சென்னை, ஏப். 26- பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, தாலிக்கு நீதி கேட்டு, தாலிக் கயிறு கையில் ஏந்தி, தமிழ்நாடு மகளிர் காங்கிரசார், சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று (25.4.2024) ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிரதமர் மோடி பேசுகையில், ‘காங்கிரஸ் மேனாள் பிரதமர் மன்மோகன்சிங், முஸ்லிம்களுக்கு தான் நாட்டின் சொத்துக்களில் முதல் உரிமை உள்ளது’ என்றார்.
மேலும் அவர் பேசுகையில், ‘நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த தங்கத்தை பறித்து, அதிக குழந்தைகள் பெறுபவர்களுக்கு கொடுப்பது தான் காங்கிரசின் திட்டம். இதில், உங்களுடைய தாலியும் தப்பாது’ என்றார்.
பிரதமர் மோடியின் இந்த சர்ச்சை பேச்சை கண்டித்து, தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் தலைமையில், மகளிர் காங்கிரசார் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில், பங்கேற்ற அனைவரும் தங்கள் கைகளில் தாலி கயிறு ஏந்தி, தரையில் அமர்ந்து முழக்கமிட்டனர்.