பிரியங்கா குற்றச்சாட்டு
மனாலி, மே 30 பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களால், சிறு தொழில்க ளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவா் பிரியங்கா காந்தி புதன்கிழமை தெரிவித்தார்.
இமாசல பிரதேசத்தில் மண்டி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் விக்கிரமாதித்ய சிங்கை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். அதில் பேசிய அவா் கூறியதாவது: மோடியின் ஆட்சிக் காலத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கும் பணி கிட்டத்தட்ட நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நமது நாடு கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையில்லா திண்டாட்டத்தைச் சந்தித்து வருகிறது. 70 கோடி இளைஞா்கள் வேலையில்லாத நிலையில் இருக்கிறார்கள். பாஜக நாட்டை நடத்தும் முறை பல சிறு தொழில்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) போன்ற நடவடிக்கைகள் சுற்றுலாத் துறையைப் பெருமளவு பாதித்திருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சிறு தொழில்கள் வலுப்படுத்தப் பாடுபடுவோம். மேலும், இந்தத் துறையில் பல வேலைவாய்ப்புகளை வழங்குவோம்.
பாஜகவின் திட்டங்கள் சிறு தொழில்களை அழித்து பெரும் பணக்கார தொழிலதிபா்களை வலுப்படுத்துகிறது. தற்போது, நாட்டின் சொத்துகள் அனைத்தும் குறிப்பிட்ட சில செல்வந்தா்களிடம் சென்று கொண்டிருக்கிறது. நிலக்கரிச் சுரங்கங்கள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை மோடி தனது நண்பா்களுக்கு வழங்குகிறார் இது நாட்டுக்கு மிக பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது.
இமாசல மாநிலத்தில் உள்ள அனைத்து குளிர் சேமிப்பு கிடங்கும் அதானியிடம் உள்ளது. ஆப்பிள் விலையை அதானிதான் முடிவு செய்கிறார் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிளுக்கு வரி குறைக்கப்படுகிறது. ஆனால், நம் விவசாயிகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இமாசலத்தைச் சோ்ந்த இளைஞா்கள் பலா் ராணுவத்தில் இணைந்து நாட்டைப் பாதுகாத்தனா். ஆனால், மோடி அக்னிபத் திட்டத்தைக் கொண்டுவருகிறார் அக்னிபத் வீரராக இணைபவா் வீரமரணமடைந்தால் அவருக்கு தியாகி அந்தஸ்தும் கிடைக்காது, அவரின் பெற்றோருக்கு ஓய்வூதியமும் கிடைக்காது என பிரியங்கா காந்தி தெரிவித்தார். இமாசல பிரதேசத்தில் உள்ள 4 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஜூன் 1-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.