சாவர்க்கரின் ‘பெருமைகள்’ இவைதான்!

Viduthalai
4 Min Read

செவ்வாயன்று (14.5.2024) மும்பையில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் “மராட்டியரான வீர சாவர்க்கர் குறித்த அய்ந்து பெருமைகளை காங்கிரசாரால் பட்டியலிடமுடியுமா?” என்று பிரதமர் மோடி பேசி உள்ளார். சித்பவன் பார்ப்பனரான சாவர்க்கர் மராட்டிய மாநிலத்தில் பிறந்ததால் மராட்டியர்களின் வாக்குகளைக் கவரவே இப்படிப் பேசி உள்ளார் பிரதமர் மோடி.
இதுவரை நடந்த எந்த தேர்தலிலும் சாவர்க்கர் குறித்து யாருமே பேசவில்லை; மேலும் காந்தியாரின் கொலைக்குப் பிறகு அங்குள்ள பாட்டாளி வர்க்கம் இனிமேல் மராட்டிய மாநிலத்தில் பார்ப்பனர்களை முதலமைச்சர் பதவியில் அமர இடம் கொடுக்கமாட்டோம் என்று சூளுரைத்தனர்.
அப்படி இருந்தும் சமீபத்தில் இறந்த முரளி மனோகர் ஜோஷி சிவசேனா – பாஜக கூட்டணி ஆட்சியில் சில ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார்.
இருப்பினும் சிவசேனா – பாஜக கூட்டணி ஆட்சியில் சாவர்க்கருக்கு முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால் சமீப காலமாக மகாராட்டிரா தேர்தல் வரும் போது எல்லாம் சாவர்க்கரை மோடி பிடித்துக் கொள்கிறார். சரி அப்படி என்ன சாவர்க்கரின் பெருமைகள்?

1. முதல் தடவை ‘பிரிட்டிஷ் மகாராணியின் பிள்ளை நான்’ என்று மன்னிப்பு கடிதம் எழுதினார்.
2. இரண்டாவது தடவை பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார்.
3. மூன்றாவது தடவையும் பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார்.
4. நான்காவது தடவை இனிமேல் பத்திரிகையில் பிரிட்டிஷ் அரசை விமர்சிக்க மாட்டேன் என மன்னிப்புக் கடிதம் எழுதினார்.
5. அய்ந்தாவது தடவை காந்தியார் கொலைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நேருவுக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார். 13க்கும் மேற்பட்ட மன்னிப்புக் கடிதம் எழுதிய ‘மகா வீரர்’ இவர்!
இப்படிப்பட்ட பெருமைகள் அல்ல..அய்நூறு ‘பெருமைகள்’ சாவர்க்கருக்கு உண்டு!
சாவர்க்கர் உயிருடன் இருக்கும் வரை அவர் குறித்து யாரும் அதிகம் பேசவில்லை.

ஆகையால் தானே தனக்கான வாழ்க்கை வரலாறு ஒன்றை எழுதி அதில் தனது பெயருக்கு முன்னால் ‘வீர்’ என்று சேர்த்துக் கொண்டார் பிறகு அதில் அவர் எழுதியது எல்லாம் சான்றுகள் இல்லாத கட்டுக்கதை என்று அவர்களது கூட்டத்தினரே பலமுறை கூறியுள்ளனர்.
ஓர் எடுத்துக்காட்டு: கருநாடகத்தில் எடியூரப்பா தலைமையிலான ஆட்சிக் காலத்தில் எட்டாம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் “சாவர்க்கர் சிறையில் அடைக்கப்பட்ட அறையில், ஒரு சிறிய சாவித் துவாரம் கூட இல்லை. இருப்பினும், புல்புல் பறவை எங்கிருந்தோ அறைக்கு வரும். சாவர்க்கர் ஒவ்வொரு நாளும் தாய்நாட்டிற்குச் செல்ல அந்த பறவைகளின் இறக்கைகளில் அமர்ந்து பறந்து செல்வார்,” என்று அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புத்தகத்தில் உள்ள இந்தப் பாடத்தின் தலைப்பு ‘கலவன்னு கெடவரு’ ‘KalavannuGeddavaru’. இதற்கு அர்த்தம், ‘நீரோட்டத்திற்கு எதிராக செல்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்’ என்பதாகும்.

