இதோ பெரியாரில் பெரியார்! பட்டுக்கோட்டைஅழகிரிசாமி

Viduthalai
13 Min Read

அரசியல்

13.12.1947ஆம் நாள் அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் தளபதி கே.வி.அழகிரிசாமி அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரை

நேற்றைய (27.3.2023) தொடர்ச்சி…

பெரியார் வேறு! 

ஈ.வெ.இராமசாமி வேறு!

இவரைப் பெரியார் ஈ.வெ.ராமசாமி என்று நமது மக்கள் சாதாரணமாக அழைக்கின்றார்கள் என்றாலும், என்னைப் பொறுத்தவரையில் எனக்குப் பெரியார் வேறு – ஈ.வெ.ராமசாமி வேறுதான். ஈ.வெ.ராவுக்கு மாட மாளிகைகள் உண்டு. நூற்றுக்கணக்கான வீடுகளும், நூற்றுக்கணக்கான ஏக்கர் நஞ்சை புஞ்சைகளும் உண்டு. ஓரளவு ரொக்க ரூபாயும் பாங்கியில் உண்டு. ஆனால், பெரியாருக்கு அதெல்லாம் இல்லை. அவ ருக்கு உலகெல்லாம் சொந்த ஊர்தான். உலக மக்க ளெல்லாம் அவருக்குச் சகோதர சகோதரிகள்தான்.

நம் நாட்டிலும் ஏனைய நாடுகளிலும் எத்தனையோ பணக்காரர்கள் உண்டு. அவர்களில் சிலர் தனக்குப் பண மிருக்கிறது என்று மற்றவர் பாராட்ட வேண்டுமென்பதற் காகவே சம்பாதிப்பார்கள். சிலர் பணமூட்டைகளை அடுக்கி அழகு பார்ப்பதற்காகச் சம்பாதிப்பார்கள். இன்னும் சிலர் தமது வாழ்வை ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்பதற் காகப் பணம் சம்பாதிப்பார்கள். ஆனால், எந்தப் பணக் காரனும், அவன் எந்நாட்டவனாயினும் சரியே, அவன் தன் சுயநலத்திற்காக, சுய பெருமைக்காகப் பொதுவாழ்வில் ஈடுபடுவானே அல்லாது, தன்னலமற்ற எவனும் பொது வாழ்வில் ஈடுபடமாட்டான். ஆயுள் முடிந்து ஓய்வு பெற வேண்டிய காலத்தில்கூட, தான் சம்பாதித்த பொருளின் முழுப்பயனையும் அடைய முயற்சிப்பானே அல்லாது. தன் எஞ்சிய காலத்தைப் பொது வாழ்வுக்குச் செலவழிக்க இசையான். ஆனால், இவர்களுக்கெல்லாம் மாறுபட்டவர் பெரியார். இவரும் சம்பாதிக்கவேண்டுமென்ற ஆசையோடு தான் ஒரு மனிதனுடைய டாம்பீக வாழ்வுக்குப் போதுமான அளவுக்குப் பணம் சம்பாதித்துவிட்டார். இவருக்கு மனைவி யில்லை. மக்களில்லை. தான் சம்பாதித்த பொருளைக் கொண்டு எடுபிடி ஆள் நாலைந்து பேரை வைத்துக் கொண்டு எவ்வளவோ சுகமாக வாழலாம். எப்படித் தன் பணத்தை வாரி இறைத்தாலும் ஏனென்று கேட்க ஆளில்லை. அப்படி இருந்தும் பெரியார் என்ன செய்கிறார்? அவர் இப்படி சுகவாழ்க்கை அனுபவிப்பதைவிட்டு இத் தள்ளாத வயதில்கூட, தனது நேரம் பூராவையும் பொதுநல ஊழியத்திலேயே செலவழித்து வருகிறார். ஆகவே தான் பெரியாரில் ஒரு பெரியார் என்று இவரை அழைக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய பெரியார் இருந்ததாக உலக சரித்திரம் கூறக் காணோம். நாமும் இவரைத் தவிர வேறோர் பெரியாரைக் கண்டோமில்லை. இனியும் காணப்போவ தில்லை என்பது தான் எனது அபிப்பிராயம் – ஆகவேதான் நான் முதலிலேயே திராவிட நாடு ‘அதிர்ஷ்டம்’ பொருந்திய நாடு; நாம் அதில் பிறந்திருப்பதால் ‘அதிஷ்டசாலி’கள் ஆனோம் என்றேன். ஏனெனில் இத்தகைய ஒரு பெரியாரின் வாழ்நாளில் பிறந்திருக்கும் பேறு பெற்றுள்ளோம். ஆத லினால்.

பெரியாருக்குத் தனிப்பட்ட முறையில் யார் என்ன தீங்கு செய்தாலும், செய்திருந்தாலும் அதை, மனித சுபாவமே அப்படித்தான் என்று கூறிப் பொறுத்துக் கொண்டுவிடுவார். ஆனால் இயக்கத்தை பொறுத்தமட்டில் சிறிது தவறு செய்து விட்டாலும் உளம் பொறார்.

சுலபத்தில் ஆத்திரம் கொள்வார். தயைதாட்சண்யமின்றிச் சற்றும் பொறுப்பில்லாதவன், முட்டாள், போக்கிரி, சோம் பேறிப் பயல் என்றெல்லாம் கூட சமய சந்தர்ப்பம் பாராமல் ஏசிவிடுவார். இயக்கத்தின்மீது அவ்வளவு பற்றுதல் உள்ளவர். அவரது தன்னலமற்ற இந்த இயக்கப்பற்றுதல் தான் இந்த ஏசல் மொழிகளைக் கேட்டுக் கொண்டு நமது இளைஞர்களை “பெரியார் வாழ்க வாழ்க” என வாழ்த்தொலி கூறிப் பின்பற்றிச் செல்லும்படி தூண்டுகிறது.

இன்னும் அனுபவம் பெற வேண்டும்-இதுவே இளைஞர்க்கு உணர்த்தும் ஒரு பொருள்

வாலிபர்கள் என்றாலே பெரியாரின் அகராதியில் அனுபவம் அற்றவர்கள் என்றுதான் பொருள். ஆனால் காங்கிரஸ்காரர்கள் அகராதியிலோ, அவர்கள்தான் நிகழ் காலச் சிற்பிகள், எதிர்கால மன்னர்கள், தமது இஷ்டப்படி தண்டவாளத்தைப் பெயர்த்துத் தம்மைப் பதவியில் உட்கார வைக்கக் கூடியவர்களும் அவர்கள் தான் என்பார்கள். ஆனால் இதைப் பெரியார் ஒப்புக் கொள்ளமாட்டார். ஒப்புக்கொள்ளாமலிருக்கக் காரணமும் உண்டு. எனது அனுபவமும் அதுதான். நான் ஒரு சமயம், தோழர் அய்யப்பன் அவர்கள் தலைமையில் ஈரோட்டில் நடந்த ஒரு மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தேன். அதற்குச் செல்லும்போது ரயிலில் நன்றாகத் தூங்கிவிட்டேன். வண்டி ஈரோட்டைத் தாண்டிச் சென்ற பிறகுதான் விழித்துக் கொண்டேன். ஆகவே அடுத்த ஸ்டேஷனில் இறங்கித் திரும்பிவர மணி 11 ஆகிவிட்டது. நான் பேச வேண்டிய கட்டமும் வந்துவிடவே, நானும் எனது பேச்சைத் துவங்கி விட்டேன். தலைவர் ஏதோ அவசர வேலையாக 1 மணி வண்டிக்கே போகவேண்டியிருந் ததால், பெரியார் அவர்கள் 12.30 மணிக்கே கூட்டத்தை முடித்துவிட விரும்பி 12.15 க்கே எச்சரிக்கை செய்தார். நான் பேசிக் கொண்டிருக்கும்போதே தலைவரை எழுப்பி அழைத்துச் சென்று விட்டால், நான் எங்கே கோபித்துக் கொள்வேனோ என்ற பயம் ஒரு புறம் தன்னை வாட்ட, அவரைக் காலா காலத்தில் அனுப்பி வைக்கவேண்டிய தமது பொறுப்பு ஒருபுறம் வேதனை செய்ய, என்னை நிறுத்திக் கொள்ளும்படி ஜாடையாகக் கேட்டார். எனக்கு அப்போது மண்டைக் கர்வம் ரொம்ப அதிகம். ஆகவே. இவரென்ன நம்மைத் தடை செய்வது என்று நினைத்து ‘இது என்ன சர்வாதிகாரமா’ என்று கேட்டு விட்டு எதிரிலிருந்த தோழர்களைப் பார்த்தேன். அவர்கள் மட்டுமென்ன சளைத்தவர்களா? “நிஷீ ஷீஸீ” என்று, அதாவது, “நிறுத்தாதீர்கள், தொடர்ந்து பேசுங்கள்” என்று கூறிவிட்டார்கள்.

நானும் விடாப்பிடியாகப் பேசிக்கொண்டே இருந்தேன். குறிப்பிட்ட நேரம் வரவும் பெரியார், தோழர் அய்யப்பன் அவர்களை அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள். நான் பேசி முடிந்ததும், ஏதோ பெரிய காரியத்தைச் சாதித்து விட்டதுபோல நினைத்துக் கொண்டு, மாநாட்டு உணவைக் கூடச் சட்டை செய்யாமல் கோபத்தோடு ஓட்டலில் சென்று சாப்பிட்டுவிட்டேன். தோழரை வழியனுப்பிவிட்டு வந்த பெரியார் அவர்கள், திருட்டுப்பூனை கருவாட்டுத் துண்டுக்காக மோப்பம் பிடித்துத் திரிவதுபோல், கடைத் தெருவில் திரிந்துகொண்டிருந்த என்னைக் கண்டுபிடித்து விட்டார். நான் பாராததுபோல் கொஞ்சம் “ரப் அண்ட் டப்” ஆக, சற்று அசட்டையாக நடக்க ஆரம்பித்தேன். ஆனால் அவரா விடுகிறார். “என்னங்க, சாப்பிட்டீங்களா?” என்று உரக்கக் கேட்டுவிட்டார். எனது சப்த நாடிகளும் தளர்ந்து விட்டன. அதைக் கேட்டதும், எனக்கு ரொம்ப அவமானமாகி விட்டது. நாம்தான் தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்து கொண்டேன். ஆகவே தான் வாலிபத் தோழர் களுக்கு எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன்.

‘ஏமாற்றலாம்!’ 

– இதனை எண்ணாதீர்!

அரசியல்

பெரியார் உங்களை நன்கு அறிந்துள்ளார். ஆகவே, அவரை உங்களால் ஏமாற்ற முடியாது. அவரும் உங்கள் நன்மைக்காகத்தான் பாடுபட்டு வருகிறார். ஆதலால், அவர் வழி நடவுங்கள்; நடந்தால் இன்புற்று வாழலாம். இன்றேல் ‘வெங்கட ரமண கோவிந்தா’ வென்று கூவிக்கொண்டு தெருவில் உருளவேண்டியதுதான்.

பெரியார்தன்னில், தானொரு வீரர், தான் மட்டும் வீரராக இருக்க விரும்புபவரில்லை. தன்னைச் சூழ்ந்துள்ள அத் தனை பேரையும் வீரராக்க வேண்டுமென்ற விருப்பமும் அதற்கேற்ற ஆற்றலும் படைத்தவர் பெரியார் ஆவார். அவர் ஒரு வீர புருஷர் மட்டுமல்ல. எளிய வாழ்க்கை நடத்தி வருபவர். அவர் அநேகமாக மூன்றாவது வகுப்பில்தான் பிரயாணம் செய்வார். அதுவும் அந்த வண்டியில் ஒரு 4 ஆவது வகுப்பு இல்லாத குறையால்தான்.

இலட்சிய நோக்கு! 

இடையறா உழைப்பு!

அவரது குற்றச்சாட்டுக்கு ஆத்திரப்படும் தோழர்கள் அறிவு கொண்டு சிந்திக்கவேண்டும். அனுபவிக்க வேண்டிய பொருள் இருக்கும்போது. இவர் ஏன் இப்படி ஓய்வு ஒழிச்ச லின்றிச் சுற்றித் திரிகிறார் என்பதை?

இன்றும் நாளையும் திருவண்ணாமலை, மறுநாள் 15ஆம் தேதி பனமலை, 16ஆம் தேதி காட்டுமன்னார் கோயில் 17ஆம் தேதி விழுப்புரம், 13ஆம் தேதி அரசூர் இப்படி எல்லாம் இவர் ஏன் சுற்றியலைகிறார் என்பதில் உங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும். அவரது குறிக்கோளின் தன்மை அத்தகையது. அதில் அவருக்குள்ள விருப்பம் அவ்வளவும் அதிகமானது. அந்த லட்சியம் நிறைவேற அவர் அல்லும் பகலும் உழைக்கத் தயங்கார். உனக்கொரு கொள்கை கிடையாது. கொள்கையிருக்குமானால் அதில் போதிய பற்றுதல் இருக்காது. போதிய பற்றும் இருந்தாலும் அதற்காக உழைக்க உன் மனம் ஒப்புக் கொள்ளாது. உன் மனம் இன்பத்தையே நாடும்.

அவர் மனமோ இலட்சியத்தை நாடும் அவருக்குக் கறுப்பைக் கண்டால் திராவிட இனத்தின் இழிவு ஞாபகத் திற்கு வரும். உனக்கோ கறுப்பைக் கண்டால் காரிகையரின் கருங்கூந்தல் ஞாபகத்திற்கு வரும். சிவப்பைக் கண்டால் அவருக்கு இழிவு நீக்க முயற்சி ஞாபகத்திற்கு வரும். ஆனால், உனக்கோ உன் காதலியின் பவளச் செவ்வாய் ஞாபகத்திற்கு வரும். அதற்கு யாரென்ன செய்தல் கூடும்?

ஏற்பட்ட விரோதம்! 

எதிர்ப்படும் குரோதம்!

அன்பர்களே, அன்னாரின் இடையறாத் தொண்டின் சிறப்பை நாம் உணர்ந்திருக்கிறோமா? உணரும் நிலையிலாயினும் இருக்கிறோமா? இல்லை, இல்லை, இல்லை என்றுதான் கூறத் துணிகிறது என் மனது ஆம்! அன்னவர் சுமார் 30 வருட காலமாக நம்மை மனிதராக்க எடுத்துக் கொண்டுள்ள முயற்சியை இன்றும் உணர்ந்தோமில்லை. அவ்வளவு மடையர்கள்; மிருக வாழ்வு வாழ்பவர்கள் நாம். இப்படிப்பட்ட மக்கள் வாழும் நாட்டைக் கொடிய நெடுங்கடல்தான் பொங்கி அழித்தாலென்ன? அல்லது ஒரு பெரிய பூகம்பம்தான் ஏற்பட்டு. அத்தனை பேரும் அழிந்து போனால் என்ன? அப்படி நாசமடைந்தாலும் ஒரு அறிவுள்ள சமூகமாவது பின்னர் தோன்ற வழி பிறக்குமே இப்பெரியாரின் உழைப்பை யாரே மறக்க முடியும்? தம் உழைப்பின் பலனை இவர் காண்பதெப்போது என்று நீங்கள் துடிக்க வேண்டாமா? உங்கள் சக்திகளையெல்லாம் இப்பெரியாருக்கு நீங்கள் அடிமைப்படுத்த வேண்டாமா? அப்படித்தான் செய்யாவிட்டாலும். இவரது உழைப்பின் சிறப்பை உணருமளவுக்கு உன் அறிவு மாற்றானுக்கு அடிமைப்பட்டிருந்தாலும், அல்லது அறிவு மடமையிருளில் மழுங்கிக் கிடந்தாலும் சற்று ஒதுங்கியாவது இருக்க வேண் டாமா? இவரை ஏசுபவர் எத்தனை பேர்! இவரைப் பழிப்ப வரும் தூற்றுபவரும் எத்தனைப்பேர்? நமக்குள்ளாகவே “கக்கிரி புக்கிரி” என்று பூசல் விளைவிப்பவர்கள் எத்தனை பேர்? இத்தனையையும் சகித்துக் கொண்டு இவர் இன்னும் உயிரோடும் இருக்கிறார் என்றால் அதன் பொருளென்ன? இதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது! இவற்றை எல்லாம் சட்டை செய்யாது வாழ இவரென்ன சிங்கமா? கரடியா? அல்லது நகராது கொத்தும் பாம்பா? என்பதுதான் எனக்குப் புரியவில்லை.

எதற்கும் தளராத 

இவரின் கருத்தெழுச்சி!

உடல் இவ்வளவு தளர்ந்திருந்தாலும், இத்தளர்வு, இவரது பேச்சில் காணமுடியவில்லையே! கூட்டம் முடிந்ததும், இன்று கூட்டம் மிக அருமை என்று கூறிவிடுங்களேன்! எவ்வளவு உற்சாகத்தோடு எவ்வளவு பெருமிதத்தோடு சற்றுக் கனைக்கிறார் பாருங்கள்! தோள் தட்டி, தொடை தட்டித் தொண்டாற்ற வாருங்கள் என்றழைக்கும் இளங் குமரனைவிடச் சற்று அதிகமாகவே கர்ஜிக்கிறாரே இவ்வீர புருஷர். இதற்குக் காரணம் என்ன! இவரது உணர்ச்சி, உணர்ச்சியின் வேகம் இவைதான் காரணம். இவரது உணர்ச்சியின் வேகத்தை, கருத்தெழுச்சியின் ஆழத்தை, அவற்றின் அறிவை நம்மால் என்றுமே சரியாக அளக்க முடியவில்லையே. நாம் எவ்வளவுதான் ஆழத்துக்குச் சென்று துளாவினாலும், ஆழமறியாத முத்துக் குளிக்கும் தோழன் ஏதோ ரொம்ப ஆழத்தில் சென்றுவிட்டோம் என்று கருதித் தன் வலையை வீசிக் கிடைத்தவற்றைப் பிடித்து அதை மேலிழுக்க, அதன் பளுவைக் கண்டு ஏதோ நிறைய கொணர்ந்துவிட்டதாகக் கருதி மகிழ, கடைசியில் அவை அத்தனையும் முத்துச்சிப்பிகள் பாம்பும், நண்டுமாக இருக்குமானால், அவன் எப்படி அவதியுறுவானோ -தன் அறியாமைக்கு வருந்தி, அதே போல் நாமும் பெரியாரின் ஆழத்தை நம்மால் உணர முடியவில்லையே வருந்தியழுவ தோடு, அவரது ஆழ்ந்த கருத்துக்களை அப்படியே என்று பின்பற்ற வேண்டியது அவசியம் என்ற முடிவுக்குத் தானே வர வேண்டியிருக்கிறது. அவரது கருத்துக்கள் கடலினுள் முத்துச் சிப்பி போன்றன. நம்முடைய கருத்துக்களோ கடலினுள் நண்டு நத்தை போல்வனவே ஆகும்.

பெரியார் அவர்களை நான் ஏறக்குறைய 30 வருடங் களாக அறிந்திருக்கிறேன். நெருங்கிப் பழகி இருக்கிறேன். என்றாலும், அவரது நம்பிக்கைக்கு இன்றுவரை நான் பாத்திரம் ஆனேனில்லை. கொள்கையைப் பொறுத்தா? இல்லை. இயக்கத்தைப் பொறுத்தா? இல்லை. பின் எதைப் பொறுத்து என்னிடம் அவருக்கு நம்பிக்கை பிறக்கவில்லை? என்னுடைய சொந்த நிலையைப் பொறுத்துத் தான். அவர் போடும் காகிதத்துக்குக்கூடச் சரியாகப் அனுப்பியிருக்க மாட்டேன். அப்படியிருந்தும் அவர் என்னை வெறுத்து விட்டாரா? இல்லை. அதுதான் அவரிடமுள்ள சிறப்பான பண்பு. தனிமையில் எதையும் பொறுத்துக் கொள்வார்.

ஆயிரம் கரிபால்டியாயினும் 

அழித்திருக்குமே ஆரியம்! 

இத்தாலி ஒரு மாஜினியையும், ஒரு கரிபால்டியையும் பெற்றதுண்டு. ஜெர்மனி ஒரு மார்க்ஸையும், பிரான்ஸ் ஒரு ரூஸோவையும், ரஷியா ஒரு லெனினையும், அமெரிக்கா ஒரு லிங்கனையும் பெற்றதுண்டு. ஆனால் அவர்களது சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் வேறு. அவர்களைப்போல் நம் திராவிட நாட்டில் ஆயிரம் கரிபால்டிகள் தோன்றியிருந்தாலும்கூட, இந்த ஆரியம் அவர்கள் அத்தனை பேரையும் அழித்திருக்கும். காந்தியாரின் வர்ணாஸ்ரமப் பிரச்சாரத்தை எதிர்த்தோ, ஆரிய நயவஞ்சக சூழ்ச்சிகளை எதிர்த்தோ, அல்லது நம்மவரின் உடைமையிலுள்ள விருப்பத்தையும் மடமையிலுள்ள பிரீதியையும் எதிர்த்தோ, அவர்களால் ஒருநாள்கூட ஜீவித்திருக்க முடியாது. பகுத் தறிதல் பாவம் என்று நினைத்திருந்த மக்களிடையே, அவர்கள் பிறந்தார்களில்லை. மோட்ச நரகத்தைக் காட்டி மோசடி செய்யும் மக்களிடையே அவர்கள் பிறந்தார் களில்லை.

ஆகவேதான் அவர்கள் விரைவில் வெற்றி கண்டார்கள். ஆனால், நம் பெரியார் பிறந்த இடமோ அப்படிப்பட்டதல்ல. “அவனன்றி ஓரணுவும் அசையாது காண்” என்ற நம்பிக்கையோடு வாழ்ந்த மக்களிடையே பிறந்தார் இவர். கடவுளை வணங்காமலிருந்தால் கயமை; சாஸ்திரங்களைத் தகர்த்தால் நாத்திகம்; புராணங்களை நம்பாமல் இருத்தல்; நரகத்திற்கு வழிசெய்து கொள்ளல், அயோக்கிய அன்னக்கா வடிப் பார்ப்பனர்கள் தான் இந்நாட்டில் பூதேவர்கள் என்று நம்பியிருந்த மக்களிடையே பிறந்தார் நம் பெரியார். அப்படி வாழ்ந்த நம்மைப் பகுத்தறிவுகொண்டு சிந்திக்கும்படிச் செய்து, ஆதாரங்கள் பல காட்டி நம்மை தலைநிமிர்ந்து நடக்கும்படி செய்தார் நம் பெரியார். இத்தகைய பெரிய வேலையை இதே சூழ்நிலையில் இந்நாட்டிலோ. அன்றி வேறு நாட்டிலோ யாரேனும் சாதித்திருக்கிறார்களா என்ப தைச் சிந்தித்துப் பாருங்கள். நம்மவர் தலைநிமிர்ந்து வாழ வழிவகுத்துக் கொடுத்த பெரியார் வாழுங்காலத்தில், வாழ்கின்றோம் என்பதற்காகத்தான் நம்மைப் பாக்கியசாலி களாகக் கருதிக் கொள்ளவேண்டும் என்று முன்னரே குறிப்பிட்டேன். நம் முயற்சியின் முழுவெற்றியை நாம் இன்னும் காணவில்லையானாலும், வெற்றியின் நிச்சயத்தில் நம்பிக்கை கொண்டிருக்கும் நிலையிலாவது நாம் இன்று இருப்பதால்தான் நாம் பாக்கியசாலிகள் ஆகிறோம்.

நாளொரு மேனி 

பொழுதொரு வண்ணமாய் வளர்ச்சி 

பெரியார் நம் இயக்கத்தை எப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகச் சிறுக சிறுக வளர்த்து வந்தார் என்பதைக் கவனித்துப் பாருங்கள். சுயமரியாதை இயக்கம் கண்டு அதற்கோர் திட்டத்தை ஏற்படுத்திய பெரியார், அத்திட்டத்தை நடைமுறையில் கொண்டுவரத் தம்முடன் ஒத்துழைக்க முன்வரும் கட்சி எது என்று கேட்டார். காந்தியார் தலைமையைப் பெற்ற காங்கிரசு சுயமரியாதைத் திட்டத்தை ஏற்க மறுத்தது. ஜஸ்டிஸ் கட்சி ஏற்றுக் கொண்டது. ஆகவே, அத்துடன் சேர்ந்தார். அதன் மூலம் தாழ்த்தப்பட் டோரும் உத்தியோகம் பெறுவதற்கான வகுப்புவாரி உத்தியோக நியமன உரிமையை வாங்கிக் கொடுத்தார். உத்தியோகம் பெறுவதால் மட்டும் தம் திட்டம் வெற்றிபெற முடியாதென்பதைக் கண்டார்.

ஆகவே, இனப்பெயரால் திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்தார். அதன்மூலம் ஆரியர் வேறு, திராவிடர் வேறு என்ற பிரச்சினையைக் கிளப்பினார். ஆரிய நாகரிகம் வேறு, திராவிடர் நாகரிகம் வேறு, ஆரியக் கலை வேறு, திராவிடக் கலை வேறு, ஆரியப் பண்புகள் வேறு, திராவிடப் பண்புகள் வேறு என்றெல்லாம் ஆதாரங்களோடு விளக்கிக் கூறினார். இவ்விளக்கம் மக்களிடையே செல்வாக்குப் பெற்று வலுத்துவிடவும், திராவிடர்கள் தம் கலைகளையும் தம் நாகரிகத்தையும் வளர்த்துக் கொண்டு ஏனைய நாட்டினருடன் சரி சமானமாக வாழ்வதற்காக திராவிட நாட்டுப் பிரிவினை கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

அவரது பிரச்சாரத்தின் வெற்றி காரணமாகத்தான், இன்று மாதந்தோறும் கழக மாநாடுகளும், பிரிவினை மாநாடுகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அவரது பிரச்சாரத்தின் காரணமாகத்தான் இன்று ஆயிரக் கணக்கான இளைஞர்கள் நாடு பிரிவினைக்காகத் தூக்கு மேடை ஏறவும் தயாராக இருந்து வருகிறார்கள்.

மோட்சமும் நரகமும் –

முடிச்சுமாறிகளின் கற்பனை ஏன்?

கடவுளை சந்தேகித்தால் பாபம், சாஸ்திரங்களை நிந்தித்தால் நரகம் என்று நம்பி, சிந்தனையற்ற ஏமாளிகளாயிருந்த நம்மை எப்படி இந்நிலைக்கு அழைத்து வந்தார் தெரியும்? முதலில் கடவுளின் உற்பத்தி மார்க்கத்தையே அவர் விளக்கிக் காட்டினார். எப்படி? ஆதியில் மக்களி டையே ஒழுக்கம் கற்பிக்கப் புகுந்த பெரியார்கள் ஒழுக்கத் தின் பலனாக மோட்சத்தையும், ஒழுக்க ஈனத்தின் பயனாக நரகத்தையும் அடைவோம் என்று மக்களுக்குச் சொன்னார் கள். மோட்சமென்றால், அங்கு உழைக்காமலே உண்டு களித்து, ஊர்வசி, ரம்பை போன்ற அழகிய மங்கைகளைக் கூடிக்காலங் கழிக்கலாமென்றும், நரகத்திற்குச் செல்வோமா னால், நாம் இங்கு ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக அங்கு கொதிக்கும் எண்ணெய்யிலிட்டுப் பொரிக்கப்படுவோ மென்றும், செந்தணலின்மீது போட்டு எரிக்கப்படுவோமென் றும், கொடிய பாம்புகளும், விலங்குகளும் நம்மைக் கடித்துத் துன்புறுத்துமென்றும் கற்பனை செய்து காட்டினார்கள். மோட்ச இன்பத்திற்காகச் சிலர் ஒழுக்கமாக நடந்து கொண் டார்கள் என்றாலும், இயற்கை இச்சையின் காரணமாகச் சிலர் பிரத்தியட்ச இன்பத்தை விடமுடியாதவர்களாய், பிறர் காரணமின்றி ஒழுங்கீனமென்று கருதிவந்த காரியங்களில் தாராளமாக ஈடுபட்டனர். ஆனாலும், அவர்களுக்கு நரகத் திற்குப் போக நேர்ந்து விட்டால், என்ன செய்வதென்பது புரியவில்லை. அங்குள்ள கொடுமைகள் அவர்களை மேலும் பயமுறுத்தவே, அவர்கள் கோழைகளாகி அதி லிருந்து ஏதாவது தப்பித்துக் கொள்ள மார்க்க முண்டா என்று சிந்திக்க ஆரம்பித்தனர்.

அவர்களின் கோழைத்தனத்தை வாழ்க்கை வசதியாகச் செய்து கொள்ளலாம் என்று நினைத்த ஒரு கூட்டம், “அதற்கென்ன, கடவுளைத் தொழுதால் பாவமன்னிப்புப் பெறலாம். அவர் பாவிகளை மன்னித்து மோட்சத்திற்கு அனுப்பி வைப்பார்” என்று கூறியது. அவர்களும் எப்படி யாவது நரகத்திலிருந்து கடவுளை நம்பி அவரைத் தொழ ஆரம்பித்தனர். பாவிகளே எப்பொழுதும் அதிகமாதலால், அவர்களுக்கு மன்னிப்பு அளிக்கவும், கோழைத்தனம்தான் கடவுளின் உற்பத்திக்குக் காரணம் என்றும், கடவுளும், மோட்சமும், நரகமும் யாவும் கற்பனைதான் என்றும் விளக்கிக் கூறினார் பெரியார்.

பாழான சூனியம் 

நம்மைப் பாழ்படுத்த வேண்டுமா?

இதை அறிவுள்ள மக்கள் ஒப்புக்கொண்டு இவரைப் பின்பற்றினார்கள். அண்ட பிண்ட சராசரம் அத்தனையும் உற்பத்தி செய்த அக்கடவுள் இருக்குமிடம் எங்கென்று பார்த்தால், அவர் முப்பாழுக்கும் அப்பாலாய் இருப்பவர் என்று கூறப்படுகிறது. “அப்பால்தான் என்னப்பா இருக் கிறது?” என்று கேட்டால், “அதுவும் பாழடா” என்று தான் என்று கூறப்படுகிறது. வெறும் சூனிய வெளிதான் கடவுள் அதாவது “முப்பாழும் பாழாய் முடிவில் ஒரு சூனியமாய்” இருக்கும் என்று கூறப்படுகிறது. பாழான இந்தச் சூனிய வெளி ஏன் இப்படி நம்மைப் பாழாக்க வேண்டுமென்பதுதான் நமக்குப் புரியவில்லை!

(தொடரும்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *