5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு

viduthalai
1 Min Read

சென்னை, மே 16 தமிழ்நாட்டில் தற்போது வெப்பம் குறைந்துள்ள நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதைஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. அத்துடன் மேற்கண்ட நாள்களில் 26 மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இதையடுத்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இணை இயக்குநர் முத்துக்குமரன் நேற்று (15.5.2024) தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கரூர், திருச்சி, மயிலாடுதுறை, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ‘‘தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 20ஆம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் முழுவீச்சில் தயாராக இருக்க வேண்டும். கனமழையின்போது எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டால் மாவட்ட ஆட்சியர்கள் உடனே பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் தர வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *