புதுடில்லி, ஆக.24 ஒன்றிய அமைச்சர்களின் டில்லி வீடுகளைப் பழுதுபார்க்க 2025-2026-ஆம் ஆண்டில் ரூ.92 கோடி செலவிடப் பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
2014 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியமைந்ததில் இருந்து 2025-2026ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட பத்தாண்டு காலத்தில் ஒன்றிய அமைச்சர்களின் தில்லி இல்லங்களைப் பழுதுபார்த்தல், புதுப்பித்தல், பராமரிப்புப் பணிகளுக்காக சுமார் ரூ. 547.68 கோடியை ஒன்றிய பொதுப்பணித்துறை செலவிட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளியான தகவலின்படி, 2014 முதல் 2019 வரை, மேம்பாட்டுப் பணிகளுக்காக ஆண்டுக்குச் சராசரியாக ரூ. 26.78 கோடி செல விடப்பட்டிருக்கிறது.
அதன்பின்னர், 2019 முதல் 2024 வரை சராசரியாக ஆண்டுக்கு ரூ. 50 கோடியாக உயர்ந்தது. அதைத்தொடர்ந்து 2024-2–025-இல் ரூ. 71.98 கோடியாகவும், 2025-2026-இல் ரூ. 92.35 கோடியாகவும் உயர்ந்திருக்கிறது.
எலெக்ட்ரிக் வயர்கள் பாதிப்பு, கரையான் அரிப்பு, குழாய்கள் மாற்றுதல் உள்ளிட்ட பிரச்சினைகள், 80 முதல் 100 ஆண்டுகள் பழமையான கட்டடங்கள் என்பதால் இடித்து புதியதாக கட்டப்படும் திட்டம் இருந்ததாகவும் அதன்பின்னர் அந்தத் திட்டம் கைவிடப்பட்டாதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒன்றிய அமைச்சரவையில் பொதுவாக சுமார் 70 முதல் 72 அமைச்சர்களும், இணை அமைச்சர்களும் இருக்கின்றனர். கடந்த நிதியாண்டில் ரூ.92.35 கோடியாக இருந்த நிலையில், ஒரு அமைச்சரின் இல்லத்துக்கு சராசரி செலவு சுமார் ரூ.1.2 கோடியாக அதிகரித்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.

