காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை மக்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக இருக்கின்றனர்!
”யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது” என்பதே முக்கியம்!
தஞ்சையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
தஞ்சை, மார்ச் 26 காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மக்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக இருக்கின்றனர்! ”யார்வரவேண்டும் என்பதைவிட, யார் வரக் கூடாது” என்பதே முக்கியம்! இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகத்தின் பிரச்சாரம் ஏப்.2 ஆம் தேதி தென்காசியில் தொடங்கி, ஏப். 17 ஆம் தேதி மாலை தஞ்சையில் நிறைவு என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
திராவிடர் கழகப் பொதுக்குழுவில் பங்கேற்க நேற்று (25-3-2024) தஞ்சைக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
”யார் வரவேண்டும் என்பதைவிட,
யார் வரக்கூடாது” என்பதே முக்கியம்!
வருகின்ற மக்களவைத் தேர்தலில், வாக்காளர்களின் கடமையை நினைவூட்டி, திராவிடர் கழகம் தேர்தலில் நிற்காத ஓர் இயக்கமாக இருந்தாலும், ”யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது” என்பதே இந்தத் தேர்தலினுடைய அடிப்படைத் தத்துவம் என்ற அள வில், மக்கள் மத்தியில் சிறப்பான வகையில் பிரச் சாரத்தைத் தெளிவாகச் செய்யக்கூடிய வகையில், புத்தகங்களை நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம்; அதனைப் பரப்பக்கூடிய அளவில், வாய்ப்புகள் மிகத் தெளிவாக இன்றைக்கு வந்திருக்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில்…
அரசமைப்புச் சட்டத்தில் மிக முக்கியமாக வரவேற் கப்பட்ட 5 அம்சங்கள்.
1. இறையாண்மை 2. சமத்துவம் 3. மதச்சார்பின்மை 4. ஜனநாயகம் 5. குடியரசு.
மேற்சொன்ன 5 அம்சங்களையும் கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க. மோடி அரசு, தொடர்ந்து ஒவ்வொன் றையும் சிதைத்து இருக்கிறது; ஜனநாயகமே இனிமேல் காணாமல் போய்விடும் என்கிற அளவிற்கு அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக சிதைத்தும் வருகிறது.
வருகின்ற மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக் கப்பட்டு மீண்டும் அவர்கள் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தால், இதுதான் கடைசி தேர்தலாக இருக்கும் என்று சொல்லக்கூடிய சூழல் ஏற்பட்டுவிடும்.
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையில் உள்ள மக்கள் இதனைப் புரிந்துகொண்டதால்தான், மக்களவைத் தேர்தலில் தங்களுடைய கட மையை சரியாகச் செய்யவேண்டும் என்று உணர்ந்திருக்கிறார்கள்.
தி.மு.க. தலைமையில் அமைந்த கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணி!
இதற்கெல்லாம் வழிகாட்டக்கூடிய அளவிற்கு, தமிழ்நாட்டில் ஏற்கெனவே நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும், ஏற்கெனவே நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் – திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்த கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணியாக அமைந்த காரணத்தினால், இடங்களைப்பற்றி கவலைப்படாமல், ஓரணியில் நின்று, ஒற்றுமையாக செயலாற்றுகிறார்கள்.
இந்தியா கூட்டணி என்பது வேற்றுமையில் ஒற்றுமை!
மற்ற கட்சிகள், கூட்டணி எப்படி, யாருடன் அமைப் பது என்று திணறிக் கொண்டிருந்த நேரத்தில், தி.மு.க. கூட்டணியில் ஏற்கெனவே இருக்கின்றவர்களுக்கே இடம் கொடுக்க முடியாத சூழலில், புதிதாக வருகின்ற கட்சிகளுக்கு இடம் கொடுக்க முடியாத சூழலும் ஏற்பட்டது. இந்தக் கொள்கைக்கு அவ்வளவு வரவேற்பு இருக்கிறது. இந்தியா கூட்டணி என்பது ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதாகும்.
சிலர் வேண்டுமென்றே சில பொய்ப் பிரச்சாரத்தைக் கிளப்பி விடுகிறார்கள். அவர் ஒத்துக்கொள்ளவில்லை; இவர் ஒத்துக்கொள்ளவில்லை என்று. அந்தப் பொய்ப் பிரச்சாரத்தைப்பற்றி கவலைப்பட வேண்டாம்!
சற்று நேரத்திற்கு முன்பு நான் பேசியபொழுதுகூட சொன்னேன், மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதுதான் மிகவும் முக்கியம் என்று.
ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு, ஒன்றியத்தில் அமையக்கூடிய ஆட்சி – இந்தியா கூட்டணியின் ஆட்சிதான்!
ஆகவே, நிச்சயமாக ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு, ஒன்றியத்தில் அமையக்கூடிய ஆட்சி – இந்தியா கூட்டணியின் ஆட்சியாகத்தான் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இதனைத் தேர்தல் கணிப்பாக நாங்கள் சொல்ல வில்லை. மக்கள் மத்தியில் இருக்கின்ற உணர்வுகளைப் பார்த்துத்தான் சொல்கிறோம்.
ஒரு சிறிய உதாரணத்தைச் சொல்கிறேன், மணிப் பூருக்குப் பிரதமர் செல்லவேயில்லை. அதைவிட, வட கிழக்கு மாநிலங்களான நாகாலந்து, மேகாலயா போன்ற மாநிலங்களில், பா.ஜ.க.வினர் மக்களவைத் தேர்தலில் நாங்கள் நிற்கவில்லை என்று சொல்கிறார்கள். அசா மிற்குப் போன பிரதமர் மோடி, மற்ற மாநிலங்களுக்குச் செல்லவில்லை.
இன்றைக்கு எல்லா மாநிலங்களிலும் பார்த்தீர்களே யானால், எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவிற்கு அமைதியாக, பா.ஜ.க.வை எதிர்த்துப் பிரச்சாரத்தை முன்னெடுத்தாலும், அதைத் தவறாக சித்தரிக்கின்ற ஊடகங்களையும் தாண்டி, பெரிய அளவில் வெற்றியடையக் கூடிய வாய்ப்பினை இந்தியா கூட்டணி பெறும்.
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டுவிழாவை இந்த ஆண்டு சிறப்பாக நடத்தவிருக்கின்றோம்.
அதேபோல, சிந்து சமவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகம்தான் என்று சர்ஜான் மார்ஷல் அவர்கள் அறிவித்து, ஆதாரப்பூர்வமாக இன்றைக்கு வந்து – கீழடி உள்பட ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. அந்த நாகரிகத்தினுடைய நூற்றாண்டு விழாவும் இந்த ஆண்டு வருகிறது.
ஏப்.2 ஆம் தேதி தென்காசியில் தொடங்கி
ஏப்.17 ஆம் தேதி தஞ்சையில் நிறைவு!
அந்த நூற்றாண்டு விழாக்களுக்கான பணிகளை திராவிடர் கழகம் முன்னெடுக்கும். தேர்தல் பிரச் சாரத்தை திராவிடர் கழகம் ஏப். 2 ஆம் தேதியன்று தென்காசியில் தொடங்கவிருக்கிறது. ஏப்.17 ஆம் தேதி மாலை தஞ்சையில் நிறைவடையவிருக்கிறது.
என்ன காரணத்தினால் மக்கள் விரோத ஒன்றிய பா.ஜ.க. அரசு தோற்கடிக்கப்படவேண்டும் என்பதை யெல்லாம் மிகத் தெளிவாக நாங்கள் வெளியிட்டு இருக்கின்ற புத்தகத்தில் விளக்கியிருக்கின்றோம்.
யார் வேட்பாளர்? என்பதைவிட, அவருடைய கொள்கை என்னவென்று பார்க்கவேண்டும்.
ஒன்றியத்தில் எதேச்சதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்!
அவர் அந்தக் கூட்டணியில் இருக்கிறார்; இவர் இந்தக் கூட்டணியில் இருக்கிறார். ஆகவே, வாக்குகள் பிரிந்துவிடுமே என்று நினைக்கலாம்; ஊடகத் துறை யினர் மூலமாக மக்களுக்கு ஒரு வேண்டுகோள் என்னவென்றால், ஒன்றியத்தில் எதேச்சதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று நினைப்பவர்கள், யாருக்கு வாக்களித்தால், அதனை நிறைவேற்றச் செய்ய முடியுமோ, அவர் களுக்கு வாக்களிக்கவேண்டும். நாங்களும் வாக்களிக் கிறோம் என்று காட்டிக் கொள்வதற்காக வாக்குச் சாவடிக்குப் போனால், அவர்கள் அளிக்கின்ற வாக்கு பயனற்றதாகிவிடும் என்பதையும் அவர்கள் உணர வேண்டும். அதற்குரிய பிரச்சாரத்தை நாங்கள் தொடர்ந்து செய்வோம். அதற்கான செய்திகளையெல்லாம் எங்களு டைய பத்திரிகையில் எடுத்துச் சொல்வோம்.
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை மக்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக இருக்கின்றனர்!
இன்னொரு செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன், பா..ஜ.க.வினருக்குத் தைரியம் இல்லை என்பதற்கு ஓர் உதாரணம் என்னவென்றால், ”காஷ்மீரில் தேர்தல் நடத்துவீர்களா?” என்று உச்சநீதிமன்றம் கேட்கிறது.
அங்கே நாங்கள் நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடத்துவோமே தவிர, சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடத்தமாட்டோம் என்கிறார்கள்.
”ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்று சொல்லுகின்ற பா.ஜ.க.வின் வாதம் உண்மை என்றால், இந்த நேரத்தில், நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து சட்டமன்றத் தேர்தலையும் காஷ்மீரில் நடத்துவதற்கு அவர்கள் தயாராக இல்லையே! அதற்குக் காரணம் என்னவென்றால், மக்கள் அங்கே அவர்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதால்தான்.
பா.ஜ.க. என்பது மூழ்குகின்ற கப்பல்!
பல இடங்களில், பி.ஜே.பி. ஒரு மூழ்குகின்ற கப்பல் என்பதைத் தெரிந்துகொண்டதால்தான், முக் கியமானவர்களை அழைத்து, உங்களை பா.ஜ.க. வேட்பாளராக போட்டிருக்கிறோம் என்று குஜராத்தில் சொல்கிறார்கள். டபுள் எஞ்ஜின் குஜராத்திலேகூட, ”போட்டியிடுவதற்கு எங்களுக்குத் தொகுதி வேண்டாம், வேண்டாம்” என்று சொல்கிறார்கள். பா.ஜ.க.வால் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, அக்கட்சியால் நியமிக்கப்பட்டவர்கள்கூட வெளியேறக்கூடிய நிலை எதைக் காட்டுகிறது என்று சொன்னால், அவர்கள் தோல்வி பயத்தில் இருக்கிறார்கள் என்பதைத்தான்.
ஆனால், அதை மறைப்பதற்காக பிரதமர் மோடி என்ன சொல்கிறார் என்றால், ”புலிக்குப் பயந்தவர்கள் எல்லாம், என்மேல் வந்து விழுங்கள்” என்று சொல்வது போன்று, அவர் பேசுகிறார்.
தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவதற்கு, தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்து பிரதமர் மோடி உரம் போடுகிறார்!
தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகிறார். மேலும் வருவார் என்று சொல்கிறார்கள். அவர் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வரவேண்டும்; ஏனென்றால், எவ்வளவுக் கெவ்வளவு தமிழ்நாட்டிற்கு வந்து பிரதமர் பேசுகிறாரோ, அவ்வளவுக்கவ்வளவு எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு மிகவும் அதிகம்.
ஆகவே, தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவதற்கு, அவர் ஒவ்வொரு முறையும் உரம் போடுகிறார் என்று அதற்குப் பொருள். ஆகவே, தவறாமல் வந்து, அவர் உரம் போடவேண்டும் என்பதுதான் அவருக்கு எங்களுடைய அன்பான வேண்டுகோள்!
ஒப்புகைச் சீட்டை நூறு சதவிகிதம் எண்ண வேண்டும்!
செய்தியாளர்: ஈவிஎம் முறையை ஒழித்துவிட்டு, வாக்குச் சீட்டு முறை வரவேண்டும் என்று அமெரிக்க எதிர்க்கட்சித் தலைவர் சொல்லியிருக்கிறாரே?
தமிழர் தலைவர் பதில்: ஈவிஎம். முறையில் சந்தேகம் இருப்பதினால்தான் ஒப்புகைச் சீட்டை நூறு சதவிகிதம் எண்ண வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. சந்தேகம் இருந்தால், அந்த சந்தேகத்தைத் தீர்க்கவேண்டியது ஓர் அரசினுடைய கடமையாகும்.
உச்சநீதிமன்றத்தில்கூட, இரண்டு தேர்தல் ஆணை யர்களின் நியமனத்திற்கு அதிருப்தியைத் தெரிவித் திருக்கிறார்கள். ஆகவேதான், எல்லா வகையிலும் கவனமாக இருக்கவேண்டும் என்பதற்கு அது ஓர் அடையாளமாகும்.
இன்னும் அந்த ஒரு செங்கல்லைத் தாண்டவில்லையே ஒன்றிய மோடி அரசு!
செய்தியாளர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரம் என்றால், ஒரு செங்கல்லை கையில் எடுத்துக்கொள்கிறார் என்று சொல்கிறார்களே?
தமிழர் தலைவர் பதில்: இன்னும் அந்த செங் கல்லைத் தாண்டவில்லையே, ஒன்றிய ஆட்சியில் பிரதமராக இருக்கும் மோடி.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறார் என்று சொல்லட்டுமே!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், நல்ல யுக்தியோடு பிரச்சாரம் செய்கிறார்.
எல்லாவற்றையும்விட, நாங்கள் அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று பா.ஜ.க.வினர் கூறுகிறார்களே, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில், இராமர் பாலம் இல்லை என்று, நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்ட பிறகு, அந்தத் திட்டம் நிறைவேறு வதற்கு இன்னும் 23 கிலோ மீட்டர்தான் மீதமிருக்கிறது. அதை நிறைவேற்றினால், இந்தியாவின் பொருளாதாரம் உயரும்; தென்மாநிலங்களுக்கு வேலை வாய்ப்பு கள் பெருகும். ஆனால், அந்தத் திட்டத்தை நிறை வேற்றுவதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு தயாராக இல்லை.
வாக்குறுதிகள் என்னாயிற்று என்று கேட்டால், ”ஜூம்லா” என்கிறார்கள்!
மேலும், சென்ற தேர்தல்களில் பா.ஜ.க.வினர் கொடுத்த வாக்குறுதிகளையாவது நிறைவேற்றி இருக் கிறார்களா, என்றால் இல்லை. வாக்குறுதிகள் என்னா யிற்று என்று கேட்டால், அதெல்லாம் ”ஜூம்லா” என்கிறார்கள்.
இந்தியாவின் தலைநகரான டில்லியில், நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் நுழைவதற்குத் தடைகளை ஏற்படுத்தினார்களே, அதற்கு என்ன காரணம்? அவர்களுக்கு ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? என்றால், இல்லை.
ஏற்கெனவே கொடுத்த ‘கேரண்டீ’ என்னாயிற்று? அதை நிறைவேற்றாமல், இப்பொழுது புதிதாக ‘கேரண்டீ’, ‘கேரண்டீ’ என வரிசையாகக் குரல் கொடுக் கிறார் பிரதமர் மோடி!
விவசாயிகளின்மீது கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு பிரயோகம்!
குறைந்தபட்ச ஆதார விலையைக் கொடுக்கவேண் டும் என்று கேட்ட விவசாயிகளின்மீது கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு பிரயோகம் செய்தனர்.
இதையெல்லாம் மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார் கள். நெருக்கடி காலம் எப்படி இருந்தது என்று இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது.
அப்போது தேர்தல் வருவதற்கு முன்பு பார்த்தீர்க ளேயானால், ”நம்மை அசைக்க முடியாது; மீண்டும் நாம்தான் ஆட்சிக்கு வருவோம்” என்று நினைத்தார் கள். ஆனால், ”ஏன் தேர்தலை நடத்தினோம், நடத்தாமல் இருந்திருக்கலாமே” என்று நினைக்கக்கூடிய அளவிற்கு வித்தியாசம் இருந்தது.
மக்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டார்கள்
ஆகவேதான், இப்பொழுது நடைபெறுகின்ற மக்களவைத் தேர்தல் முடிவும் தெளிவான முடிவாக இருக்கும். அது தலைவர்களைப் பொறுத்ததல்ல; கட்சிகளைப் பொறுத்ததல்ல; முழுக்க முழுக்க மக்களைப் பொறுத்ததாகும். மக்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டார்கள்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களிடையே கூறினார்.