சென்னை, மே 27 டில்லியில் நேற்று (26.5.2026) நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51-ஆவது கூட்டத்தில், தமிழ்நாட்டின் சார்பில் நீர்வளத்துறை செயலாளரும், ஆணைய உறுப்பினருமான சத்யபிரதா சாகு தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாகக் கலந்து கொண்டார். ஆணையத்தின் தலைவர் ஹல்தார் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு உறுப்பினர் சத்யபிரதா சாகு கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார் அதன் விவரம் வருமாறு:
மேட்டூர் அணை நிலவரம்
தற்போது மேட்டூர் அணையின் நீர் இருப்பு 40.742 டி.எம்.சி. ஆக உள்ளது.
குடிநீர், தொழிற்சாலை பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் நீர் ஓட்டத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 1,003 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
கருநாடகாவின் ‘உபரி நீர்’
வாதத்திற்கு எதிர்ப்பு
வாதத்திற்கு எதிர்ப்பு
நடப்பு நீர்பாசன ஆண்டில் (2025-2026), 2025 ஜூன் 1 முதல் 2026 மே 24-ஆம் தேதி வரை பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரின் அளவு 176.685 டி.எம்.சி. ஆகும்.
ஆனால், மிகை நீர் (உபரி நீர்) உட்பட தமிழ்நாட்டிற்கு கிடைத்த மொத்த நீரின் அளவு 329.166 டி.எம்.சி. ஆகும்.
இதனைச் சுட்டிக்காட்டி, தாங்கள் அளித்த மிகை நீரையும் கணக்கில் கொள்ள வேண்டும் என கருநாடக உறுப்பினர் கோரினார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு உறுப்பினர், “கருநாடகா தனது நீர்த்தேக்கங்களில் தேக்க முடியாமல் வெளியேற்றிய உபரி நீரினை, அவர்கள் வழங்கிய நீராக சொந்தம் கொண்டாட முடியாது; அதை ஏற்றுக்கொள்ள இயலாது” என்று திட்டவட்டமாக வலியுறுத்தினார்.
ஜூன் மாத தண்ணீரை
உறுதி செய்யக் கோரிக்கை
உறுதி செய்யக் கோரிக்கை
இந்திய வானிலை ஆராய்ச்சி மய்ய அறிக்கையின்படி, 2026 மே 26 அன்று தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பருவமழை இயல்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் கருநாடக அணைகளின் நீர் வரத்தைக் கருத்தில் கொண்டு, ஜூன் மாதத்தில் தமிழ்நாட் டிற்கு வழங்கப்பட வேண்டிய 9.91 டி.எம்.சி நீரை, உச்ச நீதிமன்ற ஆணையின்படி கருநாடகா பில்லிகுண்டுலுவில் வெளியிடுவதை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
