உயர்ஜாதி ஏழைகள் உண்மையில் பின்தங்கியவர்களா?

Viduthalai
6 Min Read

பராக்ரம் கக்கர் தேர்தல் பிரச்சார வல்லுநர்

தொகுப்பாசிரியர்: சு.விஜயபாஸ்கர்

அரசியல்

இதை ஒரு “வெற்றுச் சவடால்” என்றோ அல்லது “ஆகச் சிறந்த அரசியல் தந்திரம்” என்றோ சொல்லலாம். ஆனால் மறுக்க முடியாத உண்மை என்னவென்றால், அவசர கதியில் நிறைவேற்றப்பட்ட 10% EWS இடஒதுக்கீட்டுச் சட்டம் இந்தியாவின் சமூகநீதிக் கொள்கையின் அடிப்படைக்கே முற்றிலும் எதிரானது. உயர்ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் EWS சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்தில் பெரும் ஆரவாரத்தோடு அறிமுகப்படுத்திய ஒன்றிய அமைச்சர் அருண் ஜெட்லி, 10% EWS இடஒதுக்கீட்டிற்கான அரசிய லமைப்புச் சட்டத்திருத்தம் நீதித்துறையின் மறு ஆய்வுக்குச் சென்றால் உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளக்கூடிய பல நுணுக்கங்கள் குறித்து அவர் அமைதியாகவே இருந்தார்.

நரசிம்மராவ் அரசு தான் இந்த உயர்ஜாதி இடஒதுக்கீட்டின் முன்னோடி. 1991இல் நரசிம்மராவ் அரசு, அரசின் கீழ் உள்ள அனைத்துத் துறைகளிலும் 10% காலியிடங்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்ஜாதியினருக்கு ஒதுக்கப்படும் என்று அரசாணை வெளியிட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் அதை உடனடியாகத் தடை செய்துவிட்டது. இடஒதுக்கீடு என்பது ஜாதியை மட்டும் அடிப்படையாகக் கொண்டதாக இருக்க முடியாது, அது போலவே பொருளாதாரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்க முடியாது என்றும் கூறியது. இதன் மூலம் வறுமை மட்டுமே பின்தங்கிய நிலைக்கான அளவுகோலாக இருக்க முடியாது என்று தெளிவுபடுத்தியுள்ளது.

இதற்கு முன்பு பொருளாதாரப் பின் தங்கிய நிலையைக் கண்டறிய நில உரிமையும் வருமானமும் அளவுகோல்களாக இருந்தன. உதாரணமாக, 2014இல் ஜாட்களுக்கு UPA-II  அரசு இடஒதுக்கீடு வழங்கியதை எடுத்துக் கொள்வோம். 2014 பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முந்தைய நாள், UPA அரசு ஒன்பது மாநிலங்களைச் சேர்ந்த ஜாட்களை ஒன்றிய  OBC இடஒதுக்கீட்டுப் பட்டியலில் சேர்த்தது.

இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பு, மண்டல் கமிஷன் அறிக்கை ஆகியவற்றின் பின்னணியில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (NCBC) உருவாக்கியுள்ள வழிகாட்டுதல் நெறி முறைகளுக்கு முற்றிலும் முரணாக ஜாட்களுக்கு இடஒதுக்கீடு தரப்பட்டது. இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகள்தான் இன்று OBC இடஒதுக்கீடுகளை வழங்குவதற்கான அளவுருக்களை (indicators) உருவாக்குகின்றன. இவற்றின்படி, தன்னளவில் தனித்தனி குறியீடுகளைக் கொண்ட “சமூகப் பின்தங்கிய நிலை”, “கல்வியின் நிலை” “பொருளாதார நிலை” ஆகிய மூன்றும் 3:2:1 என்ற ஒப்பீட்டு மதிப்பின் அளவில் OBC இடஒதுக்கீட்டின் ஆதார மய்யமாக விளங்குகின்றன.

2% மாதிரி கணக்கெடுப்பு மூலம் ஜாட்களின் சமூகப்பொருளாதார நிலையை ஆய்வு செய்ய ஒரு நிபுணர் அமைப்பாக இந்தியச் சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலை ழிசிஙிசி ஈடுபடுத்தியது. அதன்படி இந்தியச் சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வின் மூலம் “ஜாட்”கள் சமூகத்தில் பின்தங்கியவர்கள் இல்லை என்பது கண்டறியப்பட்டது. அவர்கள் கல்வியில் பின்தங்கியவர்கள் அல்ல என்றும்,

பொது வேலைவாய்ப்பு, இராணுவம், அரசு சேவைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் போதுமான பிரதிநிதித்துவம் உள்ளவர்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாழ்வாதாரத்திற்காக கூலி உழைப்பைச் சார்ந்திருத்தல், குழந்தை இறப்பு விகிதம், பிரசவத்தில் தாய் இறப்பு விகிதம், வீட்டிலேயே பிரசவம் பார்த்தல் போன்ற முக்கிய அளவுருக்களைக் கொண்டுள்ள சமூகப் பின்தங்கிய நிலைக்கான அளவுகோலில் ஜாட்கள் மிகவும் நல்ல நிலையில் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இந்தக் காரணங்களைக் கூறி, ஜாட் இடஒதுக்கீட்டை 2015இல் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்திரா சஹானி வழக்குத் தீர்ப்பின் மய்யப் புள்ளியே பின்தங்கிய நிலையை ஆய்ந்து அறிய கட்டமைக்கப்பட்ட நிபுணர் குழு தான். தற்போதைய நிலையில் 10% அரிய வகை ஏழைகளின் உண்மையான பின்தங்கிய நிலையைக் கண்டறிவது இன்றியமையாததாகும்.

அரசமைப்புச் சட்டப்பிரிவு 15(4) இவ்வாறு கூறுகிறது:

“இந்தப் பிரிவோ அல்லது பிரிவு 29இன் உட்பிரிவு (2) ல் உள்ள எதுவும் சமூகரீதியிலும், கல்வியிலும் பின்தங்கிய குடிமக்கள் அல்லது பட்டியலின, பழங் குடியினரின் முன்னேற்றத்திற்காக அரசு மேற்கொள்ளும் எந்தவொரு சிறப்பு ஏற்பாடுகளையும் தடுக்காது”

மேற்குறிப்பிட்ட பிரிவு சமூக நிலையையும், கல்வி நிலையையும் அளவுகோல்களாகத் தெளிவாக குறிப்பிட்டாலும், பொருளாதார நிலையை ஒரு அளவுகோலாகக் குறிப்பிடவில்லை. இந்த இடைவெளியைத் தான் பாஜக அரசு நிரப்ப முயல்கிறது. சமூக நிலை, கல்வி, பொருளாதாரம் ஆகிய மூன்றும் பின்தங்கிய நிலையைத் தீர்மானிப்பதற்கான அடிப்படை அளவுகோல்கள். இவற்றில் ஒன்றைவிட்டு மற்றொன்றின் வழியாக மட்டும் பின்தங்கிய நிலையைத் தீர்மானிக்க முடியாது

அரசமைப்புச் சட்டப்பிரிவு 16(4) இவ்வாறு கூறுகிறது:

“அரசின் கருத்துப்படி, அரசின் கீழ் உள்ள சேவைகளில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாத பிற்படுத்தப்பட்ட குடிமக்களுக்கு ஆதரவாக நியமனங்கள் அல்லது பதவிகளில் இடஒதுக்கீடு வழங்கு வதற்கான எந்த ஏற்பாடுகளையும் இந்தப் பிரிவில் உள்ள எதுவும் தடுக்காது”

மண்டல் கமிஷன் அறிக்கை, இந்திரா சஹானி தீர்ப்பு ஆகியவை இணைந்து ளிஙிசி வகுப்பினரின் பிற்படுத்தப்பட்ட நிலையைக் கண்டறியும் அளவுகோலை வரையறுத்தது போன்று, இன்று உயர்ஜாதியினரின் பின்தங்கிய நிலையை வரையறுக்காமல் OBC சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. ஆண்டுக்கு ரூ. 8 இலட்சத்திற்கும் குறை வாகவும், 1000 சதுர அடிக்கு குறைவான வீடும், அய்ந்து ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் எண்ணிக்கை பொதுப் பிரிவினரில் 90 விழுக்காடாக இருப்பதற்கு அதிகபட்ச சாத்தியங்கள் உள்ளன.

அரசுப் பணிகளில், கல்வி நிறு வனங்களில், இராணுவத்தில் இந்த 10% OBC இடஒதுக்கீடு பெறும் மக்களின் பிரதிநிதித்துவம் என்னவாக இருக்கிறது என்பதை ஆய்ந்து அறிவது அவசியம். அப்படியான ஆய்வுகள் நடத்தப்படாததினாலேயே 8 இலட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள அனைத்துக் குடும்பங்களையும் ஒரே மாதிரியான வகுப்பாகக் கருத முடியாது.

இந்தக் குறியீடுகள் வரையறுக்கப்பட வேண்டாமா? ஆம் எனில், அவற்றை வரையறுக்க பொருத்தமான நிறுவனம் எது? இந்த உயர்ஜாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு மட்டுமே தீர்வா? கல்விக் கட்டணங்கள் தள்ளுபடி, உதவித்தொகைகள் அல்லது பிற நலத்திட்டங்கள் வழங்குவது போன்ற சட்டப்பூர்வமான மாற்றுத் தீர்வுகளாக இருக்க முடியாதா?

OBC இடஒதுக்கீட்டுச் சட்டத் திருத்தத்தை அறிமுகப்படுத்தி, அது குறித்து நாடாளுமன்றத்தில் வாதிட்ட ஒன்றிய அமைச்சர் அருண்ஜெட்லி 50% இடஒதுக்கீடு உச்சவரம்பு “பொதுப் பிரிவுக்கு” பொருந்தாது என்றார். வேடிக்கை என்னவென்றால், இடஒதுக்கீட்டில் வராத பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டைப் பரிந்துரைத்த குஜராத் மாநில அரசின் வாதம்தான் இது.

50% இடஒதுக்கீட்டு உச்சவரம்பு விதி SC, ST, OBC இடஒதுக்கீடுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்ற குஜராத் அரசின் வாதத்தை குஜராத் உயர்நீதிமன்றம் நிராகரித்தது. மய்ய நீரோட்டத்திலிருந்து விலகி பார தூர தொலைவின் விளிம்பில் வாழும் மக்களுக்கு வேண்டுமானால் அசாதாரண வழக்காக கருதி 50% உச்ச வரம்பைத் தளர்த்த முடியும். ஆனால் இந்த வழக்கு அப்படியானது ஒன்றுமில்லை என்று சொல்லி குஜராத் அரசின் அவசர சட்டத்தைத் தள்ளுபடி செய்தது. மேலும் இந்த 10% மக்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளை அறிவியல் பூர்வமாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் நிபுணர் குழு ஏதும் ஆய்வு நடத்தி எழுத்துப்பூர்வ தரவுகளைத் தந்துள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஆனால் பதில்தான் இல்லை.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையின் அடிப்படையில் ஒரு வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது மாநில அரசின் அதிகார வரம்புக்குட்பட்டது என்று இந்திரா சஹானி வழக்கில் கூறிய உச்ச நீதிமன்றம், ஆனால் அத்தகைய வகுப்பினரின் பிரதிநிதித்துவமின்மையைக் கண்டறியக்கூடிய சரியான வழிமுறைகள் அரசிடம் இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்றும் கூறியுள்ளது. நம் முன்னால் இருக்கும் கேள்வி என்ன வென்றால், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்ஜாதியினர் என்று அழைக்கப்படுபவர்களின் பிரதிநிதித்துவப் பற்றாக்குறையை எந்த நிறுவனம் கண்டறிந்தது? இதற்கும் பதில் இல்லை.

அரசியலில், ஜாதி முக்கியப் பங்கு வகிக்கலாம் அல்லது இல்லாமலிருக்கலாம், ஆனால் அரசியலும் அரசமைப்புச் சட்டத்தை அமல்படுத்துவதும் ஒரே மாதிரியானவை அல்ல என்பதை மிகச் சரியாக மண்டல் கமிஷன் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இன்று, பாஜக அரசு அரசமைப்புச் சட்டத்தைப் புறக்கணிக்கும் போது இந்த ஆதார விதியை அவர்களுக்கு நினைவூட்டுவது முக்கியம்.

[பராக்ரம் கக்கர், தேர்தல் பிரச்சார நிறுவனமான  IPAC நிறுவனத்தில் பணியாற்றியவர், பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேச தேர்தல் பிரச்சாரங்களில் பணியாற்றியுள்ளார். 

நன்றி: thewire.in இணையதளம், 2019, ஜனவரி 10 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை. தமிழ் மொழியாக்கம்: கீற்று பாஸ்கர் ]

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *