சென்னை, மே.8- மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் முறைகேடு நடந் துள்ளதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து 12 வாரத்துக்குள் பரிசீலித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அற நிலையத்துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
முறைகேடு
சென்னை உயர்நீதிமன்றத்தில், திருத்தொண்டர் அறக்கட்டளை தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “சென்னை மயிலாப் பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் அறுபத்துமூவர், பிரம்மோற் சவம் திருவிழாக்கள் வெகு சிறப்பாக நடத்தப்படும். இந்த கோவில் வரவு-செலவு விவரங்களை இந்து சமய அறநிலையத் துறையின் தணிக்கைப் பிரிவு தணிக்கை செய்துள்ளது. அது குறித்து கொடுக்கப்பட்ட அறிக்கையில் கோவில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக தீவிர குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. இந்த முறைகேடு குறித்து விசாரித்து, விரைவாக நடவடிக்கைஎடுக்கும்படி அறநிலையத்துறை ஆணையரிடம் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் புகார் மனுக்கள் அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை” என்று கூறியிருந்தார்.
அதிகாரிகளின் கடமை
இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது “அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் மனுதாரர் கொடுத்த புகார் அறநிலையத் துறை ஆணையரின் பரிசீலனையில் உள்ளது. புகார் மீது பரிசிலனை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உத்தரவாதம் அளித்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் “கோவில் சொத்துகளை பாதுகாத்து, கோவிலை முறையாக நிர்வகிப்பது அதிகாரிகளின் கடமையாகும். அறநிலையத்துறை தணிக்கை குழு செய்த தணிக்கையில் கோவில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தீவிரமான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
அதன் மீது நடவடிக்கை எடுப்பது அறநிலையத்துறை ஆணையரின் கடமை. நடவடிக்கை எடுக்காமல், செயலற்ற தன்மை இருந்தால், அது சட்டப்பூர்வ கடமையை துறப்பதற்குச் சமமாகும்.
நடவடிக்கை
முறைகேடு தன்மை குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், மனுதாரர் கொடுத்துள்ள புகார் மனுமீது உரிய காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, 12 வாரத்துக்குள் மனுதாரரின் புகாரை பரிசீலித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த தகவலை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
