ஒன்றிய பிஜேபி அரசை எதிர்த்து விவசாயிகள் ரயில் மறியல்

Viduthalai
1 Min Read

அமிர்தசரஸ்,செப்.29 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டத்தை நேற்று  (28.9.2023)  தொடங்கினர். இதனால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பயிர்க்கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு எதிராக பஞ்சாப் மாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகள் ஏற்கப்படாததை தொடர்ந்து நேற்று அவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 3 நாள் ரயில் மறியல் போராட்டத்தை தொடங்கினர். ரயில் தண்டவாளங்களில் ஆயிரக்கணக்கில் அமர்ந்து இருந்த அவர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டம் இன்றும் (29.9.2023), நாளையும் (30.9.2023) தொடரும் என விவசாயிகள் அறிவித்து உள்ளனர். 

இந்த போராட்டத்தில் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி, பாரதிய கிசான் யூனியன், ஆசாத் கிசான் கமிட்டி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். அமிர்தசரஸ் அருகே உள்ள தேவிதாஸ் புராவில், அமிர்தசரஸ்-டில்லி ரயில் பாதையில் ஆயிரக்கணக்கில் விவசாயிகள் குவிந்து போராட்டம் நடத்தினர். இதைப்போல ஜலந்தர், மோகா, ஹோஷியார்பூர், குர்தாஸ்பூர், சங்ரூர், பாட்டியாலா, பதிண்டா, பெரோஸ்பூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *