வெஸ்ட் பாம் பீச், மே 4- அமெரிக்காவில் மிக குறைந்த கட்டணச் சலுகைகள் மூலம் கடந்த 34 ஆண்டுகளாக சேவையாற்றி வந்த ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனமானது மஞ்சள் நிற விமானங்களை கொண்டு தினமும் நூற்றுக்கணக்கான விமானச் சேவைகளை இயக்கியது. சுமார் 17ஆயிரம் பேருக்கு நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்கியது. இந்நிலையில் ஈரான் போரின் காரணமாக விமான எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்ததால் இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டாவது முறையாக இந்த நிறுவனம் திவால் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேர்ந்தது.
இந்த நிறுவனத்தை அரசு ஏற்று நடத்தும் திட்டம் குறித்த ஒரு இறுதி முன்மொழிவை அரசு நிறுவனத்திடம் அளித்திருந்ததாகவும் ஆனால் அது தொடர்பான ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றும் அதிபர் டிரம்ப் கடந்தவாரம் அறிவித்து இருந்தார். இந்நிலையில் இந்த நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 34 ஆண்டுகளாக இந்த துறையில் எங்களது மிக குறைந்த கட்டண சேவை மாதிரி ஏற்படுத்திய தாக்கத்தை குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம்.
வாடிக்கையாளர்கள் தாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப பெறுவதற்கு எதிர்பார்க்கலாம். ஆனால் வேறு விமான நிறுவனங்களில் பயண முன்பதிவு செய்வதற்கு நிறுவனத்தால் எந்த உதவியும் செய்ய இயலாது. எங்களது செயல்பாடுகளை முறையாக முடித்துக்கொள்ளும் நடவடிக்கைகளை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தொடங்கியிருக்கிறோம்\” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரவு பகிர்வு அச்சம் – அமெரிக்காவின் சுகாதார ஒப்பந்தத்தை கானா நிராகரிப்பு

அக்ரா, மே 4- அமெரிக்கா மற்றும் கானா இடையே சுகாதார ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருந்தது. அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தில் இடம்பெற்று இருந்த சில சரத்துகள் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதுமின்றி கானா நாட்டின் மிக முக்கியமான சுகாதாரத் தரவுகளை அணுகுவதற்கு அமெரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் வகையில் அமைந்திருந்ததாக கானாவின் தரவு பாதுகாப்பு ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் அர்னால்ட் கவவார்புவோ தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த ஒப்பந்தத்தின் கீழ் கோரப்பட்ட தரவு அணுகலின் வரம்பானது வழக்கமாக தேவைப்படுவதை விட மிக அதிகமாகவே இருந்தது. உண்மையில் இது நாட்டின் சுகாதாரத் தரவு கட்டமைப்பை ஒரு வெளிநாட்டு அமைப்பிடம் ஒப்படைப்பதற்கு சமமாகும்.
சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள முன்மொழியப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ் அய்ந்து ஆண்டுகளில் கானா சுமார் 109 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை பெற்றிருக்கும்” என்றார். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா உடன் செய்ய இருந்த ஒப்பந்தத்தை கானா அரசு நிராகரித்துள்ளது. தற்போது புதிய ஒப்பந்தத்தை நாடி வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதிபர் மெர்ஸ் விமர்சனம் எதிரொலி
5000 வீரர்கள் திரும்பப் பெற முடிவு
5000 வீரர்கள் திரும்பப் பெற முடிவு
அமெரிக்கா அறிவிப்பு

வாசிங்டன், மே 4- நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளிலும், அமெரிக்காவின் நட்பு நாடுகளிலும் அமெரிக்க ராணுவ வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் ஜெர்மனியிலும் சுமார் 36ஆயிரம் அமெரிக்க வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஈரான் மீது இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்கா போரிட்டு வரும் நிலையில் அமெரிக்கா குறித்து ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஈரான் தலைமையால் அமெரிக்க அவமானப் படுத்தப்படுகின்றது என்று கூறியதோடு, வாஷிங்டனின் வியூகமின்மையையும் விமர்சிக்கும் வகையில் பேசியிருந்தார். இதனால் அதிருப்தி அடைந்த அதிபர் டிரம்ப் ஜெர்மனியில் இருந்து சில ராணுவ வீரர்கள் திரும்ப பெறப்படுவார்கள் என்று அச்சுறுத்தி இருந்தார். இதனை தொடர்ந்து இன்னும் 6 முதல் 12 மாதங்களில் ஜெர்மனியில் இருந்து 5000 வீரர்கள் திரும்பப் பெறப்படுவார்கள் என்று பென்டகன் நேற்று முன்தினம் அறிவித்தது. வெளியேற்றப்படும் வீரர்களின் எண்ணிக்கையானது மொத்தத்தில் 14 சதவீதமாக இருக்கும்.
