நூலகங்கள் அறிவின் சாளரங்கள்!

viduthalai
7 Min Read

ஆ.வந்தியத்தேவன்

நூலக வார நிகழ்ச்சிகளை நாடு தழுவிய அளவில் நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இங்கு மட்டும் அல்ல நண்பர்களே, “விழித்துக் கொள்ளுங்கள்; வாசியுங்கள்” என்ற முழக்கங்களோடு, 1957 ஆம் ஆண்டிலேயே நூலக விழா நிகழ்ச்சிகளை நடத்தியது அமெரிக்கத் திருநாடு!
லண்டன் மாநகரில் ஒருநாள் நிகழ்ச்சியாக தொடங்கப்பட்ட நூலக விழா இப்போது ஏப்ரல் திங்கள் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் மே மாதம் முழுவதும் நூலக விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நம்முடைய நாட்டில் 1968 ஆம் ஆண்டில் முதன் முதலாக நவம்பர்த் திங்களில் நூலக விழாக்கள் நடத்தப்பட்டு, இப்போது அந்த முறை தொடர்கிறது மேற்கு வங்க அரசு, நூலக வார விழாவினை முன்னிட்டு, அரசு ஊழியர்களுக்கும்; ஆசிரியர்களுக்கும் நூல்களை வாங்குவதற்காக முன்பணம் கொடுத்து உதவுகிறது. இவ்வாறு உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் நல அரசுகள், அறிவொளி பரப்பும் பணியைச் செய்து வருகிறதென்றால், நாமெல்லாம் நூல் பல கற்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்!

ஞாயிறு மலர்

கல்வி கற்க வேண்டும். நூல் பல கற்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கும்போது, அறிவு ஆசான் அய்யா பெரியாரைப் பற்றிய நினைவுகள்தான் என் நெஞ்சில் நிழலாடுகின்றன. கல்லூரியில் கல்வி கற்காதவர், பல்கலைக் கழகங்களில் பாடம் படிக்காதவர் பெரியார். ஆனால் பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் பெரியார் பாடமாக இப்போது கற்பிக்கப்படுகிறார். தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் பெரியார் என்று பேரறிஞர் அண்ணா பெரியாரைப் பற்றி குறிப்பிட்டார். இமயக் கொடுமுடியில் பெரியாரின் புகழ்க்கொடி இன்று விண்முட்ட பறக்கிறது என்றால், அதற்குக் காரணம் அவரது சிந்தனை வளம்தான். பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகுதொழும் என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் பாடியதற்கு இதுதான் அடிப்படை!

இப்படிப்பட்ட பெருமைகளுக்கு உரிய பெரியார் தான் மறைகிற 94 வயதிலும் மாணவனைப் போல இடைவிடாமல் புத்தகங்களை படிப்பதை கடமையாகக் கொண்டிருந்தார். முதுமை காரணமாக கண்பார்வைக் குறைவு ஏற்பட்டதை சரி செய்ய தடிமனான கண் கண்ணாடி அணிந்து படித்தார். அதன் பிறகு கையில் உருப்பெருக்குக் கண்ணாடியை (லென்ஸ்) வைத்துக் கொண்டு அதன் வழியே படித்தார். அவருடைய சட்டைப் பை, படிக்கும் போது அவர் எடுக்கும் குறிப்புத்தாள்களால் பிதுங்கி புடைத்துக் கொண்டு இருக்கும். படிக்க வேண்டும் என்பதற்கு நாம் அவரை மேற்கோளாக கொள்ள வேண்டும்; பின்பற்ற வேண்டும்.

ஞாயிறு மலர்

அவரைப் போலவே பேரறிஞர் அண்ணா! அறிவுச் செல்வங்களை திரட்டுவதற்காக சலிப்பின்றி நூல்களை தேடிச் சென்று படிக்கும் பழக்கம் உள்ளவர் அண்ணா! சென்னையில் உள்ள கன்னிமேரா நூலகத்தில் அவர் படிக்காத புத்தகமே இல்லை என்கிற அளவுக்கு படித்தது மட்டுமல்ல, அங்கு இல்லாத புத்தகங்களை திருவல்லிக்கேணி சிங்காரவேலர் மாளிகையில் தேடி அங்கும் சென்று படித்தவர் அண்ணா! வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டே இருந்தவர் அண்ணா என்பது மட்டுமல்ல, அவரைத் தாக்கிய கொடிய புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய அமெரிக்க மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது, அறுவைச் சிகிச்சைக்காக நாள் குறிப்பிடப்பட்டது. அப்போது அறுவை சிகிச்சையை ஒருநாள் தள்ளி வைக்கலாமா என்று மருத்துவர்களிடம் கேட்டார் அண்ணா. என்ன காரணம் என்று மருத்துவர் கேட்டபோது, டாக்டர் மில்லர்மேரி கரோலின் என்ற அறிஞரின் ‘Master Christian’ என்ற சிறப்பான நூலை படித்துக் கொண்டிருக்கிறேன். அதனை படித்து முடிக்கத்தான் ஒருநாள் அவகாசம் கேட்கிறேன் என்று அண்ணா பதில் அளித்தபோது, அமெரிக்க மருத்துவர்கள் அண்ணாவின் அறிவுத் தாகத்தை கண்டு வியந்து நின்றார்கள்!

பெரியார் – அண்ணா ஆகியோரைப் போல டாக்டர் அம்பேத்கர் அவர்களும் பேரறிவாளர் என்பதை உலகம் அறியும், இளங்கலை பட்டம், முதுகலையில் அறிவியல் பட்டம், லண்டன் பல்கலைக் கழகத்தில் பொருளாதார பட்டம், அமெரிக்காவிலும், கொலம்பியாவிலும், ஆஸ்மேனியாவிலும் பெற்ற நான்கு முனைவர் பட்டங்கள் இலண்டன் பல்கலைக் கழகம், மும்பை பல்கலைக் கழகம் ஆகியவைகளில் பெற்ற பட்டங்கள், வழக்கறிஞருக்கான பாரிஸ்டர் பட்டம் என கல்வியில் கரை கண்டு கற்றறிருந்த சான்றோர் என்ற சாதனை சரிதம் தீட்டியவர் டாக்டர் அம்பேத்கர்!

ஞாயிறு மலர்

மாமேதை காரல் மார்க்சும், புரட்சியாளர் லெனினும் படித்த லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியம் என்ற அறிவுக்கடலில் மூழ்கி முத்தெடுத்தவர் அறிவாளர் அம்பேத்கர். நாள்தோறும் முதல் ஆளாக உள்ளே நுழைந்து, நூலகம் முடிந்த பின் கடைசி ஆளாக வெளியே வந்தவர் அம்பேத்கர். அந்த அளவுக்கு முனைப்புடன் நூல்களை வாசித்தவர் அம்பேத்கர்!
நூலகத்திலே படித்தது மட்டுமல்ல, ‘இராஜகிருகம்’ என்ற பெயரில் தான் வீட்டைக் கட்டியபோது, கட்டடக் கலை பயின்று அதற்கேற்ப மாபெரும் நூலகத்தை அங்கே உருவாக்கினார் அம்பேத்கர்! தனது மணிவிழாவிற்காக தோழர்கள் அளித்த 1,18,000 ரூபாய் பணமுடிப்பைக் கூட, நூல் நிலையம் அமைவதற்காக நன்கொடையாக அளித்த பண்பாட்டுப் பெருமகன்தான் அம்பேத்கர். லண்டனில் கல்வி கற்றுவிட்டு தாயகம் திரும்பியபோது, அங்கு வாங்கிய புத்தகங்களை கப்பலில் அனுப்பி வைத்து, எதிர்பாராத விபத்தில், கப்பல் சிக்கி கவிழ்ந்து, அவரின் விலைமதிப்பில்லாத நூல்கள் எல்லாம் கடலில் மூழ்கிய செய்தியை அறிந்தபோது, துயரம் தாளாமல் கண்ணீர் விட்டு கதறி அழுதார் அம்பேத்கர்!

ஞாயிறு மலர்

பெரியார், அம்பேத்கர், அண்ணா ஆகிய தலைவர்களைப் போலவே புத்தகங்கள் படிப்பதை – அதன் மூலம் அறிவாற்றலைப் பெற்றுக் கொள்வதை பெரிதும் விரும்பிய இன்னொரு போராளித் தலைவர்தான் பகத்சிங்! இன்குலாப் ஜிந்தாபாத், புரட்சி ஓங்குக என்கிற முழக்கத்தை அறிமுகம் செய்து வைத்தவர் பகத் சிங்! எதேச்சதிகாரத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் குண்டு வீசி, அதற்காக மரண தண்டனையை மனநிறைவுடன் ஏற்றவர் பகத்சிங்!
தூக்குத்தண்டனைக்கு நாளும் நேரமும் குறிப்பிடப்பட்டு, அவரை அழைத்துச் செல்ல சிறை அதிகாரிகள் வந்தபோதும், பகத்சிங் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். ரசிய புரட்சியின் போராளித் தலைவரான மாவீரன் லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்” (State and Revolution) என்ற நூல்தான் அது! இதுகுறித்து சிறை அதிகாரிகளிடம், “கொஞ்சம் பொறுங்கள், ஒரு புரட்சியாளர், இன்னொரு புரட்சியாளரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்” என்று அந்த நிலையிலும் இலக்கியச் சுவையோடு பேசினார் பகத்சிங். அந்த புத்தகத்தை படித்து முடித்துவிட்டு, தூக்கு மேடைக்கு பகத்சிங் சென்றார் என்பதைப் படிக்கும்போது பகத்சிங்கின் அறிவுத்தாகமும் கற்பதில் அவர் காட்டிய பேரார்வமும் நம்மை வியப்பில் மூழ்கச் செய்கிறது!

ஞாயிறு மலர்

இதனைப் போல இன்னொரு செய்தி, பண்டித ஜவகர்லால் நேரு, பிரதமராக பொறுப்பேற்று பயணம் செய்த காலத்தில், அது விமானப் பயணமாக இருந்தாலும் கூட எப்போதும் நான்கு, அய்ந்து புத்தகங்களை எடுத்துச் செல்வார். பயண நேரத்தை வீணாக்காமல் அப்போதும் புத்தகங்களை படிக்கும் பழக்கம் கொண்டவர் நேரு. இதைப்பற்றி ஒருமுறை, நேருவின் பிரிய மகளான இந்திரா காந்தி; அரை மணி நேர பயணத்திற்காக இத்தனை புத்தகங்களை ஏன் தூக்கிச் செல்கிறீர்கள் என்று நேருவிடம் கேட்டார். “இத்தனை அறிஞர்கள் என்னோடு பயணம் செய்வதாக நான் நினைத்துக் கொள்கிறேன்” என்று அதற்குப் பதில் சொன்னார் நேரு!
அமெரிக்க நாட்டு சிந்தனையாளரான தாமஸ் ஸ்பெயின் என்பவர் எழுதிய காமன் சென்ஸ் என்ற நூல் 47 பக்கங்களை மட்டுமே கொண்ட சிறு நூல்தான். அது மூன்றே மாதங்களில் 1,20,000 பிரதிகள் விற்பனையானது மட்டுமல்ல, பிரிட்டனின் வல்லாதிக்கத்தில் இருந்து அமெரிக்கா விடுதலை பெறுவதற்கான அறிவாயுதமாக களத்தில் பயன்பட்டது அந்த நூல்!

ஞாயிறு மலர்

இத்தாலி நாட்டின் சிந்தனையாளரான மாக்கியவல்லி எழுதிய (இளவரசர்) “The Prince” என்ற நூல் மாக்கிய வல்லியின் மறைவுக்குப் பின்னர்தான் வெளிவந்தது. 20 ஆண்டுகளில் 25 பதிப்புக்கள் வெளிவருகிற அளவுக்கு விற்பனையில் சிகரம் தொட்ட அந்த நூல் இத்தாலியை ஒன்றுபடுத்தவும் வலிவுள்ளதாகவும் மாற்றியமைக்கவும் துணை நின்றது.
“Uncle Tom’s Cabin”  என்ற ஆங்கில நூல், பள்ளிக்கூட ஆசிரியையான ஹேரியட் எலிசபத் பீச்சர் என்ற அம்மையார் எழுதிய நூல், 19 ஆம் நூற்றாண்டில் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக அளவு விற்பனையான நூல் “National Era” என்ற ஆங்கில இதழில் 40 வாரங்கள் தொடராக வெளிவந்து 3 லட்சம் பிரதிகள் விற்பனையானது.

ஞாயிறு மலர்

உலக நாடுகளின் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது என பல்வேறு சிறப்புத்தன்மைகளைக் கொண்ட அந்நூல், அமெரிக்கர்களின் நிறவெறிக்கு எதிராகப் போராடிய கருப்பின மக்களின் அறிவு ஆயுதமாகப் பயன்பட்டது, உள்நாட்டுப் போரில் கருப்பின மக்கள் வாகைசூட பெரிதும் துணை நின்றது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
“பனகல் அரசரின் வரலாறு” என்ற சிறு நூல், பள்ளிகளில் துணைப் பாடமாக (Non Detailed Text) வைக்கப்பட்டு இருந்தது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மாணவனாக அந்த நூலை வகுப்பில் படித்தார். அந்த நூலில் உள்ள கருத்துகள்தான் திராவிட இயக்கத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தை என் பிஞ்சு மனதில் விதைத்தது என்று கலைஞர் அவர்கள் பலமுறை குறிப்பிட்டுள்ளார் என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஞாயிறு மலர்

எனவேதான் நண்பர்களே, புத்தகங்கள் என்பது வெறும் காகிதங்கள் அல்ல; அவை அறிவினை ஊட்டும் ஊற்று; வரலாற்றைக் கற்பிக்கும் ஆசான்; வளமான வாழ்க்கைக்கான வழிகாட்டி; சமூக அநீதிக்கு எதிரான படைக்கலன்; மனித நேயம் தழைக்கச் செய்யும் மாமருந்து என்பதை நாம் உணர்ந்திட வேண்டும். இவைகளையெல்லாம் விளக்கிச் சொல்லத்தான் இத்தகைய நூலக வார விழாக்களை நாம் கொண்டாடுகிறோம் என்பதை எடுத்துச் சொல்லி, நூலகங்களை முழுமையாக நாம் பயன்படுத்திக் கொள்வோம் என்பதை சூளுரையாக ஏற்று, என் உரையை நிறைவு செய்கிறேன்.

ஞாயிறு மலர்

– நன்றி: ‘சங்கொலி’ இதழ், 5.1.2024

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *