இதோ ஓர் எளிய தீர்வு (2)

Viduthalai
2 Min Read

நமது போதுமான தேவைகளைத் தாண்டி, எல்லைக்கோடு கட்டாமல் எல்லாவற்றிற்கும் நாமே ‘அதிபதியாகி’, ‘அவரை மிஞ்ச வேண்டும்; – இவரைத் தாண்டி, உயரத்தில் பறந்து பரவசம் அடைய வேண்டும்’ என்ற படாடோப போதை உள்ளவர்கள், அவர்களுக்கு அவர்களே முதல் எதிரியாவார்கள்!
அதுதான் அவர்கள் மூளையில் சேர்ந்து வெளியாகாமல் உள்ள குப்பைகளுடன் அவர்களுக்கு ஒரு வகை ‘நோய்’ உண்டாக்கும் ஒரு சுமை ஆகும்!
அதிலிருந்து நாம் வெளிப்பட – முயன்று வெற்றி காண நாம் நம் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் குறைத்துக் கொண்டு, சேவைகள் மூலம் மகிழ்ச்சி அடையும் மன நிலைக்கு நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்ளுவது மிகத் தேவையான சிகிச்சை முறையாகும்!
ரயில்களில் நாம் பயணம் செய்யும் போது, முன்பெல்லாம் சில வாசகங்களைப் படித்தது நினைவிருக்கிறதா?

‘Less Luggage – more Comfort’
‘குறைந்த சுமை, நிறைந்த வசதியாகும்’ என்பதே, அதன் பொருள் நாம் ‘வெளியே’ சுமக்கும் மூட்டை முடிச்சுகளைவிட உள்ளே சுமக்கும் இத்தகைய எல்லைக் கோடில்லாத தொல்லைகளை வரவழைக்கும் தேடித் தேடி அலைபவர்களாகவே நமக்கு நாமே ஆளாகாமல் “மீட்டுக் கொள்ள” மீள் வழிகாண வேண்டும்!
‘வரவுகள், செலவுகள், சேமிப்புகள்’ என்பவைகளோடு கண்டதைச் சாப்பிட்டு நம் உடலில் ஏற்றிக் கொள்ளும் கலோரி போன்ற வரவுகளை, அதனைச் செலவிடாமல் (அதாவது உடற்பயிற்சி, உழைப்பு, இவைமூலம்), ‘சும்மா’வே ‘திண்ணைத் தூங்கிகள்’ போல செலவழிக்காமல் இருப்பது தவறான சேமிப்பு அல்லவா?

உடற்கொழுப்பு – கொலஸ்டிரால் – இனிப்பு நீர் என்ற சர்க்கரை நோய் சாப்பிட்டவை வெறும் மாவு சர்க்கரையாக்கப்பட்டே நமது ரத்தத்தில் கலந்து விடுவதால் மிகுதியாக ஆவதுதான் சர்க்கரை வியாதி Diabetic – என்ற நீரிழிவு நோயாகும்!
அக்காலத்தில் நமது கிராமப் பெரியவர்களுக்கு கொழுப்புச் சத்து என்றால் (கொலஸ்டிரால்) என்னவென்று தெரியாது! அவர்களது நெற்றி வியர்வை நிலத்தில் பாய்ச்சப்பட்டதால் கடைசி வரை உழைத்து மறைந்தவர்களாகவே வாழ்ந்தனர்.
இன்றோ தன் நடைப் பயிற்சி (Walking) நமக்குத் தேவைப்படுகிறது – காரணம் உட்கார்ந்து கிடந்தே பணியாற்றுவது (Sedative Rabit) நமது வாழ்க்கை முறையாகி விட்டது!
இதய நோய்க்கு மூலவேர் இதிலிருந்துதான் முளைக்கத் துவங்கும்.

நாம் உட்கொள்வதை செரிமானம் செய்து எப்படி நாளும் கழிவுகளாக்கி நம் உடல் வெளியேற்றுகிறது என்பது இயற்கையான வழிமுறை Detoxification – அந்த கழிவுகள் கலந்து விஷம்போல மாறி விடும் முன்பே வெளியேற்றப்படுவது எப்படி ஆரோக்கிய முறையாக உள்ளதோ, அதுபோல சேர்ந்து விடும் கொழுப்புச் சத்தை உழைப்பால் கரைத்து விட்டால், உடல் நலம் சீராராகவே ஆவது உறுதி!

பகுத்தறிவு இல்லா பறவை இனம், விலங்கினம் தனது தேவைக்குத் தான் உணவை – இரையைக்கூட அவ்வப்போது தேடிக் கொண்டு – நாளை பற்றி எண்ணி ‘பதுக்கல்’ புத்தியை அவை பெறாதது மனிதர்களைவிட அவற்றின் புதுமுறை கவலையற்ற, ஆரோக்கிய வாழ்வை நாளும் அறிந்து, குஞ்சுகளுக்கு இறக்கை முளைத்தால், குட்டிகள் வளர்ந்தால் தன் வழி தனி வழி என்று சென்று வாழுகின்றன.

ஆறறிவுள்ள மனிதனாகியவன்தான் இப்படி எல்லைக்கோடு இன்றி கொள்ளையடித்தும், குவித்தும், தமது நிம்மதியை, மகிழ்ச்சியை அதன் பலிபீடத்தில் வைத்து, பூஜை போட்டு தன்னைத்தானே ‘கிடா’ வெட்டுவது போல் வெட்டி பலியாக்கிக் கொள்வதால்தான் பலரது வாழ்வில் உண்மை எளிமை தேகநலம் என்பன இன்று காணாமற் போயின!
(தொடரும்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *