சென்னை, மே 20- அரசுப் பேருந்துகளை இயக்கும் போது ஓட்டுநர்கள் கைப்பேசிகளை வைத்திருக்கவோ, பயன்படுத்தவோ கூடாது என்று போக்குவரத்துத் துறை மீண்டும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணி நேரத்தில் கைப்பேசிகளைப் பயன்படுத்தக் கூடாது என ஏற்கெனவே சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப் பட்டிருந்தது.
இருப்பினும், பல ஓட்டுநர்கள் தங்களது சட்டைப்பையிலேயே கைப்பேசிகளை வைத்திருப்பதோடு, பேருந்தை இயக்கும் போது தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகப் பயணிகளிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
அண்மைய ஆய்வு களில், ஓட்டுநர்களின் இந்த கவனக்குறைவான செயலால் ஆங்காங்கே கடுமையான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவது கண்டறியப் பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன:
நடவடிக்கை
ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசிகளை தங்களது சட்டைப்பையில் வைத்திருப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் முற்றிலுமாக தடை விதிக்கப்படுகிறது. பேருந்து நிலையங்கள் மற்றும் வழித்தடங்களில் (Routes) அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொள்வார்கள்.
இந்த ஆய்வின் போது ஏதேனும் ஒரு ஓட்டுநர் கைப்பேசி வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், அவர் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