கருநாடகாவைச் சேர்ந்த பார்ப்பனரான கே.டி. கட்டி என்பவர் அந்தமான் சிறையில் 1911 முதல் 1921 வரை வீர சாவர்கர் இருந்த அறைக்குச் சென்று பார்வையிட்ட பிறகு இப்படி எழுதியிருக்கிறாராம். இந்தப் புத்தகத்தில் உள்ள பாடங்கள், கருநாடகாவில் ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையிலான பாடநூல் திருத்தக் குழுவால் திருத்தப்பட்ட பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது.
சாவர்க்கரின் சிறை வாழ்க்கையை எழுதும்போது, சுவரைத் தாண்டி வானத்தை கூடப் பார்க்க முடியாத அளவுக்கு சிறிய ஓட்டை அந்த அறையில் இருந்ததாக ஒரு பத்தியில் குறிப்பிடுகிறார்.அந்த துவாரத்தின் வழியாக புல்புல் பறவை எங்கிருந்து அறைக்குள் வரும்? சாவர்க்கர் அந்த பறவையின் சிறகுகளில் அமர்ந்து தாய்நாட்டிற்கு நாள்தோறும் வருவது வழக்கம் என்று எழுதியிருக்கிறார்.

இது மாணவர்களை மூடர்களாக்கும் செயல் என்று அப்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பிரியங்க் கார்கே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆனால் பாடப் புத்தக சங்கத்தின் நிர்வாக இயக்குநர் மாதேகவுடா “மாணவர்களின் கல்வி தொடர்பானது – ஆகவே இதில் அரசியல் செய்யவேண்டாம் ,” என்று கூறியிருந்தார்
அதே நேரத்தில் இந்து மதம் குறித்து கேள்வி எழுப்பிய சீர்திருத்த வாதியான பசவண்ணாவை ஹிந்துமதத் துறவியாக பொய்யாக சித்தரித்து அதே பாடப் புத்தகத்தில் இடம் பெறச் செய்யப்பட்டது. இதற்குக் கன்னட மக்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியது அதே போல் தந்தை பெரியார், பகத்சிங், இந்திய அரசமைப்புச்சட்டம் தொடர்பான பாடங்களும் பாடப்புத்தகத்தில் இருந்து அகற்றப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பாடப் புத்தகங்களில் இருந்து சாவர்க்கர், மூஞ்சே, சங்பரிவார், சனாதன் போன்ற பாடங்களை அகற்றி விட்டு தந்தைபெரியார், அண்ணல் அம்பேத்கர், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், பசவண்ணா உள்ளிட்ட சீர்திருத்தவாதிகளின் பாடங்களை இடம் பெறச் செய்தது.

சாவர்கர் ஒரு ஹிந்துத்துவா சித்தாந்தவாதி. அவர் ‘ஹிந்துத்வா: ஹிந்து யார்?’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார். அது ஆரம்பத்தில் ‘ஹிந்துத்துவாவின் அத்தியாவசியங்கள்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. 1924இல் அந்தமான் சிறையில் இருந்து விடுவிக் கப்பட்ட பிறகு, அவர் இந்திய சுதந்திர இயக்கத்தில் சேராததற்காக விமர்சனங்களுக்கு ஆளானார்.காந்தியாரின் கொலைக்கு சதி செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது, ஆனால் ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுவிக்கப்பட்டார். இத்தகையவரைப் பற்றி தான் சாவர்கரின் பெருமைகளை வெளியிட முடியுமா என்று மகாராட்டிர தேர்தலில் பிளந்து கட்டுகிறார் மோடி – அந்தோ பரிதாபம் மோடி!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *