மின் வாரியம் உத்தரவு
சென்னை, மே 31 மின்சார விபத்துகளை தவிர்க்க, புதிதாக வீடு கட்டுபவர்கள் மின்கசிவு காப்பு சாதனத்தை பொருத்தியிருந்தால்தான் மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.
சென்னையில் உள்ள பெண்கள் விடுதியில் மடிக்கணினிக்கு ‘சார்ஜ்’ போடும்போது மின்சாரம் தாக்கியதில் நாமக்கல்லைச் சேர்ந்த பயிற்சி பெண் மருத்துவர் சரணிதா உயிரிழந்தார். விழுப்புரத்தில் மின்சார மோட்டார் சுவிட்சை போட்டபோது காசியம்மாள் என்ற 70 வயது மூதாட்டி மின்சாரம் தாக்கி இறந்தார். இவ்வாறு சமீப காலமாகவே மின்சாரம் தாக்கி பலர் இறந்து வருகின்றனர். இதுபோன்று வீடுகளில் மின் விபத்துகளை தவிர்ப்பதற்காக, ‘ரெசிடுயல் கரண்ட் ‘டிவைஸ்’ (ஆர்.சி.டி.) என்பது அனைத்து மின்சார இணைப்புகளிலும் கட்டாயம் பொருத்தப்பட வேண்டிய ஒரு உயிர் காக்கும் சாதனமாகும்.
இதனை புதிதாக வீடு கட்டுபவர்கள் மற்றும் ஏற்கெனவே மின்சார இணைப்பு பெற்றவர்களும் கண்டிப்பாக தங்கள் வீடுகளில் பொருத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்சாரவாரிய அதிகாரிகள் கூறும்போது. ‘வீடுகளில் சமீபகாலமாக மின்சார கசிவு காரண மாக உயிரிழப்பு அதிகம் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வீடுகளில் மின்சார கசிவை கண்டுபிடித்து உடனடியாக ‘பீஸ்’ போக வைக்கும் கருவியான மின்கசிவு காப்பு சாதனத்தை ‘ரெசிடுயல் கரண்ட் டிவைஸ்’ (ஆர்.சி.டி)பொருத்த அறிவுறுத்தி இருந்தது.
தற்போது புதிதாக மின்சார இணைப்பு கேட்கும் மின்சார நுகர்வோர்கள் கண்டிப்பாக வீடுகளில் மின்சார கசிவு காப்பு சாதனத்தை பொருத்த வேண்டும். இதுகுறித்து மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.30 லட்சம் செலவில் வீடுகட்டும் பொதுமக்கள் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரம் வரை செலவு செய்து மின் கசிவு காப்பு சாதனத்தை பொருத்தி வீடுகளில் மின்சார விபத்துகளை தவிர்க்க ஒத்துழைப்பு நல்க வேண்டும். ஏற்கெனவே உள்ள வீடுகளில் குடியிருப்பவர்களும் இந்த காப்பு சாதனத்தை வாங்கி தங்கள் வீடுகளில் பொருத்தி கொள்வது நல்லது’ என்றனர்.