சென்னை, மே 19- தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப் படவிருக்கின்றன.
ஆய்வுக்கூட்டம்
பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தரமோகன் மற்றும் கல்வி உயர் அலுவலர்களோடு பள்ளிக்கல்வித் துறை சார்பான நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று (18.5.2026) நடந்தது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள ஒன்பது பாட நூல்களை அமைச்சர் வெளி யிட்டார்.
இதுகுறித்து அமைச்சர் ராஜ் மோகன் கூறியதாவது:
மாணவர்கள் எளிதில் புரிந்து கற்று தனித்திறன் மிக்கவர்களாக உருவாகும் வகையிலும், மாணவர் களிடம் எதிர்நோக்கப்படும் கற்றல் விளைவுகளை அடையும் வகையிலும் இப்பாடநூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. குழந்தை மய்ய கற்றல் அணுகுமுறையை ஊக்குவிக்கும் வகையில் குழந்தைகள் மிகவும் விரும்பும் கதைகள், பாடல்கள், கற்றல் செயல்பாடுகள் மூலம் கற்கும் வகையிலும், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலும் பாடநூல்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன.
ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு
மேலும், மாணவர்களது உடல் இயக்க திறன்கள், சமூக மனவெழுச்சித் திறன்கள், விழுமியங்கள், வாழ்க்கை திறன் களை உள்ளடக்கிய பாடப் பொருட்களோடு அழகிய வண்ண வடிவமைப்புடன் இப்பாட நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
2026 – 2027 கல்வி ஆண்டில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படும். பள்ளி திறக்கப்படும் நாளன்று, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு பயின்று வரும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கும் வகையில், தேவையான பாடநூல்கள் தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் கழகம் மூலம் அச்சிடப்பட்டு மாவட் டங்களுக்கு அனுப்பப்பட்டு தயார்நிலையில் வழங்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
இக்கல்வியாண்டில் புதிய பாட புத்தகங்கள் அறிமுகப்படுத்தும் நிலையில், 1 முதல் 3ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல் மற்றும் கற்பித்தல் நுட்பங்கள் சார்ந்த பயிற்சி ஜூன் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை வரை நடைபெறும். மேலும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (20.5.2026) திட்டமிட்டபடி வெளியிடப்படும். பள்ளிகள் கோடை விடுமுறைக்குப்பின் திறக்கப்படவுள்ள நிலையில் அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற் பாடுகள் செய்ய வேண்டும். அதன்படி,
* 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான விலை யில்லா நலத்திட்டங்கள் (பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடை, புத்தகப் பைகள்) மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி திறக்கும் நாளன்று கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
* பள்ளிகளில் உள்ள திறன் பலகைகள் மற்றும் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள், மாணவர் பயன் பாட்டிற்கு ஏற்ற வகையில் உரிய இணைய வசதியுடன் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
* பள்ளி வளாகம், வகுப்பறைகள், சமையலறை, கழிப்பறைகள், குடிநீர் தேக்கத் தொட்டி மற்றும் கை கழுவும் இடம் ஆகியவை தூய்மையாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்.
* கழிவுநீர் சேகரிப்புத் தொட்டிகள், கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் பள்ளி வளாகத்தில் திறந்த நிலையில் இல்லாதவாறு மூடியிட்டு மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் பராமரிக்கப்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
