சென்னை, மார்ச் 6- பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்துவரும் மாற்றுத் திறனாளிகளுக்கான 22ஆவது கவின்கேர் எபிலிட்டி விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
முதுகுத்தண்டு காயமடைந்த நபர்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்காக பணியாற்றி வரும் மும்பை மகாராட்டிராவைச் சேர்ந்த டாக்டர். கேதநா எல்.மேத்தா, பள்ளிகளில் கல்வி பயில விரும்புகின்ற பார்வைத் திறன் குறைபாடுள்ள குழந்தைகளை ஊக்கவிக்க தொண்டாற்றி வரும் ‘விஷன் எம்பவர்’ அமைப்பின் நிறுவனர் பெங்களூரைச் சேர்ந்த ஒய்.வித்யா, பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையிலும் சிறந்த பெண் வலைதள எழுத்தாளராக திகழ்பவரான புதுடில்லியைச் சேர்ந்த வினயானா குரானா, சிறந்த தொழில் முனைவரான தெலங்கானா செகந்திராபாத்தைச் சேர்ந்த டி.வி.அய்ஸ்வர்யா, பார்வைத் திறனை இழந்த நிலையிலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சாதனை பெற்று வரும் இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த சோன்சின் ஆங்மோ ஆகியோருக்கு கவின்கேர் எபிலிட்டி விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
2.3.2024 அன்று நடைபெற்ற இதற்கான விழாவில் கவின்கேர் நிறுவனத் தலைவர் சி.கே.ரங்கநாதன், எபிலிட்டி பவுண்டேஷனின் இயக்குநர் ஜெயசிறீ ரவீந்திரன் ஆகியோர் இணைந்து ஊனமுற்ற சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தனர்.