ஜாதிவாரி ஆய்வு தரவுகளை வெளியிட்டதன் மூலம் தேசிய அரசியலில் கருத்துக்களத்தை உருவாக்கியுள்ள பீகார் மாநிலத்தில் ஆளும் ஜே.டி.யூ. – ஆர்.ஜே.டி. கூட்டணி தற்போது மாநிலம் முழுவதும் உள்ள அடித்தட்டு மக்களிடம் இட ஒதுக்கீடு மற்றும் சமூகநீதியின் பலனை எடுத்துச்செல்ல பல திட்டங்களை வரைந்துள்ளது.
பீகார் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொது நிகழ்ச்சிகளில், இரு கட்சிகளும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் பலன்கள் பற்றியும், நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசால் ஜனநாயகம் மற்றும் அடித்தட்டு மக்களின் உரிமைகள் பறிபோய்க் கொண்டிருப்பது மற்றும் மக்களின் முன்னேற்றத்தை மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். உள்நோக்கங்களுடன் எப்படி முடக்கினர் என்றும் மக்களிடையே பரப்பத்துவங்கியுள்ளனர்.
2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, ஜாதிவாரி கணக்கெடுப்பை ஜே.டி.யூ. அதன் மாநிலம் தழுவிய திட்டமான “கர்பூரி சர்ச்சா” (கர்பூரி தாக்கூரின் சிந்தனைகள் பற்றிய விவாதங்கள்), ஆர்.ஜேடி. மூலம் அதன் “அம்பேத்கர் பரிச்சார்ச்சா” (அம்பேத்கரின் சிந்தனைகள் பற்றிய விவாதங்கள்) மூலம் இணைத்துள்ளது. பா.ஜ.க ஆட்சியில் சிறுப்பான்மையினர் இதர பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியின வகுப்பினருக்கு எதிராகக் கூறப்படும் பாகுபாடுகளை முன்னிறுத்தத் தொடங்கியுள்ளது.
மேலும், ஜாதிவாரி கணக்கெடுப்பு அதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அதை நிறைவேற்றியதில் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் பங்கை முன்னிலைப்படுத்தவும், ஜே.டி.யூ மாநிலம் முழுவதும் “முதலமைச்சருக்கு நன்றி” தெரிவிக்கும் வகையில் தொடர் நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது. முதல் நிகழ்ச்சி பாட்னாவில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதை வரும் நாட்களில் மாவட்ட அளவில் கொண்டு செல்ல அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
“ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தியதற்காக முதலமைச்சருக்கு கட்சித் தலைவர் உள்பட அனைத்துக் கட்சித் தொண்டர்களும் நன்றி தெரிவித்தனர். கர்பூரி தாக்கூர் சமூகத்தில் அடித்தட்டு மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார்; அவரின் உரிமை முழக்கத்தை நிதிஷ்குமார் அதிகாரத்தின் மூலம் நடைமுறைப் படுத்திக் கொண்டு இருக்கிறார்.
இதனை மக்களிடையே கொண்டு செல்ல அனைத்து மாவட்ட அளவில், மாநிலம் முழுவதும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. “இந்த நிகழ்வுகள் மூலம், நாடு முழுவதும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுப்போம்” என்று ஜே.டி.யூ. செய்தித் தொடர்பாளர் ரவீந்திர பிரசாத் சிங் கூறினார்.
நாட்டில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் முன்னோடியாகக் கருதப்படும் சமூகநீதிப் போராளியும் பீகார் மேனாள் முதலமைச்சருமான கர்பூரி தாக்கூரின் பெயர் சூட்டப்பட்ட, “கர்பூரி சர்ச்சாஸ்” ஆகஸ்ட் மாதம் முதலே தொடர்ந்து மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவை உறுப்பினரான கர்பூரி தாக்கூரின் மகன் ராம்நாத் தாக்கூர் உள்பட கட்சியின் மூத்த தலைவர்களின் கீழ் ஏழு தனி அணிகளை உருவாக்கியுள்ளனர். பீகாரின் 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சென்று கலந்துரையாடல் தொடரை 2024 ஜனவரி 24-க்குள் முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது கர்பூரி தாக்கூரின் பிறந்த நூற்றாண்டு விழாவைக் குறிக்கும். கர்பூரி தாகூர் திராவிடர் கழகம் நடத்திய மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்த வலியுறுத்தும் மாநாட்டிலும் பங்கு கொண்ட சமூகநீதியாளர் ஆவார்.
“இந்த நிகழ்வுகளில் நாங்கள் ஏற்கெனவே சமூக நீதிக்கான பாதையில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும், சமூகத்தில் பின்தள்ளப்பட்ட பிரிவினருக்காக நிதிஷ்குமார் தலைமையிலான அரசாங்கம் என்ன செய்துள்ளது என்பது பற்றியும் பேசி வருகிறோம். இப்போது ஜாதிவாரிக் கணக்கெடுப்பையும் அதனால், மக்களுக்குச் சேரும் பலன்களையும் திட்டத்தில் சேர்த்துள்ளோம். பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு எதிராக ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மோடி அரசாங்கம் எவ்வாறு முடக்கியது என்பதையும் நாங்கள் மக்களுக்கு நினைவூட்டுகிறோம்” என்று சிங் கூறினார்.
இந்த நிகழ்ச்சிகளின்போது கட்சி துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்கிறது, இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நிதிஷ்குமாரின் பணிகளை பட்டியலிடுவதைத் தவிர, ஒன்றிய அரசு பிற்படுத்தப்பட்ட மக்களின் உதவித்தொகை மற்றும் பிற திட்டங் களை நிறுத்தியதன் மூலம் அரசியல் ரீதியாக அவமானப்படுத்துகிறது என்று குற்றம் சாட்டுகிறது. துணை முதலமைச்சரும் ஆர்.ஜே.டி. தலைவருமான தேஜஸ்வி யாதவும் ஆதரிக்கும் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அது முன்வைக்கிறது.
ஆர்.ஜே.டி. கிராமசபைகளை ஏற்பாடு செய்து, அதன் மூலம் ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசி வருகிறது. “இந்தக் கூட்டங்களில் நாங்கள் சமூக நீதியைப் பற்றி பேசுகிறோம் – மிகவும் பின்தங்கிய வகுப்பினரை எப்படி மய்ய நீரோட்டத்திற்குக் கொண்டு வருவது. நாடு தழுவிய ஜாதிவாரிக் கணக்கெடுப்பை ஒன்றிய அரசு எப்படி முடக்கி வருகிறது, எப்படி ஜாதிவாரி கணக்கெடுப்பைக் கொண்டு வந்தோம் என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கிறோம்” என்று பீகார் ஆர்.ஜே.டி. செய்தித் தொடர்பாளர் மிருத்யுஞ்ஜெய் திவாரி கூறினார்.
விரைவில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளுடன் கலந்தா லோசனை செய்து இந்தியா முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களின் சமூகநீதி முழக்கத்தைக் கொண்டு செல்ல தேசிய அளவில் விரைவில் குழு ஒன்று உருவாக்கப்படும் என்று நிதீஷ்குமாரின் அய்க்கிய ஜனதாதளம் மற்றும் லாலுபிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளன.
இந்த வகையில் இந்தியாவுக்கே பீகார் மாநிலம் வழி காட்டுகிறது – வரவேற்கிறோம் – மற்ற மற்ற மாநிலங்களும் இதனைப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.