறைவு மூலம் ஏற்படக் கூடும்!
எனவே, நாளைய வேலையைக் கருதாமல் உரிய நேரத்தில் முன் கூட்டியே தூங்கச் செல்லுங்கள். இரவு வெகு நேரம் கண் விழித்து இருக்காதீர்கள் – தூக்கம் மூலம் கிடைக்கும் மெலட்டோனின் ஹார்மோன் (Melatonin Hormone) இழப்பு பிற்கால வாழ்வை பல உடற் தொல்லைகளை – உபாதைகளை – நோய்களை உருவாக்கி விடக் கூடும்!
வருமுன்னர் காக்க உரிய தூக்கமும் ஒரு முக்கிய வழிமுறை – பெற வேண்டிய அருஞ்செல்வம் என்பதை மறவாதீர்!
‘மீதூண் விரும்பேல்’ என்பது போல், அதிக நேரம் தொடர் தூக்கமும் – எப்போதும் படுக்கையே கதி என்று இருப்பதும்கூட மற்றொரு வகை நோய்தான். அதையும் மறவாதீர்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *