காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

Viduthalai
13 Min Read

 நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்; 

இது ஒரு கொள்கைப் பல்கலைக் கழகம்!

விழுதுகள் பலமாக இருக்கின்றன –  வேர்கள் பலமாக அமைந்ததின் காரணமாக!

அரசியல்

சென்னை, மார்ச் 28  நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று சொல்வார்கள். இது ஒரு கொள்கைப் பல்கலைக் கழகம்; பெரியார் சாக்ரடீசுபோலவே,  பிரின்சு என்னாரெசு பெரியார், பிராட்லா,  அடுத்த தலைமுறை யினர் – விழுதுகள் பலமாக இருக்கின்றன – வேர்கள் பலமாக அமைந்ததின் காரணமாக என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மணமக்கள்

இ.பெ.தமிழீழம் – கு.இராஜ்குமார்

கடந்த 20.11.2022 அன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் இங்கர்சால்  – ‘சுயமரியாதைச் சுடரொளி’ பெரியார் சாக்ரடீசு ஆகியோரின் மகள் இ.பெ.தமிழீழம், தேவனாப் பட்டு கி.குழந்தை – லதா ஆகியோரின் மகன் கு.இராஜ்குமார் ஆகியோருக்கு நடைபெற்ற வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவிற்குத்  தலைமையேற்று மணவிழா வினை நடத்தி வைத்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழ்த்துரை யாற்றினார்.

அவரது வாழ்த்துரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

இயக்கம் செய்த சாதனை!

தேவனாம்பட்டு என்கிற கிராமத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், இராஜ்குமார் அவர்கள் பேராசிரியராக வந்திருக்கிறார் என்றால், இந்த இயக்கம் செய்த சாதனை!

பெரியார் இல்லாவிட்டால், நாம் படித்திருக்க முடியுமா? மனுதர்மத்தை இன்னமும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்; இன்றைக்குக்கூட செய்தி வந்திருக்கிறது.

பல்கலைக் கழக மானியக் குழு சார்பாக, ஆங்காங்கே கருத்தரங்குகளை நடத்தி, மனுதர்மத்தினுடைய பெரு மையைச் சொல்லவேண்டும் என்று சொல்கிறார்கள்.

மனுதர்மத்தினுடைய பெருமை என்ன?

சூத்திரன் படித்தால், அவன் நாக்கை அறுக்க வேண்டும். அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று அதில் சொல்கிறார்கள்.

உடனே நம்மில் சிலர் புரியாமல் கேள்வி கேட்கிறார்கள், ”ஏங்க இப்பொழுதெல்லாம் யாருங்க அதுபோன்று சொல்கிறார்கள், செய்கிறார்கள்?” என்று.

ஏகலைவன் கட்டை விரலை வெட்டச் சொல்லி இன்றைக்குக் கேட்க முடியாது!

இப்பொழுது  ஏகலைவன் கட்டை விரலை வெட்டச் சொல்லி கேட்க முடியாது; துரோணாச்சாரியாரின் கட்டை விரலை வெட்டுவானே தவிர, ஏகலைவன் கட்டை விரலை வெட்டமாட்டான்.

என்ன காரணம் என்றால், பெரியார்! பெரியார்!! பெரியார்!!! தான் காரணம்.

இந்தக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருக்கின்ற இரண்டு குடும்பங்கள் இணைந்திருக்கின்றன.

சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு

பெண் வீட்டார் மாப்பிள்ளை தேடுவது அலைச்சல்; அதேபோன்று மாப்பிள்ளைக்கு பெண் தேடுவது அலைச்சல். இந்த இரண்டு வேலையையும் வைக்காமல், மிக எளிமையாக ‘‘சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு” என்று தமிழீழத்திற்கும் அந்த வாய்ப்பு; இராஜ்குமாருக்கும் அந்த வாய்ப்பு.

இங்கே அழகாக சொன்னார் நம்முடைய சுப.வீ. அவர்கள். நான் நினைத்துக் கொண்டிருந்தேன், அவர் சொல்லிவிட்டார்.

எங்களுக்கெல்லாம் தமிழீழம் கிடைக்கிறதோ இல்லையோ, இராஜ்குமாருக்குக் கிடைத்திருக்கிறது தமிழீழம்!

என்றைக்குக் கிடைக்கும் தமிழீழம், என்றைக்குக் கிடைக்கும் தமிழீழம் என்று நாங்களெல்லாம் போராடிக் கொண்டிருந்தோம். இன்னும் நூறு ஆண்டுகள் ஆனா லும், என்றைக்காவது கிடைக்கும் தமிழீழம், அதிலொன் றும் சந்தேகம் இல்லை. ஆனால், எங்களுக்கெல்லாம் தமிழீழம் கிடைக்கிறதோ இல்லையோ, இராஜ்குமாருக்குக் கிடைத்திருக்கிறது தமிழீழம்.

இந்தக் கொள்கைக்கு கிடைத்த வெற்றிதான்  – அந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காகத்தான் இவ்வளவு பெரிய அரங்கம். அதைத்தான் கவிஞர் அவர்களும் இங்கே சொன்னார்கள்.

எளிமையாக மணவிழாக்களை நடத்துங்கள்; அந்தப் பணத்தை மணமக்களின் பெயரில் வைப்பு நிதியாக வையுங்கள் என்று நாங்கள் சொல்லுவோம். ஆடம்பர மான செலவுகள் வேண்டாம் என்று சொல்லுவோம். ஆனால், இன்றைக்கு இந்தக் கொள்கை, சாக்ரடீசு மறையவில்லை என்று சொல்லுவதற்காகத்தான் இந்த வாய்ப்பு.

இந்தக் குடும்பத்தைப் பொறுத்தவரையில், எத்த னையோ மணவிழாக்கள் நடைபெற்று இருக்கின்றன.

பெரியார் எந்த அளவிற்கு செய்திருக்கிறார்- இந்த இயக்கம் எப்படிப்பட்டது 

உலக சமாதான காங்கிரஸ் சார்பில், 200 பேரைத் தேர்ந்தெடுத்து 1984-1985 ஆம் ஆண்டு காலகட்டத்தில், சோவியத் ரஷ்யாவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அனுப்பியது, அதில் நானும் ஒருவன். 

அங்கே நான் உரையாற்றும்பொழுது, பெரியார் எந்த அளவிற்கு செய்திருக்கிறார் என்பதையும், இந்த இயக்கம் எப்படிப்பட்டது என்பதைப்பற்றியும் சொல்லும் பொழுது, 1933-1934 ஆம் ஆண்டில் தந்தை பெரியார் குழந்தைகளுக்கு ரஷ்யா என்று பெயர் வைத்திருக் கிறார்கள். அதைவிட, சமதர்மம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்று சொன்னேன்.

என்னுடைய உரையை ரஷ்ய மொழியில் மொழி பெயர்த்துச் சொன்னார்கள். அனைவரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

அப்போது, அவருக்கு வயது 40 என்று நான் சொன்னேன்.

ஆகவே, இந்த இயக்கம் எவ்வளவு அமைதியாக, ஒரு துளி ரத்தம் சிந்தாமல், இந்தப் புரட்சியை செய் திருக்கிறது.

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றன!

சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று சொன் னார்கள்.  என்னுடைய மாமனார், மாமியார் திருமண வழக்கில்தான் சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று சொன்னார்கள். சட்டப்படி செல்லாது என்று சொன்ன பிறகுதான், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றன.

பிறகு அண்ணா அவர்கள் முதலமைச்சராக வந்த வுடன் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என்று சட்டம் கொண்டுவந்தார்.

இன்றைக்கு சமுதாயத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட திருமணம், சட்டத்தாலும் அங்கீகரிப்பட்ட திருமணம் – அந்தப் பெருமை யாருக்கு என்றால், ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு. அதனை உருவாக்கிய அண்ணா, அதற்குப் பாடுபட்ட கலைஞர்; இன்றைக்கு அதைத் தூக்கிப் பிடிப் பதற்குத் தலைதாழாது நிற்கும் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் என்ற பெருமைக்குரிய பாரம்பரியம் நிறைந்தது என்றால், இதில் அரசியல் இல்லை நண்பர் களே, இது சமுதாய வாழ்க்கை, சமுதாய மேம்பாடு.

அந்த வகையில், அறிவார்ந்த மணமக்கள் இந்த மணமக்கள். அவர்களுக்கு அறிவுரை என்பது தேவையில்லை. மணமகன் கருப்புச் சட்டை அணிந்துகொண்டு அமர்ந்திருக்கிறார்.

ஒரு பேராசிரியரின் மனக்குமுறலும் – 

எனது விளக்கமும்!

ஒரு காலத்தில் சிவகாசியில் கழகத்தைச் சேர்ந்தவர் கள் மிகக் குறைவாக இருந்தார்கள்; இன்றைக்கு அங்கே நம்முடைய அமைப்பு மிக பலமாக இருக்கிறது.

ஒரு மணவிழாவிற்காக என்னை அங்கே அழைத் திருந்தார்கள். அந்த மணவிழாவில், கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் ஒருவரை வாழ்த்துரைக்காக அழைத்திருந் தார்கள். அவர் உரையாற்றும்பொழுது, ‘‘நான் இங்கே மணமக்களை வாழ்த்துவதற்காகத்தான் வந்தேன்; இந்தத் திருமணம் யார் தலைமையில் நடைபெறுகிறது என்று பார்த்தபொழுது ஒரு உருவத்தைப் பார்த்தேன்; பார்த்தவுடன் எனக்கு அவ்வளவு கோபமும், வருத்தமும் ஏற்படுகிறது. நான் என்ன வாழ்த்துச் சொல்லுவது என்று புரியவில்லை” என்று சொன்னார்.

‘‘குறைந்தபட்சம் கருப்புச் சட்டை அணியாமல் வந்திருக்கலாம் அல்லவா! கருப்பு என்பது துக்கம் அல்லவா! அந்தச் சட்டையை அணிந்துகொண்டு வந்து மணவிழாவை நடத்தி வைக்க வரலாமா?” என்றார் அந்தப் பேராசிரியர்.

உடனே நம்முடைய தோழர்கள் ஆவேசப்பட்டனர்.

நான் அவர்களை அமைதியாக இருங்கள்; நான் பதில் சொல்கிறேன் என்று சொன்னேன்.

‘‘நீதிமன்றத்தில் வழக்குரைஞர் என்ன உடை அணிந்து கொண்டிருக்கிறார்; நீதிபதி என்ன உடை அணிந்திருக்கிறார்; அவ்வளவுதூரம்கூட போகவேண் டாம்; இங்கே அமர்ந்திருக்கின்றவர்களில் வயதான வர்கள் தலைமுடியெல்லாம் கருப்பாக இருக்கிறதே – அதற்கு என்ன காரணம்? மணமகள் தலைமுடி எப்படி இருக்கிறது? கருப்பாகத்தானே இருக்கிறது. சில நேரங் களில் இளைஞர்களின் தலைமுடிகூட நரைத்துவிடுகிறது. வெள்ளை முடியாக இருந்தால், மகிழ்ச்சியாக அப்படியே வருவாரா? ‘டை’ அடித்துக்கொண்டு வருவார். 

ஏனென்றால், இளமை வேண்டும் என்றால் உங் களுக்குக் கருப்புத் தேவை!

இளமையை உருவாக்கவேண்டும் என்றால், உங் களுக்குக் கருப்புத் தேவை!

எங்களுக்கு அறிவு இளமை வேண்டும் என்றால், இந்தக் கருப்பு நிரந்தரமாகத் தேவை!

ஆனால், உங்களுக்கு அது மட்டும்தான் இளமை – எங்களுக்கு அறிவு இளமை வேண்டும் என்றால், இந்தக் கருப்பு நிரந்தரமாகத் தேவை” என்று எடுத்துச் சொன்னோம்.

கருப்பு என்றால், அது ஓர் அடையாளச் சின்னம்!

அது நீதிக்கு இருக்கலாம்; சமூகநீதிக்கு இருக்கலாம்.

எனவே, இந்தக் கொள்கைகள் வளர்ந்து வளர்ந்து தான் இத்தனை தலைமுறைகள் வந்திருக்கின்றன.

மணமக்களே நீங்கள், யார் யாருக்கெல்லாம் உதவ முடியுமோ, அவர்களுக்கெல்லாம் உதவுங்கள்.

திராவிடமணி மணவிழாவும் 

பொதுக்கூட்ட மேடையில்தான் 

அய்யா முன்னிலையில் நடைபெற்றது

சாக்ரடீசுக்குப் பிறகு இந்த மணவிழா நடைபெறுகிறது என்பதற்காக, எல்லோருக்கும் தெரியவேண்டும் என்ப தற்காக ஆடம்பரமான சூழல் இருந்தாலும், இனிமேல் இந்த மணவிழாக்கள், அண்ணா அவர்கள், தந்தை பெரியாரின் தத்துவத்தை சட்டமாக்கும் நேரத்தில், இரண்டு பேர் சாட்சியம்; இரண்டு மலர்மாலை அல்லது மோதிரம். எவ்வளவு எளிமையாக நடத்த முடியுமோ, அவ்வளவு எளிமையாக நடத்தவேண்டும் என்பதற்காகத் தான் இந்த முறை மணவிழா. திராவிடமணி மணவிழாவும் பொதுக்கூட்ட மேடையில்தான் அய்யா முன்னிலையில் நடைபெற்றது.

இறையனார் இல்ல மணவிழா சிறைச்சாலையில்…!

இங்கே சுப.வீ. அவர்கள் சொன்னதுபோன்று, காவிரி பிரச்சினையில், அந்நாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங் கட்ராமன் அவர்களுக்குக் கருப்புக் கொடி காட்டுவதற் காக விமான நிலையத்திற்கு அருகில் 500 பேர் நின்றிருந்தோம். எங்களைக் கைது செய்து காவல்துறையினர் ஒரு திருமண மண்டபத்தில் வைத்திருந்தனர். நம்முடைய இறையன் அவர்களுடைய மகன் இசையின்பன் மணவிழாவிற்காக தேதி வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

எங்களைக் கைது செய்து வைத்திருந்த மண்டபம் புதிதாக் கட்டப்பட்டிருந்த மண்டபம்; காவல்துறையினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கைது செய்திருந்த எங்களை அந்த மண்டபத்தில் வைத்திருந்தனர்.

அந்த மண்டபத்தில் எங்களோடு இருந்த இறையனார் அவர்களை அழைத்து, மணவிழாவிற்கு தேதி கேட் டீர்களே, இங்கேயே மணவிழாவை நடத்திக்கொள் ளலாமா? என்றேன்.

அவரும் சரி என்றார். மணமக்களை அங்கேயே அழைத்துக்கொண்டு வந்தார்கள். இசையின்பன் – பசும்பொன் செந்தில்குமாரி மணவிழா மிகச் சிறப்பாக நடந்தேறியது.

அவர்கள் இரண்டு பேரும், சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் சுயமரியாதை திருமண நிலை யத்தில் இப்பொழுது நாள் தவறாமல் மண விழாக்களை நடத்தி வைக்கிறார்கள். 

நடைமுறையில் இந்தக் கொள்கை வெற்றி பெற்றிருக்கிறதா? இல்லையா? என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

எனவேதான், உங்களுக்கு ஒரு வேண்டுகோள் என்னவென்றால், இந்த ஒரு திருமணம் வேண்டுமானால், இவ்வளவு ஆடம்பரமாக நடக்கலாம்; உங்கள் இல்லத் திருமணங்களை எவ்வளவு எளிமையாக நடத்த முடி யுமோ, அவ்வளவு எளிமையாக நடத்தவேண்டும். இரண்டு மாலை அல்லது மோதிரம் அணிவித்து, உறுதிமொழியை எடுத்துக்கொள்ளலாம். 

தேவராஜ் அர்சு – ஹிரேன்முகர்ஜி 

சுயமரியாதை மணவிழா முறையைப் பார்த்து தேவராஜ்அர்சு சொன்னார், ‘‘இந்த மணவிழாவைப்பற்றி முன்பே எனக்குத் தெரிந்திருந்தால், நான் பதவியில் இருக்கும்பொழுதே  கருநாடகத்தில் இதை சட்டமாக்கி இருப்பேனே? என்றார்.

கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த ஹிரேன் முகர்ஜி சொன்னார், ‘‘நான் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவன்; ஆனால், எங்களுடைய வங்காளத்தில், இப்படி ஒரு மணவிழாவை, சடங்கு சம்பிரதாயம் இல்லாமல் நடத்த முடியாது. பெரியார் எவ்வளவு பெரிய புரட்சியை, அமைதியாகச் செய்திருக்கிறார்” என்று சொன்னதை, ஈ.வெ.கி.சம்பத் அவர்கள், தந்தை பெரியாரிடம் வந்து சொன்னார்.

உலகில் பல நாடுகளில் சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெறுகின்றன!

பல நாடுகளில் சுயமரியாதைத் திருமணங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஜெர்மனி கொலோன் பல்கலைக் கழகத்தில் உரையாற்ற என்னை அழைத் திருந்தார்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு. அந்தப் பல்கலைக் கழகப் பேராசிரியர் எனக்கு ஒரு வேண்டு கோள் வைத்தார், ”அடுத்த நாளும் நீங்கள்  இங்கே தங்க முடியுமா?” என்றார்.

”எதற்காக” என்றேன்.

”பல்கலைக் கழகத்தில் ஒரு சுயமரியாதைத் திரு மணத்தை நீங்கள் நடத்தவேண்டும்; ஒருவர் இலங்கைத் தமிழர்; இன்னொருவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்” என்றார்.

அதேபோன்று அவர்களுடைய மணவிழாவினை நான் நடத்தி வைத்தேன்.

எதற்காக சொல்லுகிறேன் என்றால் நண்பர்களே, எளிமை, சிக்கனம் – அந்த அளவிற்கு வாழ்க்கையை நடத்தவேண்டும்.

நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று சொல்வார்கள். இது ஒரு கொள்கைப் பல்கலைக் கழகம். 

உடற்கொடையில் 

ஜாதி, மதத்தைப் பார்க்கிறார்களா?

ஜாதி மறுப்பு என்பது இன்றைக்கு பல இடங்களில் வளர்ந்திருக்கிறது. இன்றைக்கும் யாருக்காவது விபத்து நடந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறும்பொழுது, குருதி பெறவேண்டிய நிலையில், யாராவது ஜாதியைப் பார்க்கிறார்களா?

உடல் உறுப்புக் கொடை அளிக்கப்படுகிறதே, அதிலே யாராவது ஜாதி, மதத்தைப் பார்க்கிறார்களா?

எனவேதான், இந்த மனநோயிலிருந்து விடுபட வேண்டும்; ஜாதி என்பதற்கு ஆதாரமும் கிடையாது; அறிவியல் அடிப்படையும் கிடையாது. 

மறுபடியும் மனிதனை 

மிருகமாக்குகிறது ஜாதி!

ஆனால், மனிதனை ஜாதி, மிருகமாக்கிக் கொண்டி ருக்கிறது. மிருகமாக இருந்தவன், மனிதனாக உயர்ந்தான் என்பதுதான் பெருமை. ஆனால், ஜாதி என்ன செய்கிறது என்றால், மறுபடியும் மனிதனை மிருகமாக்கிக் கொண் டிருக்கிறது.

இன்னொரு ஜாதியில் திருமணம் செய்துகொண்டனர் என்பதற்காக, தன்னுடைய சொந்த மகளை, மகனை கூலிப் படையை வைத்து கொலை செய்கிறான் என்று சொன்னால், இதைவிட வேறு கொடுமை என்ன இருக்கிறது?

உச்சநீதிமன்றத்தில் இதுவரை ஏழு, எட்டுத் தீர்ப்புகள்; உத்தரப்பிரதேசத்தில் ஆணவக் கொலைகள் அதிகமான அளவிற்கு நடந்துகொண்டிருக்கின்றன. இதற்கு தனிப் பிரிவுகள் கொண்டு வரவேண்டும் என்று சொன்னார்கள்.

அதுபோன்றெல்லாம் இல்லாமல், இங்கே எந்தவித மான பிரச்சினையும் இல்லாமல், பெற்றோர்கள் மகிழ்ச்சி யோடு இருக்கிறார்கள்.

இந்த மணமுறையை ஏற்றுக்கொண்டவர்கள் யாரா வது  வாழ்க்கையில் தாழ்ந்துவிட்டார்களா? வீழ்ந்து விட்டார்களா? என்றால்,  கிடையாது.

‘‘திராவிடம் வெல்லும் – அதை நாளைய வரலாறு என்றைக்கும் சொல்லும்!”

மேடையில் அமர்ந்திருக்கும் அத்துணை பேரும் சுயமரியாதை முறையில் மணவிழாக்களை நடத்திக் கொண்டவர்கள்தான். அனைவரும் வாழ்வில் நல்ல அளவிற்கு வளர்ந்திருக்கிறார்கள்; மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு நான்காவது தலைமுறையினரின் மணவிழாவை நடத்தி வைக்கின் றோம் என்று சொன்னால், இது ஆயிரங்காலத்துப் பயிர் – ‘‘திராவிடம் வெல்லும் – அதை நாளைய வரலாறு என்றைக்கும் சொல்லும்” என்பதற்குரிய அடையாளம் இது என்று சொல்லி,

மணமகள் தமிழீழம் – மணமகன் இராஜ்குமார் ஆகிய இருவரும் நம் அனைவரின் முன்னிலையிலும் உறுதிமொழி கூறி, வாழ்க்கை இணையேற்பு விழாவினை நடத்திக் கொள்கிறார்கள்.

பெரியார் சாக்ரடீசு பற்றி திராவிட மணி அவர்கள், இங்கே சிறப்பாகச் சொன்னார்.

பெரியார் சாக்ரடீசு பற்றி சொல்வதற்கு எத்தனையோ நிகழ்வுகள் இருந்தாலும், ஒன்றைச் சொல்லுகிறேன். பல நேரங்களில் எங்கள் இயக்கத்தினுடைய பலம் – பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? என்று சிலர் கேட்டார்கள். இருக்கும் என்பது மட்டுமல்ல; இங்கு மட்டும் அல்ல – உலகம் முழுவதும் அது இருக்கும்.

பெரியார் சாக்ரடீசிடம் ஒரு பணியைச் சொன்னால், உடனே அதனை செய்து முடித்துவிடுவார்!

‘‘பெரியார் உலக மயம் –

உலகம் பெரியார் மயம்” என்று ஆக்கியதற்கு, இவர் களைப் போன்ற இளைஞர்கள்தான் இன்றைக்கு இந்த அறிவுச் சுடரை ஏந்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதை செய்யவேண்டும் என்று பெரியார் சாக்ரடீசிடம் சொல்லிவிட்டால், அதோடு அந்த வேலையைப்பற்றி நாங்கள் கவலைப்படவேண்டிய அவசியமில்லை. அந்தப் பணியை அவர் உடனே முடித்துவிடுவார்.

விழுதுகள் பலமாக இருக்கின்றன – 

வேர்கள் பலமாக அமைந்ததின் காரணமாக!

இன்றைக்கு அதேமுறையில்தான், பிரின்சு என்னா ரெசு பெரியார், பிராட்லா, அடுத்தடுத்த தலைமுறையினர் இருக்கிறார்கள் என்று சொன்னால், விழுதுகள் பலமாக இருக்கின்றன – வேர்கள் பலமாக அமைந்ததின் காரணமாக என்கிற அடிப்படையில், இந்த மணமக்கள் அனைவருடைய வாழ்த்துகளோடு உறுதிமொழி சொல்லி, மணவிழாவை நடத்தி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.

எல்லா வகையிலும் நீங்கள் எளிமையோடு இருங்கள்; சிக்கனத்தோடு வாழுங்கள். உங்கள் பெற்றோருக்கு நன்றி காட்டுங்கள்; அதைவிட சிறப்பு வேறு இருக்க முடியாது.

எல்லாவற்றையும்விட, அண்ணா அவர்கள் ஓர் அறிவுரையை சொன்னார்கள். விட்டுக் கொடுத்து வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.

‘‘விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை;

கெட்டுப் போகிறவர்கள், விட்டுக் கொடுப்பதில்லை” என்று சொன்னார்.

இதை மணமக்களாகிய நீங்கள் மனதில் வைத்துக் கொண்டு, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, நல்ல வண்ணம் வாழுங்கள். ஒருவருக்கொருவர் – நீங்கள் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்கள். அதற்கு உங்கள் பெற்றோர் மகிழ்ச்சியோடு அனுமதி கொடுத் திருக்கிறார்கள்.

எனவே, உங்கள் பெற்றோருக்கு நன்றி காட்டுங்கள்; வாழ்க்கையில் சிக்கனத்தைக் கடைப்பிடியுங்கள்; திரு மணம் மட்டுமே இதற்கு விதி விலக்கு – அவ்வளவுதானே தவிர, மற்ற நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையில் ஆடம்பரமாக இருக்கக் கூடாது என்பதை எடுத்துச் சொல்லி, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழுங்கள்.

இந்தத் திருமணம் நிச்சயமாக அடுத்த தலைமுறை யையும் தாண்டி, அடுத்த தலைமுறை வந்தாலும், அவர்களுக்கும் நாங்கள் திருமணத்தை நடத்தி வைக்கக் கூடிய அளவிற்கு வாய்ப்பைப் பெறுவோம்.

சனாதனத்தின் தோல்வி – 

விஞ்ஞானத்தின் வெற்றி!

அது எங்கள் சாதனை – எங்கள் விஞ்ஞானத்தின் சாதனை!

சனாதனத்தின் தோல்வி – விஞ்ஞானத்தின் வெற்றி என்ற அளவிலே இருக்கக்கூடிய மிகப்பெரிய ஒரு சூழல் நிலைப்பட்டுள்ளது.

அறிவியலை நம்புங்கள்; அறிவியல் மனப்பான்மை யோடு வாழுங்கள்; அறிவியல் மனப்பான்மைதான் பகுத்தறிவு; பகுத்தறிவுதான் அறிவியல் மனப்பான்மை.

ஆகவே, உங்கள் வாழ்வில் அறிவியல் மனப்பான் மையோடு வாழுங்கள் என்று சொல்லி, இப்பொழுது மணமக்கள் உறுதிமொழி கூறி, வாழ்க்கை இணையேற்பு விழாவை நடத்திக் கொள்கிறார்கள்.

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு 

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த் துரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *