புதுடில்லி, ஆக. 28- ஊடகத் துறை தொழிலதிபரும் பாஜக மாநிலங்களவை உறுப்பினருமான சுபாஷ் சந்திரா, வங்கியிலிருந்து வாங்கிய மிகப்பெரிய அளவிலான கடனைத் தீர்க்க முன்வைத்த குறைந்தபட்ச மீட்புத் திட்டத்திற்கு தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்துள்ளது.
சுபாஷ் சந்திராவுக்கு நிலுவை யில் உள்ள மொத்த தனிநபர் கடன் தொகையான ரூ.22,006.57 கோடியைத் தீர்ப்பதற்கு, அவர் வெறும் ரூ.6.5 கோடியை மட்டும் செலுத்தும் திட்டத்தை முன்மொழிந்திருந்தார். இதன்படி, கடன் வழங்கிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்களின் கடனில் 99.97% தொகையை தள்ளுபடி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
என்சிஎல்டி (NCLT)இன் மூன்று பேர் கொண்ட அமர்வில், நீதிபதி நிலேஷ் சர்மா இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டார். கடன் வழங்கிய நிறுவனங்கள் மீட்கப்படும் தொகை மிகக் மிகக் குறைவு என எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் தீர்ப்பாயம் அதை நிராகரித்தது. குறிப்பாக, எல்.அய்.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் சுபாஷ் சந்திராவுக்கு வழங்கிய ரூ.1,322.39 கோடி கடனில், இந்தத் திட்டத்தின் மூலம் அவர்களுக்கு வெறும் ரூ.38.09 லட்சம் (0.028%) மட்டுமே திரும்பக் கிடைக்கும் என்பதால் கடுமையாக எதிர்த்தது. ஒப்புதலுக்கான காரணமும் சட்ட விதியும் எதிர்ப்பு தெரிவித்த கடன் நிறுவனங்களின் மொத்த வாக்கு உரிமை 20%-க்கும் குறைவாகவே இருந்தது.
தனியார் வங்கி நிறுவனங்கள்
அதேவேளையில், 80.81% வாக்கு உரிமை கொண்ட பெரும் பான்மை கடன் வழங்கிய தனியார் வங்கி நிறுவனங்கள் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால், திவால் சட்டம் 114இன் கீழ் தீர்ப்பாயம் இதற்கு அனுமதி வழங்கியது.
சுபாஷ் சந்திராவின் தனிப் பட்ட சொத்துக்களின் மதிப்பு அவர் கொடுப்பதாகக் கூறியுள்ள தொகையை விட மிகவும் குறைவாக உள்ளதாகவும், ஒருவேளை அவரை திவாலானவராக அறிவித்தால் கடன் கொடுத்தவர்களுக்கு இதைவிடக் குறைந்த தொகையே கிடைக்கும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்ததை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொண்டது. கடன் திவால் சட்ட விதிகளின் படி தீர்பாயம் ஒப்புதல் அளித்து விட்டதால், இத்தீர்ப்பு ஆதரவு தெரிவித்த மற்றும் எதிர்ப்பு தெரிவித்த அனைத்து கடன் நிறு வனங்களுக்கும் இறுதியானது மற்றும் கட்டுப்படுத்தக்கூடியது ஆகும்.
