பொதுவாக, குருதி அழுத்தமானியில், குருதி அழுத்தம் பரிசோதிக்கும் போது, மேலே, கீழே முறையே 120/80 மி.மீ. எச்ஜி என்ற அளவில் குருதி அழுத்தம் இருக்க வேண்டும். இந்த அளவுகள் சிறிதளவு குறைவாக அல்லது அதிகமாக இருப்பது இயல்பானது தான். ஆனால் 140/90 மி.மீ. எச்ஜி அல்லது அதற்கு மேல் இருந்தால் அது உயர் குருதி அழுத்தமாக (Hypertension) கருதப்படுகிறது.
உயர் குருதி அழுத்தத்தை முறையாக கண்டுபிடித்து சிகிச்சை அளிக்காவிட்டால் குருதிக் குழாய்களின் எலாஸ்டிக் தன்மை குறைந்து, குருதிக்குழாய் சுவர் கடினமடைந்து குருதிக் குழாய்கள் சுருங்க ஆரம்பிக்கும். “பக்கவாதம்” ஏற்பட உயர் குருதி அழுத்தம் முக்கிய காரணமாக அமைந்துவிடும். உயர் குருதி அழுத்தத்தினால் சிறுநீரகங்கள் பாதிப்படைந்து ஒருகட்டத்தில் சிறுநீரகச் செயலிழப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது.
குருதி அழுத்தம் தடுப்பு முறைகள்:
உணவில் உப்பு, எண்ணெய், சர்க்கரை மூன்றையும் சரியான அளவில் எடுக்க வேண்டும். இவற்றை சற்றுக் குறைத்து எடுத்துக் கொண்டால் ஆயுள் அதிகரிக்கும்.
பதப்படுத்தப்பட்ட டின் உணவுகள், அப்பளம், ஊறுகாய், கருவாடு, இவைகளைத் தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி – நடைப்பயிற்சி, சைக்கிளிங், நீந்துதல், பேட்மிண்டன் போன்று ஏதாவதொரு உடற்பயிற்சியை தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வரை செய்வது நல்லது.
புகைப்பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும்.
மதுவின் அளவு குருதியில் அதிகரிக்கும் போது, குருதி ஓட்டமும், அழுத்தமும் அதிகரிக்கும். ஆகவே, குருதி அழுத்த மருத்துவப் பயனாளிகள் மதுவையும் தவிர்ப்பது நலம்.
மீன் எண்ணெயில் உள்ள ஒமேகா-3 அமிலம் உயர் குருதி அழுத்தத்தைக் குறைக்கும். ஆகவே மீனை குழம்பு வைத்து சாப்பிட வேண்டும்.
பொட்டாசியம் சத்து நிறைந்த இளநீர், வாழைப்பழம், பேரீச்சை, கொய்யாப்பழம்… இவை குருதி அழுத்தத்தைக் குறைக்கும்.
பன்னீர் திராட்சையை தோல் மற்றும் விதையுடன் ஜூஸாக குடிக்கலாம். திராட்சையின் தோல் மற்றும் விதைகளில் உள்ள “ரெஸ்வெராட்ரோல்” இதயத்திற்கு நல்லது.
கால்சியம் சத்து நிறைந்த பால், முட்டை வெண்கரு, கீரைகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த அவரை, பீன்ஸ், வாழைத்தண்டு, முட்டைக்கோஸ், வெண்டைக்காய் இவைகளை உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இரவு ஆறு முதல் ஏழு மணி நேரம் இடையூறின்றி தூங்க வேண்டும்.
