மவ்மேரே, ஆக. 16- இந்தோனேஷியா வின் கடற்கரைக்கு அருகே நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 47 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்தனர். காணாமல் போன இரண்டு பேரை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்தோனேஷியாவின் ப்ளோரஸ் பிராந்தியத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.7 புள்ளிகளாக பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள எண்டே நகரத்திற்கு வடமேற்கே 68 கி.மீ.தொலைவில் சுமார் 10.கி.மீ. ஆழத்தை மய்யமாக கொண்டு நிலநடுக்கம் உருவாகி இருந்தது. இதனால், இந்தோனேஷியாவின் பல பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கின.
நிலநடுக்கத்தினால் பீதி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து நிலஅதிர்வுகளும் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் காரணமாக கடுமையான சேதங்கள் ஏற்பட்டு கட்டடங்கள் இடிந்து விழுந்தன. கடுமையாக பாதிக்கப்பட்ட சிக்கா மற்றும் மேற்கு மங்கராய் மற்றும் கிழக்கு மங்கராய் உட்பட பாதிக்கபட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 47 பேரின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். பலத்த காயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போன இரண்டு பேரை மீட்பு குழுவினர் இடிபாடுகளில் தேடி வருகின்றனர். ஏராளமான நகரங்கள் மற்றும் கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தகவல் பரிமாற்றம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாகேகியோ பகுதியை சேர்ந்த சுமார் 2000 கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிக முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெருப்பு வளையத்தில் இந்தோனேஷியா
17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட பரந்த தீவுக்கூட்டமான இந்தோனேஷியா, பசிபிக் பெருங்கடலில் உள்ள ‘நெருப்பு வளையத்தில்’ அமைந்துள்ளது. இது பூமித்தகடுகள் ஒன்றோடொன்று மோதும் அதிதீவிர பகுதியாகும். இதனால், இப்பகுதியில் எரிமலை வெடிப்புகள், பயங்கர நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுவதுண்டு.
1992இல் இந்தோனேஷியாவின் புளோரஸில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்தி 2,500 பேரைக் கொன்றது. 2018இல், ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆகப் பதிவான நிலநடுக்கம், 4,400-க்கும் மேற்பட்டோரைக் கொன்றது. டிசம்பர் 2004இல், மேற்கு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட ரிக்டர் அளவுகோலில் 9.1 ஆகப் பதிவான மாபெரும் நிலநடுக்கம், இந்தியா உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட நாடுகளில் 2.3 லட்சம் பேரைக் கொன்ற பெரும் சுனாமியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
