“ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன்”

Viduthalai
2 Min Read

செய்தி : அரசியல் மற்றும் பொது வாழ்வில் நேர்மைக்கான “காயிதே மில்லத் விருது” தமிழர் தலைவருக்கு அளிப்பு – “விருதுத் தொகை ரூ.2.5 லட்சத்தை பெரியார் உலகத்திற்கு அளிக்கிறேன்!” தமிழர் தலைவர் அறிவிப்பு!

“அரசியல் என்றால் கொஞ்சம் அப்படி இப்படித் தான் இருப்பார்கள். பொது வாழ்க்கை என்றால் சில விசயங்களில் கண்டும் காணாமலும் போக வேண்டியது தான்” என பலர் சொல்வார்கள். அப்படித் தான் நடப்பார்கள். அரசியலில் மிகப் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் கூட “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” என்பார்கள்.

ஆனால் அன்றையிலிருந்து இன்று வரைக்கும் ஏற்றுக் கொண்ட கொள்கைகளில் சற்றும் விலகாமல் – ஏற்றுக் கொண்ட தலைவர் தந்தை பெரியார் வழியில், இன்று வரை “சமரசம்” செய்து கொள்ளாமல் வாழ்ந்து காட்டி வருபவர் திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஒருவர் தான்.

தமக்கு வரும் எல்லாப் புகழும் “தந்தை பெரியாருக்கே!”, தனக்கு வரும் எல்லா நன்கொடைகளும், பொருட்களும், “பெரியார் உலகத்திற்கே” என்று இன்று வரை  வாழ்ந்து காட்டியும், எங்களுக்கு வழி காட்டியாகவும், விளங்கும்  ஆசிரியர் அவர்கள் தான் தமிழர்களுக்குக் “கலங்கரை விளக்கம்”.

காயிதே மில்லத் கல்லூரியில் தேசிய மொழி என்றால், எல்லா வளமும் பெற்ற “தமிழ் மொழி தான்” என்று காயிதே மில்லத் அவர்கள் குறிப்பிட்டதாக ஆதாரத்துடன்  தெரிவித்துள்ளார்.  கண்ணியம் மிக்க காயிதே மில்லத் அவர்கள் இறந்த போது அந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பெரியார், அன்று அவருக்கு இருந்த பொதுக்கூட்டத்தை தவிர்த்து விடலாமா என்றிருந்த நிலையில், கனத்த மனதோடு, அதே நேரத்தில் துணிச்சலாக காயிதே மில்லத்தின் “நினைவேந்தலாக” முதன் முதலில் நடத்திக் காட்டினார். இம்முறை இன்றளவும் நடந்து வருகிறது என்ற இச்செய்தி இன்றைய இளைஞர்களுக்குப் புதிய செய்தியாகும்.

அன்று சாக்ரடீஸ், பட்டப் பகலில் விளக்கை ஏந்திக் கொண்டு நேர்மையான மனிதரைத் தேடினார். எவரும் கிடைக்கவில்லை. ஆனால் இன்று, கண்ணியமிக்க காயிதே மில்லத் கல்லூரியில் உள்ளவர்கள் நேர்மையான மனிதரைக் கண்டு, ஆசிரியர் அவர்களுக்குப் பரிசளித்ததற்கு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும். அதுபோல் அவரோடு சேர்ந்து நாங்கள் பணியாற்றும் போது எங்கள் மீதும் மணம் வீசுகிறது.

“திராவிடத்தைப் பற்றி அறியாதது புரியாதது அனைத்தும் புரிய வைக்கும் இடம்,  தாங்கள் பயணிக்கும் “பரப்புரை இடம்” தான்! தந்தை பெரியார் இட்ட பணியை தாங்கள் முடிப்பீர்கள்… தாங்கள் இட்ட பணியை நாங்கள் முடிப்போம்.”

“ஊரெங்கும் தேடினோம், உலகெங்கும் தேடினோம். கிடைத்த ஒரு தலைவர் தான் – தமிழர் தலைவர்’

வாழட்டும் திராவிடம்!

வீழட்டும் ஆரியம்!! 

– த.வானவில்

மாவட்ட தலைவர், திராவிடர் கழகம் ஆத்தூர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *