தமிழர் தலைவர் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற விடுதலை 90 ஆம் ஆண்டு தொடக்க விழா

Viduthalai
4 Min Read

சென்னை, ஜூன் 1- விடுதலை 90 ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று (1.6.2024) காலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் எழுச்சியுடன் தொடங்கி நடைபெற்றது.
கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ், பொருளாளர் வீ.குமரேசன், செயல வைத் தலைவர் ஆ.வீரமர்த்தினி, வெளி யுறவு செயலாளர் கோ.கருணாநிதி, பிரச்சாரச் செயலாளர் அ.அருள்மொழி, வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், துணைப்பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி, துணைப்பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி, தொழிலாளர் அணி மாநில செயலாளர் திருச்சி மு.சேகர், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன், மகளிரணி மாநில செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, மகளிர் பாசறை மாநில செயலாளர் பா.மணியம்மை, இளைஞரணி மாநில செயலாளர் நாத்திக பொன்முடி, மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன், வீர.கோவிந்தராஜன், கிராமப்பிரச்சார மாநில அமைப்பாளர் அதிரடி க.அன்பழகன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அனைவரையும் வரவேற்றார்.

கழகத் துணைத் தலைவர் விடுதலை நிர்வாக அசிரியர் கவிஞர் கலி.பூங்குன்றன் விழாவின் நோக்க உரையாற்றினார்.
விடுதலை 90 ஆம் ஆண்டு தொடக்க விழா இந்த இயக்கத்தின் வாழ்நாளில் மட்டுமல்ல, நம் இனத்தின் வாழ்நாளிலும் ஒரு பொன்னாள் ஆகும். உலகிலேயே 90 ஆண்டுகளாக வெளிவரும் ஒரு பகுத்தறிவு நாளேடு என்றால் அது விடுதலைதான்.
1935இல் தொடங்கப்பட்ட விடுதலை ஏடு 1962 இல் ஒரு நெருக்கடியை சந்தித்தது. யார் ஆசிரியர் என்பதுதான் அந்த நெருக்கடி. கடலூரில் சிறப்பான வழக்குரைஞரான தமிழர் தலைவர் தந்தைபெரியார் கட்டளையை ஏற்று 29 வயதில் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.

விடுதலையை அதன் 27 ஆண்டி லேயே முடிந்துவிடாமல் இந்தாண்டு 90 ஆண்டுகளாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் நம் ஆசிரியர் அவர்கள்தான்.
விடுதலை 1937ஆம் ஆண்டின் இரண்டு களஞ்சியங்கள் இங்கே வெளியிடப்படுகின்றன. 1938ஆம் ஆண்டில் தந்தைபெரியாரின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப்பின்பு மக்களிடையே தமிழ் உணர்வு, தமிழ்மானம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பேச்சில், எழுத்துகளில் சமஸ்கிருத, வடமொழி நீக்கப்பட்டு முற்றிலும் தமிழ்மயமாக்கப்பட்டது. இனமானம் மட்டுமல்ல, மொழிமானத்தையும் காப்பாற்றி இருக்கிறது விடுதலை.

விடுதலையின் ஒவ்வொரு செய்தியும், ஒரு பெட்டி செய்தியிலிருந்து மாற்றத்தை ஏற்படுத்தி வந்துள்ளது. இது உண்மையா? என்ற பெட்டிச் செய்தி பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாழப்பாடி ராமமூர்த்தி ஒன்றிய அமைச்சராக டில்லியில் இருந்தபோது, அவர் நண்பர் கிள்ளிவளவன்மூலமாக ஆசிரியருக்கு ஒரு செய்தியை அனுப்பினார்.

விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் காஞ்சி சங்கராச்சாரி பெயர் சூட்டப்படுகிறதா? என்று பெட்டிச்செய்தி விடுதலையில் வெளியானது. அப்போது சட்டமன்றம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. விடுதலை செய்தியாளர் மருதப்பன் சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியானதை சொன்னார். விழுப்புரம் மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் பெயரில் மாவட்டம் அறிவிப்பு வெளியானதாக சொன்னார். அப்போது முதலமைச்சர் ஜெயலலிதா. இப்படி விடுதலையின் பெட்டிச் செய்திகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வந்துள்ளன.
அண்ணா அமைச்சரவையில் ம.பொ.சி.க்கு அமைச்சர் பதவி அளிக்கப்போவதாக செய்தியறிந்த தந்தைபெரியார் விடுதலையில் ஒரு பெட்டிச்செய்தியை வெளியிட்டார்.

எதிரியின் ஒற்றனை கூடாரத்துக்குள் விடுவதா? என்று. அண்ணாவிடம் சென்ற ம.பொ.சி.யிடம் அண்ணா, விடுதலை பெட்டிச்செய்தியைக் காட்டி தந்தை பெரியார் கட்டளையை நான் மீற மாட்டேன் என்று கூறிவிட்டார் என்று பல்வேறு வரலாற்றுத் தகவல்களை கவிஞர் நோக்கவுரையில் குறிப்பிட்டார்.
கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
தமிழ்நாட்டின் அனைத்துப்பகுதிகளி லிருந்தும் கழகப் பொறுப்பாளர்கள் பெரும் உழைப்பை நல்கி பொதுமக்களிடமிருந்து திரட்டிய விடுதலை சந்தாக்களைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் விடுதலை 90 ஆம் ஆண்டு விழாவில் வழங்கினார்கள்.

விடுதலை களஞ்சியம் (2 தொகுதிகள்) நூல்களை திராவிட இயக்க ஆய்வாளர் மூத்த இதழாளர் க.திருநாவுக்கரசு வெளியிட திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பெற்றுக்கொண்டார்.
1937 ஆம் ஆண்டில் ஜனவரியிலிருந்து ஏப்ரல் வரையிலான விடுதலை இதழின் தொகுப்பு நூல்களாக இரண்டு நூல்களின் நன்கொடை தலா ரூ.500 ஆக மொத்தம் ரூ. 1000. விடுதலை 90ஆம் ஆண்டு தொடக்க விழாவில் ரூ. 800க்கு வழங்கப்பட்டது.
கழகப்பொறுப்பாளர்கள், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் வரிசையாக சென்று உரிய தொகையை செலுத்தி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து புத்தகங்களைப் பெற்றுக்கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற திராவிட இயக்க ஆய்வாளர் மூத்த இதழாளர் க.திருநாவுக்கரசு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

கழகத் துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விழாவில் தலைமையுரை சிறப்புரையாற்றினார்.
விழா நிறைவாக திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் நன்றி உரையாற்றினார்.
திராவிடர் கழகம், விடுதலைக் குழுமம் ஏற்பாட்டில் நடைபெற்ற விடுதலை 90 ஆம் ஆண்டு விழாவில் தலைமைக்கழக அமைப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், கழக மாவட்டங்களின் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் குடும்பத்துடன் பேரார்வத்துடன் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *