சனாதனச் சரக்கு நம்முடையதல்ல!

Viduthalai
4 Min Read

சனாதனச் சரக்கை தமிழ்நாட்டுக் கடைகளில் விற்க வந்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.இரவி, இதனை ‘தமிழ்நாட்டுத் தயாரிப்பு’ என்று சொல்வதைப் பார்க்கும்போது கோபம் கொப்பளிக்கிறது.

* பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் – என்பதுதான் தமிழர் தம் அறநெறியாகும்!

* இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான் – என்பதுதான் தமிழர் தம் அறநெறியாகும்! 

* தெய்வத்தாற் ஆகாது எனினும் முயற்சிதன் மெய் வருத்தக் கூலி தரும் – என்பதுதான் தமிழர் தம் அறநெறியாகும்! 

* ஜாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறி முறையின் – மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டங்கிலுள்ள படி – என்பதுதான் தமிழர் தம் அறநெறியாகும்! 

* ஜாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே ஆதியிலே அபிமானத்து அலைகின்ற உலகீர் அலைந் தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே! – என்பதுதான் தமிழர்தம் அறநெறியாகும்!

இவை எதுவும் தெரியாமல், சனாதனத்தை தமிழன் வீட்டுத் தொழுவத்தில் கட்ட முயற்சிக்கிறார் ஆளுநர். சனாதனம் பிரிக்காதாம். சேர்க்குமாம். இதுவும் அவரது கண்டுபிடிப்பு தான். இவர் பேசிய இடம் திருவையாறு தியாகராயர் ஆராதனை விழா. அங்கேதான் 1946 ஆம் ஆண்டு என்ன நடந்தது என்பதை அறிவாரா ஆளு நர்? இதற்குத்தான் அவர் முத்தமிழறிஞர் கலைஞரின் எழுத்துகளைப் படிக்க வேண்டும்.

‘தீட்டாயிடுத்து… தீட்டாயிடுத்து’ என்று ‘குடிஅரசு’ இதழில் 22 வயதில் கட்டுரை தீட்டினார் கலைஞர் அவர்கள்.

“இந்த ஆண்டு (1946) திருவையாறில் நடைபெற்ற தியாகராஜ அய்யர் உற்சவத்தில், இசையரசு தண்ட பாணி தேசிகர் ஆரம்பத்தில் “சித்தி விநாயகனே” என்ற பாட்டைப் பாடினாராம். அடுத்தபடி கச்சேரி செய்ய வந்த அரியக்குடி ராமானுச அய்யங்கார், “தேசிகர் தமிழ் பாடி சன்னிதானத்தைத் தீட்டுப்படுத்திவிட்டார். நான் இந்த மேடையில் பாட மாட்டேன்” என்று கூச்சலிட்டுத் ‘தாம்தோம்’ எனத் தாண்டிக் குதித்தாராம்.

இது இன்று நேற்றல்ல; மனுமாந்தாதா காலத்திலிருந்து ‘தமிழ் பாஷை நீச்ச பாஷை’ என்றும், ‘பிராமணாள் ஸ்நானம் செய்து விட்டு சாப்பிடும் வரை தமிழ் பேசக்கூடாது’ என்றும், ‘வீட்டில் விசேஷ காலங் களில் தமிழ் வாயில் நுழையக்கூடாதென்றும்’ கூறி வந்ததோடு அனுஷ்டானத்திலும் இருந்து வருகிறது.” என்று எழுதினார் கலைஞர் அவர்கள்.

“தமிழ்நாட்டிலே – தமிழர்கள் உயிரோடு வாழும் நாட்டிலே -தமிழர்களுடைய மொழிக்குத் தடையுத் தரவு! ஆங்கில அரசாங்கமல்ல – ஆரிய அரசாங்கத்தின் ஆணை! தமிழ் மொழியில் பாடியதால் மேடை தீட்டாகிவிட்டது என்ற ஆணவப் பேச்சு கிளம்பிய தற்குக் காரணம் தமிழர்கள் அடிமைகளாக – வாழ்வது தான், தமிழர் இனம் சூத்திர இனமாகவும், தமிழர் மொழி தீட்டுப்பட்ட மொழியாகவும் போய்விட்டது. இவர்களுக்கு நன்கொடை வழங்கும் விபீஷணர்களும் உள்ளவரை இந்த வர்க்கம் இப்படித்தான் வாழும்.” என்று கடுமையாக எழுதி இருப்பார் கலைஞர் அவர்கள்.

இது எதுவும் தெரியாமல் சனாதனம் குறித்து தமிழ் மக்களுக்கு விளக்கம் அளிக்கப் புகுந்துள்ளார் ஆளு நர் அவர்கள்.

நால் வர்ணமாக மனிதர்களைப் பிரித்தது தமிழ் நெறிகள் அல்ல. இந்த சதுர் வர்ணத்துக்கு அளவீடு களையும் புனிதங்களையும் புகுத்தியதும் நம் முன் னோர்கள் அல்ல. இதுதான் வேதகாலத்து நெறி. இவர்கள் ‘புனிதம்’ என்று சொல்லிக் கொள்ளும் நெறி. மீண்டும் உருவாக்க நினைக்கும் நெறி. தொழில் அடிப்படையான வேறுபாடுகளைச் ஜாதியாக்கி, அதனை புனிதமாக்கியது ஆரியம்.

“ஜாதி முறையை விடவும் கீழ்த்தரமான சமூக அமைப்பு எங்கும் இருக்க முடியாது. இந்த அமைப்பு, மக்களைச் செத்தவர்களாக்கி, முடக்கி நொறுக்கி அவர் களை உதவி பெற முடியாமல் தடுக்கும் அமைப்பு. ஜாதி அமைப்பு வளம் பெற்று வளர்ந்த காலம்தான் வரலாற்றில் தோல்வியும், இருளும் சூழ்ந்த காலம். நாட்டின் மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் மீளாக் கீழ்மையில் துன்புற்ற காலம்” என்று எழுதினார் அம்பேத்கர் அவர்கள்.

ஜாதியும் வர்ணமும் வேதங்களாலும் ஸ்மிருதி களாலும் உருவாக்கப்பட்டவை என்பதை பல்வேறு ஆதாரங்களுடன் எழுதியவர் அம்பேத்கர் அவர்கள். இதனைக் கேள்வி கேட்க முடியாது என்று சொல்லி வைத்திருந்தார்கள்.

ஆனால் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதை அறிவாக வலியுறுத்தியது தமிழ் நெறியான வள்ளுவம். இத்தகைய அறிவுலகத்தில் ஆரியம் விதைத்த விதையே சனாதனம், வர்ணாசிரமம், ஜாதி உயர்வு – தாழ்வுகள். இதில் இருந்து விழிப்புணர்ச்சி அடைவதற்கு பல நூறு காலம் ஆனது. அத்தகைய விழிப்புக்கு வித்திட்டது நீதிக்கட்சி. அடிமைத்தனத்தின் வேர் எது என நாம் உணர்ந்தோம். உயர்வு பெற்றோம். இந்த உயர்வைச் சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

எனவே, பழைய அடிமைச்சங்கிலியைச் சுற்றிலும் பூச்சுற்றத் தொடங்கி இருக்கிறார்கள். அதுதான் சனாதனத்துக்குத் தவறான பொருள் சொல்லும் தந்திரத்தின் பின்னணி.

ஆய்வாளர் பொ. வேலுசாமி, ஒரு செய்தியை இணையத்தில் பதிவிட்டுள்ளார். “சநாதன தர்மம்” என்று கூறப்படும் அடிமைச் சாசன விதிகளை மனுநீதி, பகவத்கீதை, மகாபாரதம், இராமாயணம் போன்ற பல நூல்களிலிருந்து தொகுத்து 1905லும் 1907லும் இரண்டு நூல்களாக வெளியிட்டுள்ளார்கள். அதில் சூத்திரர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட அடிமை வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அந்தப் புத்தகத்தில் பக்கம் 278 இல் உள்ளது என்று சொல்லி அந்தப் புத்தகங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் பொ.வேலுசாமி.

‘ஒரு காலத்தில் ஏகலைவனின் கட்டை விரலைக் காணிக்கையாகக் கேட்டார்கள். ஆனால் இன்று வாழ்க் கையையே கேட்கிறார்கள்’ என்றார் முத்தமிழறிஞர் கலைஞர்.

கட்டை விரலாக இருந்தாலும் – வாழ்க்கையாக இருந்தாலும் கேட்பவரை எதிர்க் கேள்வி கேட்கும் விழிப்பு உணர்ச்சி இன்று தமிழ்ச்சமுதாயத்தில் உருவாகி விட்டதால் பசப்பு வார்த்தைகள் செல்லுபடி ஆகவில்லை.

எதைச் சொன்னாலும் கன்னத்தில் போட்டுக் கொண்டு கேட்ட காலம் மலையேறிவிட்டது. இது; காதைத் திருகி எதிர்க் கேள்வி கேட்கும் காலம்!

நன்றி: ‘முரசொலி’, தலையங்கம் – 14.1.2023

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *